புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

புதுவை: ‘‘பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடலில்'' தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 தந்தை பெரியார் அவர்கள் இல்லையென்றால், நாம் மனிதர்களாக இருக்க முடியாது; பெண் சமுதாயம் இந்த அளவிற்கு உரிமை பெற்றிருக்க முடியாது!

தனக்குப் பயன்பட்ட கொள்கை  அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படவேண்டும் என்கிற விரிவான எண்ணத்தினால்தான் நன்கொடைகளை அளிக்கிறார்கள்!

புதுச்சேரி, டிச.2 தந்தை பெரியார் அவர்கள் இல்லை யென்றால், நாம் மனிதர்களாக இருக்க முடியாது; பெண் சமுதாயம் இந்த அளவிற்கு உரிமை பெற்றிருக்க முடியாது. ஆகவே, இந்தக் கொள்கை வாழவேண்டும்; தனக்குப் பயன்பட்ட கொள்கை - உலகத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படவேண்டுமே - அடுத்த அடுத்த தலைமுறைக்கும் பயன்படவேண்டும் என்கிற விரிவான எண்ணத்தினால்தான் நன்கொடைகளை அளிக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பகுத்தறிவாளர் கழக 

மாநில கலந்துரையாடல்

கடந்த 19.11.2023 அன்று காலை புதுச்சேரியில் நடை பெற்ற பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை அமைப்புகளின் மாநில, மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

30.11.2023 அன்று ‘விடுதலை'யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:

80 ஆண்டுகளுக்கு முன்பே 

தந்தை பெரியார் சொன்னார்!

ஆனால், இப்பொழுது அந்த செல்போனைப் பயன் படுத்துகின்றவர்களுக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இப்படி சொன்னார் என்ற விஷயம் தெரியாது.

அப்படியெல்லாம் இன்றைக்கு சமூகத்தில் மாறுதல் வந்த பிறகும், இன்னும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.

சிலர் கேட்பார்கள், ‘‘என்னங்க, பகுத்தறிவுப் பற்றி இந்த அளவிற்குப் பேசுகிறீர்கள்; ஆனால், கோவில்களில் கூட்டம் குறைந்திருக்கிறதா? எத்தனை கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடக்கின்றன பார்த்தீர்களா?'' என்று.

ஓட்டு வாங்குகிறவர்கள் எல்லாம் கும்பாபிஷேகங்கள் நடத்துவோம் - நடத்துகிறோம் என்று சொல்லித்தானே ஓட்டுகளை வாங்க வேண்டி இருக்கிறது.. இதுவே கொச் சைத்தனமான அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறது என்று சொன்னால், அதனுடைய  அடிப்படை என்ன?

நாம் பிரச்சாரம் செய்யவேண்டும்!

என்னிடம் கேட்கிறார்கள், ‘‘உங்களுடைய பெரியார் கொள்கை தோற்றுவிட்டது என்றுதானே அர்த்தம்? கோவில்களில் இவ்வளவு கூட்டம் சேருகிறதே?'' என்று.

நோய் அதிகம் வருகிறது என்பதற்காக மருத்துவக் கல்லூரிகளை மூடிவிடலாமா?

நோயக் குணப்படுத்துவதற்குத்தான் டாக்டர்கள் இருக்கிறார்கள்; நோயை எதிர்த்துத்தான் மருத் துவமும், மருத்துவக் கல்லூரிகளும் இருக்கின்றன.  நோய் அதிகம் வருகிறது; ஆகவே, மருத்துவக் கல்லூரிகளை மூடிவிடலாமா?

புதிய புதிய நோய்கள் வருகின்றன; கோவிட் தொற்று ஒரு ரூபத்தில் வந்ததும், அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தவுடன், அதே வைரஸ் வேறொரு ரூபத்தில் வருகிறது. அதற்காக நாம் தோற்றுவிட்டோம் என்று மருத்துவத் துறையினர் நினைத்து, அவர்கள் முயற்சியை கைவிட்டு விட்டார்கள் என்றால் என்னாகும்?

இவ்வளவு மருத்துவ வசதிகள் இருந்தே, இந்நிலை என்றால், இல்லாவிட்டால் என்னாகும்?

மூடநம்பிக்கைகள் ஒழிப்புப் பிரச்சாரங்களை இந்த அளவிற்கு நாம் செய்யும்பொழுதே, இந்நிலை என்றால், நாம் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நாம் செய்வதுதான் மனிதநேயப் பணி!

