பறவைகளே இயற்கையின் எச்சரிக்கை மணி - ஆய்வாளர் கிருபா நந்தினி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

பறவைகளே இயற்கையின் எச்சரிக்கை மணி - ஆய்வாளர் கிருபா நந்தினி

‘‘இறந்த பறவைகளை ஆய்வு செய்வதால் என்ன கிடைக்கப் போகிறது என கேட்கலாம். அமெரிக்காவை சேர்ந்த ரேய்ச்சல் கார்சன் என்ற பெண்மணி ‘மவுன வசந்தம்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அமெரிக்காவில் புகழ் பெற்ற ராபின் என்ற பறவை அழிந்து போனது பற்றிய குறிப்பு இருந்தது. அதற் கான காரணத்தை அவரே பதிவிட்டிருந்தார். இங்கிலாந்து நாட்டின் சாலையோர மரங்களின் இலைகளை வண்டுகள் தின்று அழித்தன.

வண்டுகளை அழிக்க ஹெலிகாப்டர் மூலம் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. வண்டுகள் இறந்தது. ஆனால் நச்சு தன்மை படிந்த இலைகள் உதிர்ந்து மண்ணுக் குள் புதைந்தது. அதை சாப்பிட்ட புழுக்கள் மாண்டன. கால நிலைக்கேற்ப வலசை பாதையாக இங்கிலாந்திற்கு சென்ற ராபின் பறவைகள் அந்த மண் புழுக்களை தின்று அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது. பூச்சிக்கொல்லிகளால்தான் பறவை கள் இறந்தது என்பதை ரேய்ச்சல் கார்சன் தனது புத்தகத்தில் பதிவு செய்யவே அந்த வகை பூச்சிக் கொல்லிகளையே அமெரிக்கா தடை செய்தது. காரணம், பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் பறவைகள் மட்டுமின்றி மனிதர்களும் பாதிக்கப்பட்டனர். பறவைகளை ஒரு நோய் தாக்கும் போது, அதன் பாதிப்பு மக்களுக்கும் ஏற்படும்.

கால சூழ்நிலைக்கேற்ப ஒவ்வொரு நாடுகளுக்கு பறவை கள் இடம் பெயரும். இதை வலசை எனச் சொல்லுவார்கள். தீடீரென பறவைகள் வலசை போகவில்லை. வழக்கமாக வலசை வரும் மாதங்களில் வராமல் முன்கூட்டியே வந்தது அல்லது காலம் தாழ்த்தி வந்தது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்யும் போது இப்போது நாமெல்லாம் பேசுகிற கால நிலை மாற்றம் என்ற ஒன்று நடந்திருப்பதையே விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். பறவைகள்தான் இயற்கை யின் எச்சரிக்கை மணி. இதே போலதான் இறந்த பறவை களைத் தேடி சென்று அந்த பறவைகள் இறந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்து வருகிறார் பொள்ளாச்சியை சேர்ந்த கிருபா நந்தினி.

கல்லூரி படிப்பை முடித்த கையோடு, உயிரினங்கள் சார்ந்து ஆய்வு செய்ய முனைந்த போது, ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மய்யம் இருப்பது தெரிய வந்தது. அங்கே ஆய்வுகள் செய்து கொண்டே முனைவர் பட்டத்துக்கான படிப்பையும் படித்துக் கொள்ளலாம் என்கிற முறை இருந்தது.

என்னுடைய ஆய்விற்காக இந்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் கீழ் நிதி கிடைத்தது. மேலும் இந்தியாவில் கொத்துக்கொத்தாக பறவைகள் எங்கெல்லாம் இறக்கிறதோ அங்கு சென்று இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். நான் அந்த ஆய் வில் என்னை இணைத்துக் கொண்டேன். இந்தியா முழு வதும் பறவைகள் இறக்கிறது. ஆனால் பறவைகள் இறந்த தற்கான தகவல்கள் இல்லை. அதிகமாக எங்கே பறவைகள் இறந்து போகும் மாநிலங்களை கணக்கெடுத்தேன். அதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், அசாம் இந்த நான்கு மாநிலங் களில் அதிக அளவு பறவைகள் இறப்பது குறித்து தெரிய வந்தது. இந்த நான்கு மாநிலங்களை ஆய்வுக்கான இடங் களாக முடிவு செய்தோம்’’ என்றவர் பறவைகளை பற்றி பேசத் தொடங்கினார்.

