தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மசோதாக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு!

சென்னை, நவ.16 தமிழ்நாடு அரசு உச்சநீதிமன் றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

அவை பெரும்பாலும் பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட மசோதாக்கள்தான்.

உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சட்டமன் றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக் களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத் தடிப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயல் பாட்டைக் கண்டித்தது.

மசாதாக்களை ஆளுநர், நிலுவையில் வைத் திருப்பது மிகவும் கவலைக்குரியது என்றும், ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

மேலும், இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தாக்கீது அனுப்பவும் உத்தர விட்டது. அந்த தாக்கீதில், 'மக்களின் உரிமைகளை சிதைக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார்' என்ற தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதில ளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது அவருக்குப் பதிலாக சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.

இந்நிலையில், பல ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட் டுள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழ் நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் மசோதா மீண்டும் நிறைவேற்றியது போலவே, தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக வருகின்ற 18 ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பினால், அவற்றை கிடப்பில் போடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று அரசமைப்புச் சட்ட விதி கூறுகிறது.

No comments:

Post a Comment