ஆகவே, நாம் செய்வதுதான் மனிதநேயப் பணி - நாம் செய்வதுதான் வளர்ச்சிப் பணி- பகுத்தறிவாளர் கழகம் செய்வதுதான் மிகப்பெரிய அளவிற்கான அறி வியல் ரீதியான பணியாகும்.

தத்துவத்திற்காக நாம் பேசுகிறோம்; சமூகத்திற்காக நாம் பேசுகிறோம்.

கேள்விகளைக் கேட்பதுதான் பகுத்தறிவு!

‘‘கடவுளை மற'' என்று சொன்ன தந்தை பெரியார், அடுத்த வாக்கியமாக ‘‘மனிதனை நினை'' என்றார்.

மனிதனை நினை என்று ஏன் சொன்னார்?

ஒரு மனிதன் ஏன் கீழ்ஜாதி?

ஒரு மனிதன் ஏன் தொடக்கூடாத ஜாதி?

ஒரு மனிதன் ஏன் தொடக்கூடிய ஜாதி?

இந்த அவமானம் ஏன்?

ஒரு ஆண் ஏன் உயர்ந்தவன்?

ஒரு பெண் ஏன் தாழ்ந்தவள்?

ஏன் ஒரு சமூகத்தினர் அடிமை?

இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதுதான் பகுத் தறிவு. இந்தச் சிந்தனையை உருவாக்கியதால்தான், இன்றைக்கு சமத்துவம், இவ்வளவு பெரிய வாய்ப்புகள் வந்திருக்கின்றன.

ஆகவே, நாம் செய்கின்ற பணிக்கு இணையானது வேறு எதுவுமில்லை. அந்தப் பணியை நமக்காக நாம் செய்யவில்லை; சமூகத்திற்காக செய்கின்றோம். அந்தப் பணியில் நாம் வெற்றியடைகின்றோமா, தோல்வியடைவோமா என்பது வேறு.

தந்தை பெரியார் கடைசியாக ஒன்றைச் சொன்னார், ‘‘என்னுடைய கொள்கைகள் என்றைக்கும் தோற்காது; வேண்டுமானாலும், வெற்றி தாமதமாகலாமே தவிர, அது ஒரு போதும் தோற்காது'' என்று சொன்னார்.

திராவிடர் கழகத்திற்கும், பகுத்தறிவாளர் கழகத்திற்கும் 

என்ன வேறுபாடு?

அப்படிப்பட்ட பணியைத்தான் நாம் செய் கின்றோம். அந்தப் பணியைச் செய்யக்கூடியதில் பகுத்தறிவாளர் கழகம் மிக அற்புதமான ஒரு பிரிவு.  திராவிடர் கழகத்திற்கும், பகுத்தறிவாளர் கழகத் திற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

திராவிடர் கழகத்துக்காரர்கள் எல்லாம் கருப்புச் சட்டை அணிந்திருப்பார்கள்; பகுத்தறிவாளர் கழ கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்புச் சட்டை அணியவேண்டும் என்று கட்டாயம் இல்லை.

பகுத்தறிவாளர் கழகத்தினர் எல்லாம் 

திராவிடர் கழகத்துக்காரர்கள் அல்ல!

திராவிடர் கழகத்துக்காரர்கள் எல்லாம் பகுத்தறிவா ளர்கள் என்று சொன்னால், பகுத்தறிவாளர் கழகத்தினர் எல்லாம் திராவிடர் கழகத்துக்காரர்களா? என்றால், இல்லை. வேறு எந்தக் கட்சிகளில் வேண்டுமானாலும் இருப்பார்கள்; வேறு எந்த இயக்கத்தில் வேண்டு மானாலும் இருப்பார்கள்; எந்தக் கட்சியையும் சாராத வர்களாகவும் இருப்பார்கள்.

பகுத்தறிவினுடைய சிந்தனைப் பாய்ச்சல் என்பது பல ரூபத்தில் வரும். அதனால்தான் தமிழ்நாட்டில் நாம் அந்தப் பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருக் கின்றோம். உலகத்தில் வேறு எங்கும் இப்பணியைத் தொடர முடியவில்லை.

பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி 

54 ஆண்டுகள் ஆகின்றன!

ஆகவே நண்பர்களே, பகுத்தறிவாளர் கழகத்தை அய்யா அவர்கள் தொடங்கி, இன்றைக்கு 54 ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பே அவர் அந்தப் பணிகளைச் செய்தார் - அதுதான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக்கத்தினுடைய நூற்றாண்டும் வரப் போகிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயமரியாதை என்கிற வார்த்தையே யாருக்கும் தெரியாத நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் ‘சுயமரியாதை'ப்பற்றி சொன்னார்.

