கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க. - கவிஞர் கலி.பூங்குன்றன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க. - கவிஞர் கலி.பூங்குன்றன்

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க.

– கவிஞர் கலி.பூங்குன்றன்

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாசிச கட்சி பிஜேபி. தோல்வி கண்ட மாநிலங்களிலும் கூட எப்படி ஆட்சி அமைத்தது? எல்லாம் குறுக்கு வழிகளாலும், வஞ்சகத்தாலும்தான். இவ்வளவுக்கும் தார்மீகத்தைக் குறித்து வாய்க்கிழியப் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

10 மாநிலங்களைத் தன்வசப்படுத்திய பா.ஜ.க.
– 8 ஆண்டுகளில் கடந்துவந்த பாதை

மகாராட்டிராவில் காங்கிரசும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதல் அமைச்சர் ஆனார். ஆளும் சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக இழுக்கப்பட்டனர். பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர், உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதனால், அவர் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியிலிருந்தும், முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலகினார்.

2016 – அருணாச்சல பிரதேசம்

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சல சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க வெறும் 11 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. அந்த நிலையில், காங்கிரஸ் முதலமைச்சர் நபம் துகிக்கு எதிராக அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில் 21 காங். சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜேபி பின்னணியில் போர்க்கொடி உயர்த்தினர். அதைத் தொடர்ந்து, 2015 டிசம்பரில் காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர் களுடன் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும் கைகோத்துக்கொண்டு காங்கிரஸ் முதலமைச்சர் நபம் துகிக்கு எதிராகப் போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினர். அதில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அரசு கவிழ்ந்ததாக அறிவித்தனர். மேலும், புதிய முதலமைச்சராக கலிகோ புல்லையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் முதலமைச்சர் நபம் துகி பதவி விலக மறுத்தார். இதனால் ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ் கோவாவுக்கும் (Jyoti Prasad Rajkhowa) முதல மைச்சர் நபம் துகிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த அசாதாரணமான அரசியல் சூழ்நிலையை அடுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற ஒன்றிய பா.ஜ.க அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் நபம் துகி அரசைக் கவிழ்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது. கலிகோ புல் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தனது தார்மிக ஆதரவை வழங்கிய பா.ஜ.க தனது 11 பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் 2016, பிப்ரவரி 19இல் கலிகோ புல்லை முதலமைச்சராக்கியது.

அதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நபம் துகி. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ராஜ்கோவாவைக் கண்டித்ததுடன், ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்றும், 2015 டிசம்பர் 15இல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை 13ஆம் தேதி நபம் துகி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த சில நாள்களிலே அவர் பதவி விலக, காங்கிரஸ் சார்பில் பீமா காண்டு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், முதலமைச்சர் பதவியை இழந்த மன வருத் தத்தில் இருந்த கலிகோ புல், கடிதம் எழுதிவைத்துவிட்டு அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, காங்கிரஸ் சார்பில் புதிதாக முதலமைச்சரான பீமா காண்டு, பா.ஜ.க பின்னணியில், 40 சட்டமன்ற உறுப்பினர் களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாச்சல் மக்கள் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தவர், அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் முழுவதுமாக பா.ஜ.க-வில் இணைந்தார். 2019இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்ற பீமா காண்டு தற்போது அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகத் தொடர்கிறார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல்,கடந்த 2020இல் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஏழு சட்டமன்ற உறுப்பினர்களில் ஆறு பேரையும் பா.ஜ.க தன்பக்கம் இழுத்துக்கொண்டது.

2017 – மணிப்பூர்

2017ஆம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மொத்த முள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க 21 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பெரும்பான்மை இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக் கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளில் வென்றிருந்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி, ஒரு தொகுதியில் வென்றிருந்த லோக் ஜனசக்தி மற்றும் சுயேச்சைகளை இழுத்து பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மேலும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்குமார் சிங்கையும் தன் பக்கம் இழுத்தது. பா.ஜ.க சார்பில் பிரேன் சிங் முதலமைச்சரானார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏழு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் அய்க்கியமாக்கப்பட்டனர். இந்த நிலையில், நடந்து முடிந்த 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., தனிப் பெரும்பான்மையுடன் தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது.

2017 – கோவா

2017ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் வென்றது காங்கிரஸ். அதேசமயம் பா.ஜ.க 13 இடங்களிலேயே வென்றிருந்தது. பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியிலிருந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தங்கள் வசம் கொண்டு வந்தது. மேலும், சில சிறு கட்சிகளின் சட்டமன்ற உறுப் பினர்களையும் இழுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக கோவாவில் தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. மேலும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்களில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கி அழகுபார்த்தது.
இதுமட்டுமல்லாமல், கோவாவின் மாநிலக் கட்சியான எம்.ஜி.பி-யின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில் இருவரையும் தங்கள் கூடாரத்துக்குள் சேர்த்துக்கொண்டது. தற்போது நடந்து முடிந்த 2022 கோவா சட்டமன்றத் தேர்தலில், 20 இடங்களில் வென்றிருக்கும் பா.ஜ.க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறது.

2017 – பீகார்

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், 80 இடங்களில் வென்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், 71 இடங்களில் வென்ற நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. நிதிஷ் குமார் முதலமைச்சராகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் 2017ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து 53 இடங்களில் வென்றிருந்த பா.ஜ.க., நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதலமைச்சரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2018 – மேகாலயா

2018ஆம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். அடுத்தபடி யாக, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால் பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, அய்க்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தந்திரமாக ஆட்சியைப் பிடித்தது பிஜேபி.

2019 – சிக்கிம்

2019ஆம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதேசமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர். மேலும், அதைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களில் 2 இடங்களை பா.ஜ.க-வே கைப்பற்றியது.

2019 – கருநாடகா

2018ஆம் ஆண்டு நடைபெற்ற கருநாடக சட்ட மன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதலமைச்சர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற் றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே காங் கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க. – அதாவது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அதையடுத்து, 16 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகினர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான் மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது – பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதலமைச்சரானார்.

2020 – மத்தியப் பிரதேசம்

2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நிலையில் கூட்டணிக் கட்சி களுடன் சேர்த்து மொத்தம் 121 சட்டமன்ற உறுப்பினர் களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதலமைச்சரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தங்கள் வசம் இழுத்தது.அதையடுத்து பா.ஜ.க-வின் ஆலோ சனைப்படி ஆறு அமைச்சர்கள் உள்பட 22 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சி யைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சரானார்.

2021 – புதுச்சேரி

2016இல் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங் கிரஸ் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாராயணசாமி முதலமைச்சரா னார். சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப் பினர்கள் மற்றும் மூன்று நியமன சட்டமன்ற உறுப் பினர்களின் ஆதரவுடன் கவிழ்த்தது பா.ஜ.க.

காஷ்மீர்

இதுதவிர, 2018இல் காஷ்மீர் மாநிலத்தின் சட்ட மன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்தும், காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கிவந்த 370 சட்டப்பிரிவை நீக்கி மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பிஜேபி ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத் துக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது. ஒற்றை சர்வாதிகாரம்தான் கோலோச்சும்!

No comments:

Post a Comment