‘‘உயிருடன் இருக்கிற பறவைகளை ஆய்வு செய்தால் எந்த பறவைகள் அழியும் தருவாயில் இருக்கிறதென்று சொல்லலாம். இறந்த பறவைகளை ஆய்வு செய்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி எழும். சுற்றுச்சூழல் மாற்றத்தினால், புதுப்புது நோய்களின் பாதிப்பு ஏற்படு கிறது. அந்த நோய்கள் குறித்து பறவைகள் நமக்கு முன்கூட்டியே தெரிவிக்கும். காரணம், பறவைகளை தாக்கும் நோய்கள் மனிதர்களையும் பாதிக்கும். இந்த உலகத்தில் மனிதர்களை விட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகம். இவை அதிகரித்தால் நம் உணவுகளை பூச்சிகள் சாப்பிட்டுவிடும். இவை பெருகாமல் கட்டுப் பாட்டிற்குள் வைப்பது பறவைகள்தான். பறவைகளில் பல வகை உள்ளன.

நம் சூழலை தூய்மையாக்கி, கட்டுப்பாட்டுக்குள்ள வைத்திருப்பது பறவைகள்தான்

மனிதர்களால் மட்டுமில்லாமல் காற்று மாசு, ஒலி, ஒளி என பல வகைகளில் பறவைகள் பாதிப்படைகின்றன. இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பறவைகளின் குஞ்சுகளுக் கும் அந்த பாதிப்பினை பார்க்க முடியும். அதில் அதிகமாக பாதிக்கப்படும் பறவை மயில். விவசாயிகள் பூச்சிக் கொல்லி களை வைத்து மயில்களை கொல்வது, பல ஊர்களில் நடக்கும் பிரச்சினையாக இன்றும் உள்ளது. பூச்சிக்கொல்லி யால் இறந்து போன ஒரு பறவையின் உடலை ஆய்வு செய்யும் போது அதனுடைய உடலில எந்த ஒரு மாற்றமும் தெரியாது. எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில தான் இருக்கும். ஆனால், பறவை ரத்த வாந்தி எடுத்து இறந் திருக்கும். அதை வைத்தும் ஒரு முடிவுக்கு வர முடியாது.

அதனால் பறவையோட உடலை ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்தால் மட்டுமே இறந்ததற்கான காரணத்தை கண்டறிய முடியும். சில சமயங்களில் பறவையின் உடல் கிடைக்காது. வனத்துறையினர் இறந்த பறவையின் மாதிரி களை கொடுப்பார்கள். அதை வைத்து ஆய்வு செய்வோம். மனிதனுடைய தவறுகளால் மட்டுமில்லாமல், நோய்களாலும் பறவைகள் இறந்து போகிறது. ராஜஸ்தானில் பறவைகளுக்கு வந்த ஒரு நோயினால் 20,000 பறவைகள் இறந்தன.

ஒடிசாவில் உள்ள சிலிக்கான் லேக்கிலும் பல பறவைகள் இறந்து போகிறது. அதற்கு காரணம் காலநிலை மாற்றம். பறவைகளின் வாழ்விடங்கள் மாற்றமடைகிறது. மழைக் காலங்களில் வரும் பூச்சிகள் வருவதில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் பூச்சிகளை சாப்பிட வரும் பறவைகள் வேறு இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் பறவைகள் தங்களை தகவ மைத்துக் கொள்ளும் திறனை பெற்றது. பல அழிவுகள் இந்த பூமியில் நடந்த பிறகும் கூட பறவைகள் தங்களை தகவ மைத்துக் கொள்ளக் காரணம் அவை இயற்கையுடன் ஒன்றி வாழ்வதுதான். மனிதர்களாகிய நாம் இயற்கையை சுரண்டி வாழ்கிறோம்’’ என்றார் வேதனையோடு கிருபா நந்தினி.

No comments:

Post a Comment