ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தந்தை பெரியாரிடம் தாங்கள் கற்று கடைப்பிடித்து வருவதில் முக்கியமானது எது?

- கு.செல்வம், செங்கல்பட்டு

பதில் 1: பெரியார் தந்த புத்தியையே பயன்படுத்தி வருவது.

---

கேள்வி 2: தங்கள் பிறந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

- கே.கோபால், காஞ்சிபுரம்

பதில் 2: ஹிந்துத்துவ இந்தியாவை மீண்டும் உருவாக விடாமல், 'திராவிட இந்தியாவை' உருவாக்கி, "அனைவருக்கும் அனைத்தும்" என்ற சமூகநீதிக் கொடியை தலைதாழாமல் பறக்க விடுங்கள் என்பதே!

---

கேள்வி 3: தாங்கள் பிறந்த ஊரான கடலூரில், உங்களுக்குப் பிடித்தது எது?

- பா.முகிலன், வேலூர்

பதில் 3: ஜாதி, மதம், கட்சி வேறுபாடு பார்க்காமல் உறவுக்காரர்களாகப் பழகிய அந்த மனித உறவு - 'யாவரும் கேளிர்' என்ற மனிதநேய மனப்பாங்கு.

---

கேள்வி 4: ஜாதி முக்கியமா? மனிதநேயம் முக்கியமா?

- க.எழிலன், திருவேலங்காடு

பதில் 4: மனிதநேயம் மூச்சுக்காற்று. ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய துர்நாற்றம்!

---

கேள்வி 5: இன்றைய பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் சினிமா நடிகர்களுக்கு அடிமையாகி வருவதுபற்றி?

- மு.ரமேஷ், கன்னியாகுமரி

பதில் 5: வேதனையும், வெட்கமும், மிகுந்த வருத்தமும் அடைந்து நான் துன்பப்படும் பலவற்றில் இதுவே முதன்மை.

ஊடகங்கள் குறிப்பாக தொலைக் காட்சிகள் தான் இந்த போதையைப் பரப்பும் "ரேட்டிங் விலங்கு"கள்.

---

கேள்வி 6: உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்பதிலும் அரசியலா?

- இ.இளங்கோவன், வந்தவாசி

பதில் 6: அரசியல் தேவையில்லை. மனித நேயத்திற்கான கடமை உணர்வோடு கூடிய செயலாக்கத்தை யார் செய்தாலும் பாராட்டி வாழ்த்தி, நன்றி கூறுங்கள்!

---

கேள்வி 7:  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால், அந்தக் கோப்பையை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்ய திட்டமிட்டிருந்தது உண்மையா?

- கே.சுரேஷ், திருவண்ணாமலை

பதில் 7: நூற்றுக்கு நூறு உண்மை என்பது மறுக்கப்பட முடியாத உண்மை!

---

கேள்வி 8: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்குக்கு சிலை வைக்கப்படவில்லை; தமிழ்நாட்டில் மட்டும் வைப்பதற்குக் காரணம் என்ன?

- மு.வெற்றி, கள்ளக்குறிச்சி

பதில் 8: இது பெரியார் மண்; சமூகநீதி மண். நன்றி காட்டும் நல்லாட்சியான "திராவிட மாடல்" ஆட்சியை திராவிட நாயகன் நடத்தும் மண் என்பதால்!

---

கேள்வி 9: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் வட மாநிலங்களில் பிரச்சாரம் செய்யும் திட்டம் உண்டா?

- எ.ஏழுமலை, மும்பை

பதில் 9: தமிழ்நாட்டின் (புதுவை உள்பட) 40 தொகுதிகள் பிரச்சாரத்திற்கே நமது முன்னுரிமை! அங்கே பிரச்சாரம் செய்ய பலர் உள்ளார்கள். தேவைப்பட்டால் அங்கும் செல்லவும் தயங்க மாட்டோம்.


No comments:

Post a Comment