பதிலடிப் பக்கம் - த்ரவிட விஷயம் - காஞ்சி சங்கராச்சாரியர் என்ன சொல்லுகிறார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

பதிலடிப் பக்கம் - த்ரவிட விஷயம் - காஞ்சி சங்கராச்சாரியர் என்ன சொல்லுகிறார்?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தொகுப்பு: மின்சாரம்

ஆரியராவது - திராவிடராவது, எல்லாம் கட்டுக் கதை - எல்லாம் வெள்ளைக்காரன் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று பார்ப்பனர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர்.

ஒரு காலத்தில் இது அவர்களுக்கு வசதியாக இருந்தது - இப்பொழுது எதிர்ப்பதமாக ஆகிவிட்டது; அதனால் இப்படி எல்லாம் பேசவும், எழுதவும் ஆரம்பித்துள்ளனர் - ஆளுநர் ஆர்.நாராயண ரவி உட்பட.

சங்கராச்சாரியாரே திராவிடர் பற்றி எழுதி இருக் கிறாரே - பார்ப்பனர் பால கங்காதர திலகரே எழுதி யுள்ளாரே. பிரபல வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பரே ஆதாரத்துடன் அடித்துச் சொல்லியுள்ளாரே - இதோ பார்ப்போம்:

சங்கராச்சாரியார்

தமிழ் என்பதுதான் திராவிட (திராவிடம் என்பது) முதல் எழுத்தான ‘த' என்பது ‘த்ர' என்று இருக்கிறது. இப்படி ‘ர' காரம் சேருவதுச்மஸ்கிருத வழக்கு. மேலே சொன்ன சுலோகத்தில் வருகிற ‘தோடகர்' என்ற பேரைக்கூட ‘த்ரோடகர்' என்று சொல்லுகிற வழக்கம் இருக்கிறது. இதனால் சில பேர் ஸம்ஸ்க்ருதத்தையே ‘ரொம்ப' ஸம்ஸ்கிருதமாக்கி ‘தேகம்' என்பதைக்கூட ‘த்ரேகம்' என்று சொல்கிறார்கள்!

த-மி-ழ் என்பதில் 'த', 'த்ர' வாயிருக்கிறது. 'மி' என்பது 'வி' என்றாயிருக்கிறது. 'ம' வும் 'வ' வும் ஒன்றுக்கொன்று மாறுவதற்கு பிலாலஜிக்காரர்கள் (மொழி ஒப்பு இயல் நிபுணர்கள்) நிறைய உதாரணம் கொடுப்பார்கள். ஸம்ஸ்கிருதத்துக்குள்ளேயே இதில் ஒன்று மற்றதாகும். உதாரணமாக 'சாளக்ராவம்' என்பது தான் 'சாளக்ராமம்' என்றாயிருக்கிறது.

சம்ஸ்க்ருதத்தில் 'மண்டோதரி' என்பதைத் தமிழில் 'வண்டோதரி' என்கிறோம். 'த்ரவிட' என்பதையே 'த்ரமிட' என்றும் சொல்வதுண்டு. 'ல வும் 'ள' வும் மாறு வது சகஜம். மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்களில் போனால் 'வாளைப்பளத்தில் வளுக்கி விளுந்திடப் போறே' என்று சொல்வார்கள். 'ழ'வுக்கும் 'ள'வுக்கும் ரொம்பக் கிட்டத்தில் உள்ளது தான் 'ட'வும்.

வேதத்திலேயே 'அக்னிமீடே' என்று வருவது 'அக்னிமீளே' என்றும் மாறுகிறது. இப்படித்தான் 'தமிழ்' என்பதில் உள்ள 'ழ்' 'த்ரவிட்' என்பதன் 'ட்' ஆக இருக்கிறது. த - 'த்ர'வாகவும், மி - 'வி' யாகவும், ழ் - 'ட்' டாகவும் - மொத்தத்தில் 'தமிழ்' என்பது 'த்ரவிட்' என்றிருக்கிறது.

இப்போது எல்லாவற்றிலும் தமிழ் சம்பந்தம் காட்டினால் ஒரு ஸந்தோஷம் உண்டாவதால், த்ரவிடா சார்யாரைச் சொல்லும் போது அவருக்குத் தமிழ் சம்பந்தம் காட்டி நாமுந்தான் ஸந்தோஷப்படு வோமே என்று தோன்றிற்று; சொன்னேன்.

- “கல்கி", 9.4.2017

சங்கராச்சாரியார் விளக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும் - திராவிடம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளதை ஆர்.என்.ரவிகள் தெரிந்து கொள்ளட்டும்.

ரிக் வேதத்தில் திராவிட மொழி!

(ரொமீலா தாப்பர்)

பண்டைய இந்திய வரலாற்றை மறு வாசிப்புக்கு உட்படுத்திய இந்திய வரலாற்றாசிரியர்களில் முதன்மை யானவர் ரொமிலா தாப்பர். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர். ''ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா', 'அசோகா அண்டு தி டிக்ளைன் ஆஃப் தி மவுரியாஸ்' போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். அவருடனான பேட்டியின் சில முக்கியப் பகுதிகள் இங்கே!