பள்ளிக்கூடத்திற்கே போகாத பெரியார், கல்லூரியி லேயே நுழையாத பெரியார்தான் இதனைச் சொன்னார்.

பெரியார் முன்னோக்கோடு பயணித்தார்!

இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற நாட்டில், இப்பொழுது தான் அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்கிறார்கள். பெரியார் எவ்வளவு முன்னோக்கோடு பயணித்தார் என்பதற்கு உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வந்த செய்தி. சைக்யாட்ரிட்ஸ் டாக்டர் மேக்ஸ்வெல் மால்ட்ஸ் என்பவர் எழுதிய‘‘The Search for Self-Respect'' புத்தகத்தில் அந்த வார்த்தையைப் பயன் படுத்தி இருக்கிறார்.

‘‘The Search for Self-Respect''- ‘‘சுயமரியாதையைத் தேடி!'' என்ற தலைப்பு.

பெரியாரைப் படித்திருந்தால், 

மிக எளிதாக இருந்திருக்கும்!

சுயமரியாதையைத் தேடவேண்டி இருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள ஒரு டாக்டர் எழுதுகிறார். அதனுடைய மேன்மையைப்பற்றி எழுதுகிறார். அவர், பெரியாரைப் படித்திருந்தால், அவருக்கு மிக எளிதாக இருந்திருக்கும். காரணம், மொழி பிரச்சினையால்தான். 

தந்தை பெரியார் சொல்கிறார், ‘‘சுயமரியாதை என்ற சொல் இருக்கிறதே, அது உலகத்திலுள்ள எத்தனை அகராதிகளையும் புரட்டிப் பார்த்துத் தேடினாலும், அந்த ஒரு சொல்லுக்கு இணையான சொல், வேறு எதுவும் கிடையாது'' என்று.

மக்கள் இயக்கமாக ஏன் மாறவில்லை?

அந்தப் பணியை மனிதர்களுக்காக செய்கிறோம். மற்ற இடங்களில் அந்தப் பணி ஏன் குறுகிய அளவிற்கு இருக்கிறது; ஏன் அது மக்கள் இயக்கமாக மாறவில்லை என்றால், அதை வெறும் ‘தியரி' போன்று வைத்துக் கொண்டார்கள்.

பெரியார் அவர்கள், பகுத்தறிவை ஆராய்ச்சிக்காக செய்யவில்லை; கடவுளையோ, மதத்தையோ ஆராய்ச் சிக்காக அவர் இல்லை என்று சொல்லவில்லை. சமூகத் தினுடைய சமத்துவத்திற்கு எது எது குறுக்கே நிற்கிறதோ - அதனுடைய தத்துவம் என்ன? என்றுதான் ஆராய்ந் தார். அது ‘புனிதம்' என்றனர் சிலர். அது எப்படி புனிதம்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்தார் தந்தை பெரியார்.

பகுத்தறிவாளர் கழகத்தினுடைய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்!

ஆகவே, பகுத்தறிவாளர் கழகத்தில் இருப்பதற்காக நாம் பெருமைப்படவேண்டும். பகுத்தறிவாளர் கழகத்தினுடைய அவசியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். மாணவர்களிடையே, இளைஞர் களிடையே எடுத்துச் சொல்லவேண்டும்.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!

அடுத்து நண்பர்களே, சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். சில மாற்றங்களை செய்யவேண்டும்.

மாற்றங்களை செய்ததோடுதான் இந்த அமைப்பு மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

இந்த அமைப்பில் பொறுப்பாளர்கள் என்றால், அது பதவி  கிடையாது. யார் மாவட்டத் தலைவராக இருக் கிறார் - அவருக்குத்தான் மாநிலங்களவை உறுப்பினர் - செயலாளருக்கு மக்களவை உறுப்பினர் என்று கொடுக்கப் போகிறோமா, என்றால் இல்லை!

வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு வியப்பு!

