இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 29, 2024

இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார்!

featured image

– மு.க.ஸ்டாலின் –

இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல-உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான். “பெரியார் உலகம்’ என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலமாகப் பெரியாருக்கு இணையான புகழை நம்முடைய ஆசிரியர் அவர்களும் நிச்சயமாகப் பெறுகிறார்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. பத்து வயதில் பெரியாரின் தொண்டராக இணைந்து, இந்த 90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி வருகிறார். அப்படித் தொண்டாற்றுகிற ஆசிரியரைப் பார்த்தால் எங் களுக்கெல்லாம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இத்தகைய சுறுசுறுப்புக்கும், உற்சாகத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டீர்களென்றால். அண்ணா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், 10 வயதிலேயே பகுத்தறிவுப் பால் அருந்தியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

அதனால்தான் இவ்வளவு சுறு சுறுப்பாக இருக்கிறார் என்று அண்ணா அவர்கள் அப்போதே சொல்லியிருக்கிறார். அதனால்தான் 90 வயதைத் தொடும்போது கூட அவர் உற்சாகமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.
வீரமணி என்றால் வெற்றி மணி’ என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான். இதை நான் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள்.

அத்தகைய திசைவழியே ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக்கும் பணியைத் திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளையும், உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிச்சயமாகச் செய்யும். இதுவே தந்தை பெரியாரின் 144 ஆம் பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக் கொள்ளக்கூடிய உறுதிமொழி!
அந்த உறுதிமொழியுடன் நம்முடைய கடமை ஆற்றுவோம்! உறுதிமொழி எடுக்க நான் கோட்டைக்குச் செல்கிறேன்.
(17.9.2022 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் அடிக்கல் நாட்டு விழாவில் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை).

No comments:

Post a Comment