இனி எனது குரல் இந்தியாவின் குரலாக ஒலிக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

இனி எனது குரல் இந்தியாவின் குரலாக ஒலிக்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை, செப்.5 பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம்; இனி எனது குரல் இந்தியாவின் குரலாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம், இந்தி யாவை மீட்டெடுப்போம்' என்ற தலைப்பில் 'ஸ்பீக்கிங் பார் இந்தியா' முதல் குரல் பதிவை (ஆடியோ) நேற்று (4.9.2023) வெளியிட்டார். 

அதில் அவர் பேசியிருப்பதாவது:- 

இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பா.ஜ.க., தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 2023 ஆம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைப் பற்றி எரிய வைத்திருக்கிறது. அரியானாவில் மூட்டிவிடப்பட்ட மதவெறித் தீ, இன்றைக்கு அப்பாவி மக்களின் உயிரையும், சொத்து களையும் காவு வாங்குகிறது. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. 

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மக்களாட்சி மாண்புக்கு எப்போதெல் லாம் ஆபத்து வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் முன்னணிப் படையாக தி.மு.க. நின்றிருக்கிறது. ''தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவிற்காகப் பேசும் கட்சியாக நமது இயக்கம் இயங்க வேண்டும்'' என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆட்சி மாற்றங்களையே உருவாக்கிக் காட்டி இருக்கிறார், கலைஞர். பிரதமர், குடியரசுத் தலைவர்களை உரு வாக்கிய இயக்கம் தி.மு.க. இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.

9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்...

2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படு பாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்து விட்டது ஜி.எஸ்.டி. இதனால், தமிழ்நாட்டிற்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம். 

2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி ரூ.5 லட்சத்து 16 ஆயிரம் கோடி. ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் கோடிதான். ஆனால் பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலம் ரூ.2 லட்சத்து 24 ஆயிரம் கோடிதான் வரியாக கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப் பகிர்வாக ரூ.9 லட்சத்து 4 ஆயிரம் கோடி பெற்றிருக்கிறது. இதைத் தான் ஓரவஞ்சனை என்று சொல்கிறோம். இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது.

ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பை சந்தித்து வருகிறது. 12 ஆவது நிதிக்குழுவில் 5.305 விழுக்காடாக இருந்த நிதி ஒதுக்கீடு, 15 ஆவது நிதிக் குழுவில் 4.079 விழுக்காடாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ரூ.72 ஆயிரத்து 311 கோடி நாம் இழந்திருக்கிறோம்.

'இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும்

பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் ஒன்றிய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 ஆண்டுகளில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு இருக்கிறது. மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப் பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.

பா.ஜ.க.வின் வகுப்புவாத, வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும், அரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்றால், 'இந்தியா' கூட்டணி வெல்ல வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம். இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம். இனி இது மு.க.ஸ்டாலின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள். வெல்க இந்தியா. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் பதிவு ஒலிக்கும் வேளையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரான காட்சி அமைப்புகள் காட்சிப் பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment