சாது மிரண்டால்...? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

சாது மிரண்டால்...?

கேள்வி: முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல் வதில்லையே, ஏன்?
பதில்: சிறுபான்மையினர் கோபித்துக் கொள்வரோ என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையினரான ஹிந்துக்களின் ஓட்டுதான் இவரை பதவியில் உட்கார வைத்துள்ளது என்பதையும், அவர் மனதில் கொள்ளவேண்டும்.
‘தினமலர்’ வாரமலர், 26.11.2023, பக்கம் 10
நாம்கூட இப்படிக் கேட்கலாமே! கிருஷ்ண ஜெயந்திக்கு சங்கராச்சாரி வாழ்த்துக் கூறுவதில்லையே, ஏன்? ராம நவமிக்கும் சங்கராச்சாரியார் வாழ்த்துக் கூறுவதில்லையே, ஏன்?
அதேபோல, சிவராத்திரிக்கு ஜீயர்கள் வாழ்த்துச் சொல்வதில்லையே, ஏன்? என்ற கேள்வியைக் கேட்டால், முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?
ஹிந்துப் பண்டிகை களுக்கு முதலமைச்சரோ, உண்மையான திராவிட இயக்க – சுயமரியாதைக் கொள்கை உடையவர்கள் ஏன் வாழ்த்துக் கூறுவதில்லை, தெரியுமா?
ஹிந்து மதத்தின் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறினால், ஹிந்து மதப்படி பார்ப்பனரல்லாதார் தங்களைச் சூத்திரர்கள் என்று ஒப்புக்கொள்வதாக அர்த்தம்.
சூத்திரன் என்றால் யார்? நாங்கள் எழுதி வைத்ததில்லை. ஹிந்து மதத்தின் 18 ஸ்மிருதிகளில் மிக அதிமுக்கியமான மனுதர்மம் என்ன கூறுகிறது?
‘‘சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும். 1.யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன் 3.பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன். 4.விபசாரி மகன் 5.விலைக்கு வாங்கப்பட்டவன் 6.ஒருவனால் கொடுக்கப் பட்டவன் 7.தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8;
சுலோகம் 415).
‘தினமலர்’ திரிநூலே ஹிந்து என்று எங்களை ஒப்புக்கொண்டு, ஹிந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறவேண்டுமா? நாங்கள் விபசாரி மகன் ஆக வேண்டுமா?
‘பகவான் கிருஷ்ணன்’ கீதையில் என்ன சொல்லுகிறான்.
‘‘பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்.”
(கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32).
‘தினமலர்’ திரிநூல் கூட்டமே, ஹிந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறி, நாங்கள் எல்லாம் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்பதை ஏற்கவேண்டுமா?
எம் மக்களுக்கு இன்னும் போதுமான அளவுக்கு ரோஷம் வரவில்லை என்ற திமிரில் எழுத வேண்டாம்!
‘‘சாது மிரண்டால் காடு கொள்ளாது!”
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
– மயிலாடன்

No comments:

Post a Comment