தஞ்சை திணறட்டும்! தமிழர்கள் விழிக்கட்டும்!! - மின்சாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

தஞ்சை திணறட்டும்! தமிழர்கள் விழிக்கட்டும்!! - மின்சாரம்

இது திராவிட இயக்கத்தின் வெற்றி விழா - திராவிடர் இயக்கத் தீரர்களின் நூற்றாண்டு விழா சகாப்தம்!

வைக்கம் நூற்றாண்டு விழா!  சேரன் மாதேவி குலகுலத்தில் நடந்த வகுப்பு வாதத்தை வீழ்த்தி வெற்றி கண்ட நூற்றாண்டு விழா!

முத்தமிழ் அறிஞர் மானமிகு சுயமரியா தைக்காரரான கலைஞர்  அவர்களின் நூற்றாண்டு விழா - திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழைய கோட்டை அர்ச்சுனன் நூற்றாண்டு விழா - திராவிடர் இயக்கப் போர்க்கள வீரர் ஏ.வி.பி. ஆசைத் தம்பியின் நூற்றாண்டு விழா - "சுயமரி யாதைச் சுடரொளி" சிவகங்கை வழக் குரைஞர் மானமிகு இரா. சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா - சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்று சர். ஜான் ஹுபர்ட் மார்ஷல் அவர் களால் தொல் பொருள் ஆய்வு செய்யப் பட்டு உலகுக்கு அறிவித்த வரலாற்றின் நூற்றாண்டு என்று பெருமிதப்படக் கூடிய வரலாற்று அடர்த்தி நிறைந்த கால கட்டம் இது.

இந்த நூற்றாண்டு விழாக்களை எல்லாம் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் தட்டாமல் நடத்தி, தரணிக்குத் தகத்தகாயக் கல்வெட்டாகப் பொறித்து வருகிறது.

நாளை மறுநாள் 6.10.2023 மாலை திராவிட இயக்கக் கோட்டமாம் தஞ்சை யிலே இரு பெரும் விழாக்கள் கழகத்தின் சார்பில்!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நூற்றாண்டு விழா - சமூக நீதிக்கான சரித்திர நாயகர் "திராவிட மாடல்" அரசின் தளகர்த்தர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாக்களைத் தாய்க் கழகத்தின் தலைவர் தகைசால் தமிழர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையிலே நடைபெற விருக்கிறது.

மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று சங்கநாதம் செய்ய இருக்கிறார்.

எத்தனை எத்தனையோ விழாக்களைத் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் இதே தஞ்சையிலே நடத்தி சாகா சரித்திரம் படைத்திருக்கிறது.

தஞ்சை புதுப்பேருந்து நிலையம் அருகில் மாண்புமிகு முதலமைச்சரால் அண்மையில் திறக்கப்பட்ட மாநகராட்சி மாநாட்டு அரங்கில் முதல் நிகழ்ச்சியாகக் காலடி பதிக்க உள்ளது.

17ஆண்டுகளுக்கு முன் பயணிப் போமா? இதே தஞ்சை திலகர் திடலில் முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களுக்கு ஒரு பெரும் விழா (12.6.2006)

எதற்குத் தெரியுமா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றிய மைக்காக!

அந்தச் சட்டத்தின் வேரினில் செயல் பாட்டுக்கு வந்து பழுத்த பலாவாகியிருக் கிறது.

யாருடைய ஆட்சியில்? 

இந்தத் திராவிட மாடல் ஆட்சியில் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில் - அந்த ஆளுமைக்கான நாயகருக்குப் பாராட்டு விழாவும் இணைந்தே நடக்கிறது.

'ஆதிக்கப் புரியாக ஆகாய உயரத்திற்கு அனைத்திலும் நிமிர்ந்த அத்தனை ஏகபோகங்களையும் பிறப்பின் அடிப்படையில் அனுபவித்த எங்களைச் சாய்த்தது ஈரோட்டுப் பூகம்பம்.

எஞ்சியிருந்தது கோயில் கர்ப்பக்கிரகம்! அந்தக் கோயிலைக் கட்டுவதற்கு ஒரு செங்கல்லை நாங்கள் எடுத்துக் கொடுக்க வில்லை - சிமெண்ட் குழைத்துக் கொடுத்த தில்லை - ஒரு தட்டு மண்ணையும் சுமந்த தில்லை!

ஏன் கர்ப்பக்கிரகத்துக்குள் வடிக்கப் பட்டுள்ள அந்தக் கடவுளர் சிலைகளைக் கூட நாங்கள் வடித்ததில்லை.

