ஜாதி ஒழிப்பா? ஜாதி வேறுபாடு ஒழிப்பா? - புனித பாண்டியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

ஜாதி ஒழிப்பா? ஜாதி வேறுபாடு ஒழிப்பா? - புனித பாண்டியன்

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு வலைதளங்களில் எதிர் வினையாற்றிய பலரும் பள்ளிக்கூடப் பையில் இருக்கும் அரிவாளுடன் ரத்தம் சொட்டுகின்ற ஓர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தனர். பாடநூல்களுக்கு இடையே வெளிப்பட்ட அந்தக் கூரிய அரிவாள் தீண்டாமையின் குறியீடு எனில், அதற்கு அடித்தளமிடும் ‘ஜாதி ஒரு பாவச்செயல்; ஜாதி ஒரு பெருங்குற்றம்; ஜாதி மனிதத் தன்மையற்ற செயல்’ என்பதைக் கற்றுத்தராத பாடநூல்களை மட்டும், நாம் ஏன் குற்றம் சொல்லத் துணிவதில்லை?

பிரச்சினை யாரிடம்?

தீண்டாமைக் கொடுமைகள் நடைபெறும்போதெல்லாம் அதைப் பொதுவெளியில் கண்டிக்கின்ற ஒவ்வொருவரும் - சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் - ஏதோவொரு ஜாதியினராக நிலைபெற்றிருப்பதால்தான் (ஜாதியற்றவர் களான தாழ்த்தப்பட்ட ஜாதியினர்கூட இதற்கு விதிவிலக்கு அல்லர்) தீண்டாமை இன்றளவும் உயிரோடு இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

குடும்பத்தில் ஜாதி அகமணங்களை மட்டுமே அனு மதித்துக் கொண்டு, வணிகத்தில் உறவின் முறையை ஊக்கு வித்துக் கொண்டு, பண்பாட்டுக் கூடுகைகளில் அவரவர் குலதெய்வங்களையே முன்னிலைப்படுத்தி வழிபடும் ஒரு சமூகத்தில் உருவாகும் மாணவர்கள் மட்டும் எப்படி ஜாதியை எதிர்ப்பவர்களாக இருப்பார்கள்? அதனால்தான் சட்டமும் அரசும் இன்றுவரை ஜாதியை ஒரு குற்றமாக அறிவிக்கத் தயங்குகின்றன.

‘ஜாதி அமைப்பை அழிக்காமல் தீண்டாமையை ஒழித்து விடலாம் என்று நம்புவது வீணானது. ஜாதியும் தீண்டாமை யும் வெவ்வேறானவை என்று கருதுவது முற்றிலும் தவறானது. ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாது. ஜாதி அமைப்பின் நீட்சியே தீண்டாமை.

ஜாதியும் தீண்டாமையும் பிரிந்து நிற்காது. இரண்டும் இணைந்தேதான் நிற்கும்; இணைந்தேதான் வீழும்’ என்ற அம்பேத்கரின் அறிவாழம் மிக்க கருத்துகளை உள்வாங்கிக் கொண்டால்தான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடை பெறும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை வகுக்க முடியும்.

தொடரும் வன்கொடுமைகள்

அறிவியலுக்குப் புறம்பான, மனிதநேயம் மற்றும் சமத்துவத்துக்கு முற்றிலும் எதிரான ஜாதியைக் கேள்வி கேட்காத அறிவுரைகளால் இங்கு சமூக மாற்றம் நிகழ்ந்து விடாது. ஜாதி, உள்ஜாதி என்பவையெல்லாம் இனக் கோட் பாடுகள் அல்ல; அவை வடிகட்டிய பொய் / மனப்பிறழ்வு என்று அறிவியல் தர்க்கங்களோடு நிரூபித்த அம்பேத்கரின் தலைசிறந்த ஆய்வு நூலான, ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’யை(‘Annihilation of Caste’) அவர் எழுதி 87 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

ஆனால், அம்பேத்கரின் இந்நூலை பெரியார் உடனடி யாக மொழிபெயர்த்து, 1937 முதல் தாம் இறக்கும்வரை பல்வேறு பதிப்புகளாக ஆயிரக் கணக்கில் வெளியிட்டு, நாடெங் கும் பரப்புரை செய்தார். அந் நூலைப் பள்ளி, கல்லூரிகளில் துணைப்பாடமாகச்(non detail)  சேர்ப்பதற்கு, தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கு இதைவிட உகந்த தருணம் வேறு இருக்க முடியாது.

