பெருந்தலைவர் காமராசர் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

பெருந்தலைவர் காமராசர் வாழ்த்து!

கல்வியினைப் பரப்புதற்கே பிறப்பெடுத்த காமராஜர் - அவர்

   கருமவீரர் என்றுபெயர் எடுத்திருந்த தமிழ்நேசர்

பள்ளியினைப்  பலவாறாய்க் கட்டிவைத்தார் - நாம்

படிப்பதற்கே பாரெல்லாம் சுற்றிவந்தார்!

எல்லாரும் ஒன்றென்றே எண்ணச் செய்தார் - அதற்கு

   இதமான சீருடையை எடுத்துத் தந்தார்!

சொல்லாமல் செய்கின்ற சுடரொளியாய் இருந்தார் - நாளும்

   சூரியனாய் உழைத்தவராய் அறிவொளியைத் தந்தார்!


மதியவுணவுத் திட்டத்தால் மாணவர்க்கு அன்னை -இவர்

   மானுடத்தைக் கொண்டதனால் மக்களுக்குத் தந்தை

பதவியினை விரும்பாமல் பாடுபட்ட தால்பெருந்  தலைவர் - தம்

   பட்டறிவு ஒன்றாலே படையமைத்தத் தமிழர்

உதவிகளைச் செய்வதற்கே உயர்ந்துவந்த முதல்வர்

   உழைப்பாளி குமாரசாமி சிவகாமிப் புதல்வர்

சிதையாத நெஞ்சத்தின் சொந்தக் காரர்-  நம்

   செந்தமிழின் செழிப்புக்கோ நல்லுறவுக் காரர்!


அறியாமை இருள்ஒழிக்க ஆண்டுவந்த மேதை - நாம்

   அனைவருமே ஒன்றென்றிட போட்டுவந்தார் பாதை!

வறுமையினை ஒழிப்பதற்கு அணைகள்பல கட்டினார் - நாடு

   வளமாக இருப்பதற்குத் திட்டங்கள் தீட்டினார்!

பெரியாரின் வழியினிலே பேதத்தை ஒழித்தார் - மக்கள்

   பெருமையினைப் பெறுவதற்கோ பெரியாராய்ச் சிரித்தார்!

உரிமையினைப் பெற்றெடுக்க உழைப்பினையே கொண்டார் - நாளும்

ஒழுக்கத்தில் உயர்ந்தவராய் உலகத்தை வென்றார்!


பொதுநலத்தைத் தம்நலமாய்க் கொண்டிருந்தார்-  அதனால்

   புதுமையினை எந்நாளும் செய்தவராய்ச் சிறந்தார்!

மதுவினையே ஒழித்தவராய் மாநிலத்தை ஆண்டார் - நாளும்

   மக்கள்தொண்டு மகேசன்தன் தொண்டென்று ரைத்தார்!

இதமாக ஆகட்டும் பார்க்கலாமென்று சொல்லி - நம்

   எல்லாரின் உளத்தினையும் வென்றெடுத்த வெள்ளி!

பொதுவாகக் காந்தியத்தின் வழியினிலே நின்றார்-  அதனால்

  புவியெங்கும் கறுப்புகாந்தி என்றிங்கே ஆனார்!


தென்னாட்டுக் காந்தியென சிறப்பினையும் கொண்டார் - இந்திய

   தேசத்துப் பிரதமரை உருவாக்கி நின்றார்

எந்நாளும் கதராடை தனையேதான் அணிந்தார்

   ஏழ்மையினைப் போக்குதற்கு ஆட்சியினைத்   தந்தார்

கண்ணெனவே கல்வியினைக் கருதி வாழ்ந்தார் - எங்கும்

   கல்விவள்ளல் என்றுபெயர் பெற்றுச் சிறந்தார்!

இன்றிங்கே இவருக்குப் பிறந்தநாள் எடுக்கின்றோம் - எங்கள்

   பெரியவரே என்றபெயரில் சிறந்தவராய் வாழ்த்துகின்றோம்!


- புலவர் கந்தசாமி


No comments:

Post a Comment