பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

திராவிடர்-ஆரியர் என்று கற்பித்தது திராவிட இயக்கமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆரியராவது - திராவிடராவது - எல்லாம் வெள் ளைக்காரன் கட்டிவிட்ட கதை என்று பார்ப்பனர்கள் சொல்லி வந்தார்கள்.

"நாங்கள் ஆரியர்கள் - பிராமணோத்தமர்கள்!" என்று பூணூலை முறுக்கிக் காட்டிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு.

திராவிடர் இயக்கம் தோன்றிய பிறகு - தந்தை பெரியார் என்ற மகத்தான சமூகப் புரட்சித் தலைவரின் சகாப்தம் தோன்றிய நிலையில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தால் ஆரியம் தன் வாலைச் சுருட்டிக் கொண்டது. தம் பெயருக்குப் பின்னால் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி களை வெட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.

அந்த அளவுக்கு எழுச்சி ஏற்பட்ட நெருக்கடியில் ஆரியம் பம்முகிறது.

ஆரியராவது - திராவிடராவது என்று “கோரஸ்" பாட ஆரம்பித்து விட்டனர். இந்தப் பஜனைக் கூட்டத் தில், ஆர்.எஸ்.எஸில் பயிற்சிப் பெற்ற ஆளுநர் இரவி யும் சேர்ந்து கொண்டு விட்டார்.

ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் கிடையாது என்று பேச ஆரம்பித்துவிட்டார் - ஆம், அவரைப் பேச வைக்கும் நிலையை - தாக்கத்தை உண்டு பண்ணியது திராவிடம் இயக்கம்.

ஏதோ, ஆரியர், திராவிடர் என்பதை திராவிட இயக்கம் உருவாக்கியது போல உளற ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் உண்மை நிலை என்ன? வரலாறு என்ன பேசுகிறது?

உலகில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருப்பது போலவே இந்தியத் துணைக் கண்டத்திலும் பல இனங்கள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமான இனங்கள் ஆரியர்-திராவிடர் என்ப தாகும்.

திராவிட எனும் சொல்லைப் பரவலாக்கியவர் கால்டுவெல், மனுதர்ம சாத்திரத்திலே (கி.மு. முதல் நூற்றாண்டு) ஜாதி விலக்கம் செய்யப்பட்டவர்களை பற்றிச் சொல்ல வரும்போது 'திராவிட' என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது (மனுதர்ம சாஸ்திரம், 43,44) கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரில பட்டர் 'திராவிட பாஷா' என்று தமிழ் முதலாய மொழிகளைக் குறிப்பிட்டுள்ளார். (ச.அகத்தியலிங்கம் “திராவிட மொழிகள்", பக்கம் 22)

திராவிடர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள் (டி.ஆர். சேசையங்காரின் "திராவிட இந்தியா” மொழிபெயர்ப்பு முனைவர் க.ப.அறவாணன் பக்கம் 43) என்றும், ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும், அப்படிக் குடியேறியவர்களாகிய ஆரியர்களுக்கும், பூர்வீகக் குடிகளான திராவிடர்களுக்கும் இடையே பகை உணர்வுகள் இருந்தன என்றும் ஆரியர்களின் வேதநூல்களிலும் இராமாயணம் முதலியவற்றிலும் இது பிரதிபலிக்கின்றது என்பதற்கு எண்ணிடலங்கா ஆதாரங்கள் உள்ளன. 

அவற்றில் சில மட்டும் இங்கே:

* "தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லா தவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது".

ரோமேஷ் சந்திரதத் C.I.E.I.C.S,

"புராதன இந்தியா" (52-ஆம் பக்கம்.)

* "திராவிடர்கள் தங்கள்மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்தில் அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார் எம்.ஏ., "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்'' நூல் (பக்கம் 22)

 "ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை யெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவ தாகும்.

பி. சிதம்பரம் பிள்ளை, "திராவிடரும் ஆரியரும்" 

(24-ஆம் பக்கம்)

* ''ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் இடையே நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப் பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்."

ரோமேஷ் சந்திரதத் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரிகம்" 139-141ஆம் பக்கங்கள்).

* "தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்''.

"சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்' 'ராமாயணம்' (587-589ஆம்  பக்கங்கள்)

* "ஆரியன் என்கின்ற சொல் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட சொல்".

* "ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்) கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதா ருக்கும் இருந்துகொண்டிருந்த அடிப்படையான பகை மையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காண லாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்".

டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பிஎச்.டி., "இந்து நாகரிகம்" (69ஆம் பக்கம்.)

* "ராமாயணக் கதையின் உட்பொருள் என்ன வென்றால் ஆரிய நாகரிகத்திற்கும் ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன்- ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்'' என்று அதேநூலில் (பக். 141) கூறுகிறார்.

* "தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை."

சர்-ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியில் (பக்கம் 67இல்) குறிப்பிட்டுள்ளார்.

* ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரிய ரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தது.

இது பண்டர்காரின் கட்டுரைகள், (வால்யூம் 3, பக்கம் 10) கூறும் செய்தி.

* "தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்” என்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பிஎச்.டி., தனது "தென் இந்தியாவும் இந்திய கலையும்'' எனும் நூலில் (3ஆம் பக்கம்.)

*"திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்” என ஷோஷி சந்தர்தத் "இந்தியா அன்றும் இன்றும்" எனும் நூலில் குறிப்பிடுகிறார் (15ஆம் பக்கம்)

'ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரி களாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்".

'ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழு தினார்கள்" என சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ, ஆகிய வரலாற்றாசிரி யர்கள் "இந்திய வரலாறு முதல் பகுதி" என்னும் நூலில் "இந்து இந்தியா” என்னும் தலைப்பில் (16, 17ஆம் பக்கங்கள்) எழுதியுள்ளனர்.

'ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்" என்கிறார் எச்.ஜி. வெல்ஸ்.

எச்.ஜி. வெல்சின் "உலகத்தின் சிறிய வரலாறு' என்னும் நூல் (105ஆம் பக்கம்)

* "சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் இஷ்டம்போல் எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதிவைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவையாகும்".

*  “விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத் தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப் பட்டது”.

(ஈ.பி. ஹாவெல் 1918இல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் வரலாறு” 32ஆம் பக்கம்.)

* "பாரத - ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப் தெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியே யாகும்” என்கிறார் ஜி.எச்.ராபின்சன் "இந்தியா” 155ஆம் பக்கம்).

“வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை” என்று தமிழ்ப் பேராசிரியர் கே. என். சிவராஜ பிள்ளை பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு” (4ஆம் பக்கம்) நூலில் ஆரியர்களால் திராவிடர்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கூறுகிறார்.

“பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்" என்று கடுமையாகவே, நாகேந்திரநாத்கோஷின் "இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்" (194ஆம் பக்கம்.) எனும் நூலில் காண்கிறோம்.

இவ்வளவு கருத்துகளையும் தந்தை பெரியார் அவர்கள், “ஆரியர் - திராவிடர்” எனும் நூலில் இவ்விதம் தொகுத்துக் கூறியுள்ளார். ஆரியர்களின் பூர்விகம் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

* ஆரியர்கள் காஸ்பியன் கடலுக்குப் பக்கத்தி லுள்ள வடமேற்குப் பிரதேசங்களிலிருந்து இந்தியாவில் புகுந்ததாகப் பெரும்பாலான பண்டிதர்கள் கூறு கிறார்கள். இதை பால கங்காதர திலகர் வடதுருவப் பிரதேசமான ஆர்க்டிக் மகா சமுத்திரத்தை அடுத்த ஒரு நாட்டிலிருந்து ஆரியர்கள் அய்ரோப்பா முழுவதும் பரவி கடைசியில் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறுகிறார். 

ஆரியர்கள் எங்கிருந்து வந்தாலும் சரி, அவர்கள் இந்தியாவுக்கு வந்து பூர்வகுடிகளைக் கொடுமைப் படுத்தி அடிமைகொண்டுவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை. சுதந்திரமிழந்த ஆதி இந்தியர்கள் ஆரியர் களுக்கு அடிமைகளாக இருந்திட விரும்பவில்லை. எனவே அவர்கள் காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் குடி புகுந்து வாழத் தொடங்கினர். அவ்வாறு சென்றவர் களுக்கு ஆரியர்கள் ராட்சஸர் என்று பெயர் சூட்டினர் என்பதே வரலாறு கூறும் உண்மை.

குடிபுகுந்த ஆரியர்கள் பூர்வ குடிகளைவிட அழகிய வெள்ளை நிறமுடையவர்களாயிருந்தார்கள். எனவே வெள்ளை நிறமுடைய ஆரியர், மாநிறமான கறுப்பர்களான ஆதி இந்தியர்களைவிட உயர்ந்த வர்கள் என எண்ணம் ஏற்பட்டது.

அன்று முதற்கொண்டே வர்ண பேதக்கொடுமை ஆரம்பமாயிற்று. வர்ண பேதக்கொடுமையினால் இந்தியாவைப் போல் துயரப்படும் நாடு உலகத்திலேயே வேறு இல்லை என்றே சொல்லலாம்.

ஆரியர்கள் ஆதி இந்தியர்களைச் சந்தித்த போதே அவர்களுக்குக் “கறுப்பர்கள்” என்ற இழிபெயரைச் சூட்டினர். போர்க் கடவுளான இந்திரனை ஒரு ஆரிய வீரனாகப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

ஆரியர் சட்டத்துக்குக் கீழ்ப்படியாதவர்களைக் கண்டித்துக் கறுப்பர்களை மனுவுக்கு அடிமைப்படுத்தி, மற்றும் நூற்றுக்கணக்கான உதவிகள் புரிந்து இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றினான் (ரிக் வேதம், முதல் மண்டலம், 30 ஆவது மந்திரம், 8ஆவது ஸ்லோகம்) என ரிக்வேதம் கூறுகிறது.

ஆரியர்களுக்கும், ஆதி இந்தியர்களுக்கும் நடை பெற்ற போரைப் பற்றியும், ஆரியர் செய்த பற்பல கொடுமைகளைப் பற்றியும், வேதங்களில் பல குறிப்பு கள் காணப்படுகின்றன. வெள்ளை ஆரியர்கள் கறுப் புப் பூர்வ குடிகளை எவ்வளவு குரூரமாக இம்சித்தார்கள் என்பதை அறிய ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளை நாளை காண்போம்.

(தொடரும்)


No comments:

Post a Comment