எல்லாம் முடிந்த பிறகு 'ஜீரணத் தோரண பூர்ண கும்பாபிஷேகம்' என்று கூறி கோபுர உச்சிக்கு ஏறி (அதற்குச் சாரம் அமைத்ததுகூட நாங்கள் இல்லை) ஜலத் தையும் பாலையும், சகலப் பொருள் களையும் கொண்டு (அவற்றை எல்லாம் கூட நாங்கள் கொண்டு வரவில்லை) எங்கள் தாய்மொழியில் எதையோ மந்திரம் சொல்லி, அபிஷேகம் செய்த அந்த நொடி முதல் கோயிலின் சகலமும் எங்களுக்குத் தான் என்று எத்தனை நூறு ஆண்டு காலமாக அனுபவித்து வந்தோம்.' 

'ஆகமம் என்று கூறி நாங்கள் எழுதித் தள்ளினோம் - அதன்படி எங்களத்த வர்கள்தான் அர்ச்சகராக வர வேண்டும் என்று கூறி அரசர்களையும் மண்டியிடச் செய்தோம்!'

"அட பாவிகளா" அதிலும் கை வைத்து விட்டீர்களே! 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் என்று தந்தை யார் செய் தால், அதனை உருப்படுத்தி விட்டாரே அவரின் அருமை மகன் - பெண்களையும் ஓதுவார் ஆக்கி விட்டாரே!' என்று ஆற்றாமையோடு அலறுகிறது ஆரியம்!

நேரடியாக உச்சநீதிமன்றம் சென்று ஆனதை எல்லாம் பார்க்கிறார்கள்.

ஆனாலும் காரியம் நடைபெற்று விட்டது.

ஆரிய ஆகமக் கூற்றுப்படி கர்ப்பக் கிரகம் தீட்டுப்பட்டது பட்டதுதான்.

ஓர் உண்மையை அறிவு நாணய முள்ளவர்கள் உணருவார்களா? 'கடவு ளுக்கு முன் அனைவரும் சமம்! கடவுள் தான் எல்லோரையும் படைத்தார் என்று சொல்லி விட்டு, குறிப்பிட்டவர்கள் தான் கடவுள் சிலையைத் தொடலாம் - குளிப் பாட்டலாம் - அர்ச்சனை செய்யலாம் என்று சொல்லுவது கடவுளையே அவமதிப்பதாகாதா? என்ற கேள்வியை எழுப்பத்தான் செய்வார்கள்.

அறிஞர் அண்ணா குறுகிய காலம்தான் முதல் அமைச்சராக இருந்தார்.

1) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்

2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல்.

3) ஹிந்திக்குத் தமிழ் நாட்டில் இடமில்லை; தமிழும் ஆங்கிலமும் தான் இங்கே என்று சட்டமே செய்தார்.

இந்த அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை என்றார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் முத்தாய்ப்புகளோ கொஞ்ச நஞ்சமல்ல!

பெரியார்தான் தமிழ்நாடு அரசு - தமிழ்நாடுதான் பெரியார் அரசு என்றார். இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களால் ஆளப்படும் அரசு என்று சுயமரியாதை சூரிய வெப்பத்தை வெளிப்படுத்தினர். சட்டமன்றத்திலேயே!

பெரியார் நினைவு சமத்துவபுரம் கண்டார். பெண்கள் உரிமைக்கான, வாழ்வு மலர்ச்சிக்கான அடுக்கடுக்கான சட்டங்கள் திட்டங்கள். 

"மகளிர் உரிமை ஆட்சிமாண்பாளர்!" என்ற விருதை வழங்கி உச்சி மோந்தது தாய்க் கழகமாம் திராவிடர் கழகம்.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை - எங்கள் தந்தைக்கு - அய்யாவுக்கு அரசு மரியாதை செய்தே தீருவோம் என்று ஒற்றைக்காலில் நின்று நடத்திக் காட்டிய நாயகர் நம் கலைஞர்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்கிறது.

ஒரு நல்ல அரசை "வெல்ஃபேர் ஸ்டேட்" என்பார்கள். அந்த இலக்கணத் துக்கு இலக்கியம் ஆனார் நம் முதலமைச்சர் - அப்பப்பா! எத்தனை எத்தனை சாதனை மலைகள்! அனைத்து மகளிருக்கும் பேருந்தில் இலவச பயணம்.

பொருளாதார நட்டக் கணக்கைப் பார்க்கவில்லை. பொருள் உள்ள  கடமையைச் செய்தோம் என்று பூரிக்கிறார்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்லூரி செல்லும் மாணவிகளுக்குப்  "புதுமைப் பெண் திட்டம்".

தந்தை பெரியார் பிறந்த செம்டம்பர் 17 - சமூக நீதி நாள் உறுதி மொழி, ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் - சமத்துவ நாள் அடுக்கிக் கொண்டே போகலாம்!

இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி ஸ்டாலின் அவர்களை அடையாளம் காட்டினார் நமது ஆசிரியர் அவர்கள்.

"தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர். விதையாகி முளைத்து பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி பழுத்து இருப்பவர். பணிதான் தனக்கு முக்கியமே தவிர, பதவியல்ல என்றே கருதி உழைத்து, திராவிடர் இயக்கத்தை இன எதிரிகளிட மிருந்து காப்பாற்ற தலைவருக்குத் தோள் கொடுத்து கடமையாற்றும் ஒரு கட்டுப்பாடு மிளிரும் சிப்பாய்!

அவருடைய கண்ணியமிக்க அணுகு முறைகள் அவரது கழகத்தைப் பாசறையாக் கும் கண் துஞ்சாப் பணி அவரை தலை வரால் அடையாளம் காணச் செய்துள்ளது.

இளைஞர் அணிப் பொறுப்பில் இருந்தார். அவரும் 60 வயதை அடையும் இளைஞர் இன்று என்பதையும் மறந்துவிட முடியாது. அவரின் முதிர்வுக்கும் அதுவும் ஓர் அடையாளம்!

"எல்லோர் எதிர்ப்பார்ப்பையும் விஞ்சி செயலாற்றி நிரூபிப்பார் - என்பதில் அய்யமில்லை" - என்று இன்றைக்குப் பத்து ஆண்டுகளுக்கும் முன்பே ('விடுதலை' 8.1.2013) கணித்தவர் நமது தலைவர் தமிழ் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

எவ்வளவு தொலைநோக்கு! ஒவ்வோர் எழுத்தும், சொல்லும் அப்படியே பலித்து விட்டதே! பணியால் உலகளந்து பாமர மக்களின் நெஞ்சமெல்லாம் பாச மலராய் மலர்ந்து மணம் வீசுகிறாரே!

அவரை உற்சாகப்படுத்த வேண்டாமா? மக்களின் ஆதரவு அலைகள் எழுந்து நிற்கிறது என்று காட்ட வேண்டாமா?

நன்றி மறப்பது நன்றன்று என்று நானிலத்திற்கு நவில வேண்டாமா?

வாருங்கள் தோழர்காள்! வங்கக் கடல் பெருக்கெடுத்ததோ என்று வியக்கும் வண்ணம் தஞ்சை வாரீர்! வாரீர்!!

கருஞ்சட்டை வீரர்கள் தி.மு.க. தோழர் களுடன் பெரு மக்களுடன் பம்பரமாய் சுழன்று சுழன்று விழாப் பணிகளை வியக்கத் தக்கவகையில் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊனும், உறக்கமுமின்றி உழைத்து வருகின்றார்கள். அவர்கள் எதிர்பார்ப்ப தெல்லாம் தஞ்சை விழா தரணி மெச்சும் விழாவாக அமைய வேண்டும் - மக்கள் கடலில் தஞ்சை மிதக்க வேண்டும் என்பதுதான். 'திராவிட மாடல்' அரசு என்பதன் அர்த்தம். இப்பொழுது இந்தியத் துணைக் கண்டத்திற்கே புரிந்து விட்டது. ஆம், இந்தியாவே திராவிடத் தத்துவத்தின் விளைச்சல் பூமியாகும் கால கட்டம் - 'இண்டியா'வின் அடிநாதமாகப் போகிறது.

வாருங்கள் தஞ்சைக்கு, வாழ்த்தி மகிழ்வோம்! மகிழ்வோம்!! 

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!!


நாங்கள் பெரியாரின் தொண்டர்கள்..! 

அண்ணாவின் தம்பிகள் !

எங்கள் கால்கள் நடையை நிறுத்தாது: 

நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்! 

எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தாது: 

நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம் !

எங்கள் உதடுகளும், நாவுகளும் பேசுவதை நிறுத்தாது: 

நாங்கள் பேசிக் கொண்டே இருப்போம்: ஏனெனில் 

நாங்கள் ஆழமான கொள்கைக்குச் சொந்தக் காரர்கள்! 

நாங்கள் பெரியாரின் தொண்டர்கள் ! அண்ணாவின் தம்பிகள் !

- டாக்டர் கலைஞர் 

(23.07.1980 இளைஞர் அணி தொடக்க விழா, மதுரை]


திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல.

ஸநாதனத்தைக் காலாவதி ஆக்கியது திராவிடம்! 

வர்ணாசிரமத்தைக் காலாவதி ஆக்கியது திராவிடம்! 

மனுநீதியைக் காலாவதி ஆக்குவது திராவிடம்! 

ஜாதியின் பேரால் இழிவு செய்வதைக் காலாவதி ஆக்குவது திராவிடம்! 

பெண் என்பதால் புறகணிக்கப்படுவதைக் காலாவதி ஆக்குவது திராவிடம்! 

எத்தகைய அந்நிய படையெடுப்புகளாக இருந்தாலும், ஆரியப் படையெடுப்புகளாக இருந்தாலும் அதை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம்.

- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்


 


No comments:

Post a Comment