உங்களுடைய சமீபத்திய புத்தகமான 'தி பாஸ்ட் ஆஸ் பிரசண்ட்-அய் வாசிக்கும்போது, வரலாற்று ஆய்வின் இன்றைய போக்கையும் இந்திய வரலாறு குறித்த வெகுஜனப் புரிதலையும் ஒருவிதமான வருத்தத்தோடு அவதானிப்பதாகத் தோன்றுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடம் கற்றுத்தரப்பட்ட விதமே வேறு. அப்போது வரலாற்றைப் புதிய பார்வையில் எழுதி யவர்கள் பல எதிர்ப்புகளைச் சந்தித்தோம். அந்தவகை யில் இன்று ஓரளவு” ஆரோக்கியமான மாற்றம் வந்துள் ளது. இருப்பினும், பொதுமக்களிடையே காலாவதியான வரலாறும் வரலாறே அல்லாதவையும்தான் இன்னமும் வரலாறாக இருக்கின்றன. கடந்த காலத் தகவல்களின் குவியல்தான் வரலாறு என இன்றும் பலர் நம்புகின்றனர். பலவிதமான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குறுக்குவிசாரணை செய்து, ஆதாரங்களின் நம்பகத் தன்மையைச் சோதித்து அதன் அடிப்படையில்தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். 'வரலாற்று முறைமை' என நாங்கள் அழைப்பது இதைத்தான்..

முறையான பயிற்சி இன்றி பொதுவான ஆர்வத்தில் வரலாற்றைத் தேடுபவர்களுக்கும், தர்க்கரீதியாக சமரச மின்றி வரலாற்றைப் புரிந்துகொள்ளும் வரலாற்றாசிரி யருக்கும் துல்லியமான வேறுபாடு உள்ளது என்கிறீர் கள் அல்லவா?

நிச்சயமாக - நான் சொன்னது எல்லா வரலாற் றுக்கும் பொருந்தும். அதிலும், பண்டைய இந்திய வரலாற்றில் இந்தச் சிக்கல் கூடுதலாகவே இருக்கிறது. ஒரு டஜன் பண்டைய இந்திய வரலாற்றுப் புத்தகங் களைப் படித்துவிட்டால் நீங்கள் நிபுணராகி விட முடியாது, அதன் மூலங்கள் மற்றும் அக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த மொழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மவுரியக் கல்வெட்டுகளை ஆராய பிராகிருதம் தெரிந்திருக்க வேண்டும். அதனு டன் தொடர்புடைய கவுடில்யரின் (சாணக்கியர்) அர்த்த சாஸ்திரத்தை வாசிக்க சம்ஸ்கிருதமும் சுற்றிருக்க வேண்டும். ஓரளவாவது தொல்லியல் தெரிந்திருக்க வேண்டும்.

தற்காலத் தொல்லியல் ஆய்வுகளில் அறிவியல் முறைகள் பல பின்பற்றப்படுகின்றன. இதனால் தொல் லியலை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அடுத்தபடியாக முழுமையாகப் வெறுமனே மொழி அறிவையும் தாண்டி மொழியியல் தெரிந்திருக்க வேண்டும். சம்ப காலமாகப் பெரிதும் விவாதிக்கப்படும் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்

நாங்கள் மாணவர்களாக இருந்தபோது ரிக் வேதத்தின் ஒரே மொழி இந்து ஆரிய மொழி. ஆனால், இன்றைய வேத ஆய்வாளர்களைக் கேட்டுப்பாருங் கள். ரிக் வேதத்தில் திராவிட மொழியும் உள்ளதென்று அவர்களில் பெரும்பாலோர். சொல்வார்கள். வரலாற் றாசிரியரின் பார்வையை இது புரட்டிப்போடுகிறதல் லவா? “ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசிய மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு நூல் இங்குள்ளது" என இனி எவரும் சொல்ல முடியாது.

நீங்கள் பேசுவதிலிருந்து கடந்த காலம் என்பது ஒற்றைத் தன்மை கொண்டதல்ல என்பது புரிகிறது. சாமானிய மக்கள் மனதில் சில தவறான, அபாயகரமான விஷயங்கள் புகுத்தப்பட்டுள்ளன. சில மதம் சார்ந்த நடவடிக்கைகளை, சில இன அடையாளங்களை, சில குழுக்களை ஒற்றைத் தன்மையிலேயே புரிந்துவைத்து உள்ளனர்...