நீறுபூத்த நெருப்பாக இருக்கும் ஜாதிய உணர்வுகளை அரசாங் கத்தால் மட்டுமே மட்டுப் படுத்தி விட முடியாது. அதனால்தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடை முறையில் இருக்கும் தாழ்த்தப் பட்ட ஜாதியினர் - பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தால் வன்கொடுமை களைத் தடுக்க முடியவில்லை. வன்கொடுமை நிகழ்ந்த பிறகு சில நிவாரணங்களையும் குறைந்த அள விலான தண்டனையையுமே வழங்க முடிகிறது.

கடும் அச்சத்தை விளைவிக்கக்கூடிய ஆணவப் படு கொலையோ, நாங்குநேரி போன்ற வன்கொடுமையோ நிகழ்த்தப்படும்போது மட்டுமே ஆர்ப்பரிக்கும் இச்சமூகம், அருவமாக நிலைத்திருக்கும் ஜாதியச் சமூக அமைப்பின் மீது குற்றம் காண்பதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுக்கும் ஜாதி அமைப்பு உயிர்ப்போடு இருப்பதற்கு எரிபொருளாக விளங் கும் மத விழுமியங்களை முதன்மைக் குற்றவாளியாக்காமல், அரசையே இச்சமூகம் முதன்மைக் குற்றவாளியாக்குகிறது. இதன் மூலம் ஜாதிய முரண்களைக் களையும் முயற்சிகள் திட்டமிட்டுத் திசைதிருப்பப்படுகின்றன.

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு

ஜாதிப் பாகுபாடு என்பது பரம்பரை மற்றும் தொழில் (Descent and Work)  அடிப்படையில் அமைந்திருக்கிறது என அய்.நா. அவை வரையறுத்துள்ளது. இத்தகைய பாகு பாட்டைப் பன்னாட்டு மனித உரிமைகள் சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால், இந்தியக் கிராமங்கள் பிறப்பின் அடிப்படையில்தான் வாழிடங்களையும் (தனிக் கோயில்கள், தனிக் குடிநீர்த் தொட்டிகள், தனிச் சுடுகாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சேரிகள்) தொழில்களையும் உருவாக்கியுள்ளன. மனிதக் கழிவைக் கையால் அள்ளுவது தடை செய்யப் பட்டிருப்பினும் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணி யில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 339 பேர் இறந்து உள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சமத்துவச் சிந்தனையை வளர்த்தெடுக்கும் உயரிய நோக்கத்தில் அம்பேத்கரின் நூல்களைத் தமிழில் வெளியிட 5 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள தமிழ்நாடு அரசு, அதேபோல அம்பேத்கர், பெரியாரின் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகளைப் பொது இடங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும். டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளைச் சமத்துவ நாளாக அறி வித்து, பள்ளி, அரசு அலுவலகங்களில் சமத்துவ உறுதிமொழி ஏற்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால், அவ்வுறுதிமொழி, ‘ஜாதி வேறுபாடுகள் ஏது மில்லாத - சமத்துவச் சமுதாயத்தை அமைக்க நாம் அனை வரும் பாடுபடுவோம்’ என்றிருப்பதற்குப் பதில், ‘ஜாதியற்ற - சமத்துவச் சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம்’ என்பதாகத் திருத்தப்பட வேண்டும். ஏனெ னில், ஜாதி வேறுபாடுகள் கூடாது எனக் குறிப்பிடும்போது, ஜாதி இருக்கலாம்; வேறுபாடுதான் கூடாது என்றே பொருள்படுகிறது. தவிர, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளைப் பொருள்படுத்தி, அவற்றைக் களைவது குறித்து விவாதிக்க சிவில் சமூகம் முன்வருவதில்லை.