வடநாட்டில் இருந்து சென்னையில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டிற்கு வந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.  அந்த மாநாட்டில் நம்முடைய தோழர்களில் சிலர் என்னை சந்தித்து, நன்கொடைகளை கொடுத்தனர்; அப்பொழுது அவர்கள் வடநாட்டில் காலைத் தொட்டு வணங்குவதுபோன்று செய்யவில்லை. அதைப் பார்த்த வுடன், வடக்கே இருந்து வந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். பிறகு, ‘‘எவ்வளவு பணம் கொடுத்தார்கள் இங்கே வருவதற்கு?'' என்று அவர்களிடம் கேட்டார்கள்.

உடனே நம்முடைய தோழர்கள், ‘‘நாங்கள் பணத் திற்காக வரவில்லை. பணம் கொடுப்பதற்காக (நன் கொடை) நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம்'' என் றார்கள்.

இங்கே நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சொன்னார் பாருங்கள், அம்மா வேண்மாள் நன்னன் அவர்கள் நன்கொடை கொடுத்ததைப்பற்றி. நன்னன் அவர்கள் இருந்த காலத்தில் நன்கொடை கொடுத்தது ஒன்றும் அதிசய மில்லை. அதற்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் நன்கொடை கொடுப்பதற்கான முடிவிற்கு எதற்காக வருகிறார்கள்?

தனக்குப் பயன்பட்ட கொள்கை - உலகத்திலுள்ள அனைவருக்கும் பயன்படவேண்டும்!

தந்தை பெரியார் அவர்கள் இல்லையென்றால், நாம் மனிதர்களாக இருக்க முடியாது; பெண் சமுதாயம் இந்த அளவிற்கு உரிமை பெற்றிருக்க முடியாது. ஆகவே, இந்தக் கொள்கை வாழ வேண்டும்; தனக்குப் பயன்பட்ட கொள்கை - உலகத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படவேண் டுமே - அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்பட வேண்டும் என்கிற விரிவான எண்ணத்தினால்தான் நன்கொடைகளை அளிக்கிறார்கள்.

‘‘அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு - 

விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை!'' என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் எவ்வளவு அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட இயக்கத்தை எப்படி வளர்ப்பது?

பகுத்தறிவாளர் கழகத்தினருக்கு ஒரு வசதி!

ஒவ்வொருவருக்கும் அவரவர் தொழில் முக்கியம்; அந்தத் தொழிலை விட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லமாட்டோம். பகுத்தறிவாளர் கழகத்தினருக்கு ஒரு வசதி என்னவென்றால், போராடுவது, சிறைச் சாலைக்குப் போவது எல்லாம் திராவிடர் கழகத்துக் காரர்களுடையது. அதுபோன்ற பணிகள் உங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தால் போதும்.

அதற்கு என்ன செய்யவேண்டும் நீங்கள்?

‘விடுதலை'க்குச் சந்தா சேர்த்துக் கொடுக்கவேண்டும்; ‘விடுதலை'யைப் பரப்பினால் போதும்!

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்பெல்லாம் சிலரால் வர முடியாது. ஆனால், இன்றைக்கு அவர்களும் வருகிறார்கள். அமெரிக்காவில் இருக்கின்றவர் நன் கொடை கொடுக்கிறார், அதை வாங்குகிறோம்.

பெரியாருடைய பெருந்தொண்டினைப் பரப்பும் பணி என்பது காலத்திற்குக் காலம் மாறும்!

பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் சொன்னாரே, எந்தத் திட்டத்தையும் மூல தனத்தை வைத்து நாம் செய்யவில்லை. மூலதனத்திற்கு மேலே பணம் இருக்கிறது நம்மிடம் - அதுதான் பெரியார்! அதைவிட பெரிய மூலதனம் வேறு எதுவும் கிடையாது.

பெரியாருடைய பெருந்தொண்டினைப் பரப்பும் பணி என்பது காலத்திற்குக் காலம் மாறும். இன்றைக்கு ஒருவர் வருவார்; நாளைக்கு இன்னொருவர் வருவார்.

ஆகவேதான், பெரியார் என்கிற மூலதனம் - அதற்குரிய விளைவுகள் வரவேண்டும். மக்களுக்கு எப்பொழுது நம்பிக்கை வரும்?

நேர்மைதான் நமக்கு மிகவும் முக்கியம்!

கொடுக்கப்படும் பணம், எதற்காகக் கொடுக் கின்றார்களோ, அதற்குப் பயன்படும் என்கிற பொழுதுதான், கொடுக்கின்றவர்களுக்கு நம்பிக்கையும், மனநிறைவும் ஏற்படும். நேர்மைதான் நமக்கு மிகவும் முக்கியம்.

(தொடரும்)


No comments:

Post a Comment