பொதுமக்களிடையே பரப்பப்படுவதைப் பற்றி நான் இப்போதுவிளக்கப்போவதில்லை. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 'மத்திய ஆசியாவி லிருந்து ஈரான் வழியாக இந்தியா வந்தடைந்ததுதான் ஆரிய மொழி என்றுதான் நெடுங்காலமாகச் சொல்லப் பட்டது. ஆனால், 'ஆரிய மொழி பேசியவர்கள் இம் மண்ணின் மைந்தர்களே' எனும் கருத்து சமீபகால மாகப் பரப்பப்படுகிறது. சிலர் ஹரப்பா நாகரிகத்தைத் தோற்றுவித்ததே ஆரியர்கள்தான் என்கின்றனர். ஒட்டுமொத்தமாக ஆரியர் அல்லாத கூறுகளே இந்திய நாகரிகத்தில் இல்லை எனச் சொல்லத் தொடங்கி விட்டனர். பல காரணங்களுக்காக இதை நான் மறுக்கிறேன்.

புனிதப்படுத்துதல் என்பதாலா?

ஆம்! புனிதமான ஆரியவாதம். அதில் ஒரு மூலம் மட்டும் முன்னிறுத்தப்படுகிறது. பன்முகத் தன்மைகள் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன. மொழியியல் மற்றும் தொல்லியல் அடிப்படையில் இதை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். ஹரப்பா நாகரிகத்துக்குப் பின்தோன்றியதுதான் ரிக் வேதம் என்பதே எங்களு டைய வாதம். ஏனென்றால், ஓமனில் ஹரப்பா பண் பாட்டின் தடங்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கு மெசபடோமியாவோடும் தொடர்பு இருந்திருக்கிறது.

ஆனால், இத்தகைய கூறுகள் ரிக் வேதத்தில் பிரதிபலிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் ஹரப்பா கலாச்சாரம் அக்கம்பக்கத்தில் இருந்த பிற கலாச்சாரங்களோடு தொடர்பு கொண்ட தாகத் தெரியவருகிறது. ஆனால், ரிக் வேதமோ கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் தொடங்கி இறுதிவரையில்தான் தொகுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சாம்பல் நிறப் பானைக் கலாச்சாரம், கருப்பு மற்றும் சிவப்புப் பானைக் கலாச்சாரம், பெருங் கற்கள் கலாச்சாரம் எனப் பல விதமான கலாச்சாரங்கள் இருந்துள்ளன. இப்படிப் பலதரப்பட்ட கலாச்சாரச் சூழலில்தான் ஆரிய மொழி பேசிய மக்கள் இந்தியா வில் குடியேறினர்.

அதிலும் ஹரப்பா நகரங்களின் கலாச்சாரம் அதி நவீனமானது. அம்மக்களுக்கு எழுத்தறிவும் இருந்தது. மறுபுறம் எழுத்தறிவற்ற, நகர்ப்புற வாழ்க்கை முறை அறியாத, விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த ரிக் வேதச் சமூகம். இது போன்ற அடிப்படையான வேறு பாடுகளை யாரும் மறந்துவிட வேண்டாம்! 

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

நன்றி: ஃப்ரண்ட்லைன்

நன்றி: ‘தி ஹிந்து, 28.9.2015, பக். 7)

ரொமீலா தாப்பர் இந்தியாவில் நிபுணத்துவம் வாய்ந்த வரலாற்று ஆசிரியர். திராவிடர் - ஆரியர் பற்றிய இவரின் ஆய்வுக்கு ஆரியப் பார்ப்பனர்களின் பதில் என்ன?

ஆரியர்கள் குறித்து 

பாலகங்காதர திலகர்

பாலகங்காதர திலகர் பத்திரிகை ஆசிரியராக இருந் தவர், ஆரியர்கள் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை அவர் தனதுமராத்தா இதழில் எழுதியுள்ளார்

"இந்தக் கோட்பாட்டில், ஆரியர்கள் ஆர்டிக் வட துருவத்தை ஒட்டிய பகுதி(இன்றைய சைபிரியா பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று அவர் கூறினார். கி.மு. 8000 இல் ஏற்பட்ட பனிப் பிரளயத்தால் கடுமையான குளிர் நிலவியதால் அவர்கள் வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பனி யுகத்திற்கு முன்பு ஆரியர்கள் வட துருவத்திற்கு ஒட்டிய நிலப்பகுதிகளில் வாழ்ந்தனர் பனியுகம் துவங்கியதால் அவர்கள் (ஆரியர்களின்) இடம் பெயர்ந்து புதிய குடியேற்றங்களுக்கான நிலங்களைத் தேடி அய்ரோப்பா மற்றும் ஆசியாவின் வடக்குப் பகுதி களுக்கு இடம் பெயர வேண்டியிருந்தது."

எழுதியிருப்பவர் ஆர்.எஸ்.எஸின் முன்னோடி யான பாலகங்காதர திலகர்.

ஆரியர்களின் பூர்வாங்க வரலாற்றைப் படம் பிடித்துள்ளார்.

இவரையும் திராவிட இயக்கத்திலோ வெள்ளைக் காரர் பட்டியலிலோ சேர்க்கப் போகிறார்களோ!

ஊரையும் உலகத்தையும் வெகுநாள் ஏமாற்ற முடியாது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது நல்மொழி.

No comments:

Post a Comment