செய்ய வேண்டியவை

நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களை ஒரு ஜாதிக்குரிய வராகப் பார்த்து, அவருக்கு விழா எடுப்பது போன்றவற்றை அரசு அங்கீகரிக்கக் கூடாது. பொதுவெளியில் ஜாதிக்கு ஆதரவாகப் பேசும் ஜாதி அமைப்பின் பிரதிநிதிகள், திரைப் படக் கலைஞர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோரை அரசு கடுமையாக எச்சரிக்க முன்வர வேண்டும். ஜாதிப் பெருமிதங்களைச் சொல்லும் வகையிலும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை இழிவுபடுத்தும் வகையிலும் எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் எவ்விதக் குற்ற நடவடிக்கைக்கும் உள்படாதவையாகவே இருக்கின்றன.

பெயர்களுக்குப் பின்னால் இடம்பெறும் ஜாதிப் பின்னொட்டுகள் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ் நாட்டில் குறைவு எனினும் தெருப் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள் இன்றுவரை முற்றாக நீக்கப்படவில்லை. சொந்த ஜாதியில் வரன் தேடும் விளம்பரங்கள் இன்றைக்கு ஊடகங் களில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பதைக் கட்டுப்படுத் துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், ‘தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய பகுதி களைக் கண்டறிந்து, அம்மக்களின் பாதுகாப்பை உறுதி செய் வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும்’ - 21(2) என்று தாழ்த்தப்பட்ட ஜாதியினர் - பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 வலியுறுத்துகிறது. இந்நேர்வில், காவல் - உளவுத் துறை கூடுதல் அக்கறை செலுத்தினால் மட்டுமே வன்கொடுமைகளைத் தடுக்க முடியும்.

ஜாதி என்கிற சமூகப் பிரிவினைக் கோட்பாட்டைத் தகர்க்காமல் நம்மால் ஒரு நாகரிகமான, ஜனநாயகமிக்க சமூகத்தை உருவாக்க முடியாது. ஜாதி வேண்டும்; ஆனால், தீண்டாமை கூடாது. ஜாதிப் பெருமிதங்கள் வேண்டும்; ஆனால், இழிவுபடுத்தக் கூடாது. தீண்டாமை குற்றம்; ஆனால், ஜாதி குற்றமல்ல என்பதான சமூகப் பார்வை முற்றிலும் மாற்றப்படாத வரை, ஒவ்வொரு வன்கொடுமை நடந்து முடிந்த பிறகும் அதற்கு எதிர்வினை ஆற்றுகின்ற வர்களாகவே நாம் இருப்போம்.

அவ்வாறு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மட்டுமே போராடுபவர்களை நோக்கி அம்பேத்கர் ஒரு முக்கியக் கேள்வியை முன்வைத்தார்: “கடைசி தீண்டத் தகாதவன் கொல்லப்படும்வரை, நீங்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கப்போகிறீர்களா?”

குறிப்பு: "ஜாதியின் இருப்பும் முடிவுறா வன்கொடுமை களும்" என்ற தலைப்பில் இன்றைய (18.8.2023) இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த கட்டுரை - நன்றி.

அம்பேத்கரின் தலைசிறந்த ஆய்வு நூலான, ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’(‘Annihilation of Caste’)  என்ற நூலை பெரியார் உடனடியாக மொழிபெயர்த்து, 1937 முதல் தாம் இறக்கும்வரை பல்வேறு பதிப்புகளாக ஆயிரக்கணக்கில் வெளியிட்டு, நாடெங்கும் பரப்புரை செய்தார்.


No comments:

Post a Comment