மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 8, 2023

மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடருங்கள்!

புதுடில்லி, நவ.8 அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடரலாம் என்று தீர்ப்பளித் துள்ளது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சக ராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் உத்தர வுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்பட சில சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இன்று (8.11.2023) அந்த வழக்கு நீதிபதிகள்  கோபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது.

அர்ச்சகர் நியமனம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக் குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

எதற்காக அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கேள்வியெழுப்பி, இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்களே ஆகம விதியைப் பின்பற்றும் கோவில்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து,  அர்ச்சகர் நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று தீர்ப்பளித்தனர்.

அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக வழக் குத் தொடர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால், சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழ்நாட்டில் கோவில்களை மாநில அரசு கைப்பற்றி வருவதாக பிரதமர் கூறி யுள்ளார் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக் கப்பட்டபொழுது, ‘‘தமிழ்நாட்டில் கோவில் களை மாநில அரசு கைப்பற்றி வருவதாகப் பிரதமர் கூறினால், அவரிடம் செல்லுங்கள்'' என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறி, வழக்கு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment