சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றி முதலமைச்சர் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது : தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றி முதலமைச்சர் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது : தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன்

சென்னை, மே 28  சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் தெரிவித்தார்.

சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட் டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட் டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே சிங்கப்பூர் வாழ் தமிழர், தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

தமிழ் பேராசிரியர் திண்ணப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அதிராம்பட்டினம் கல் லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடு களின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி யுள்ளார்.

தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் கடந்த பல ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கு தமிழ்மொழிப் பாடத்திட்டக்குழு, பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றிலும், கல்வி அமைச்சகத்தின் குழுக்களிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் ஆற்றிய தமிழ்ச்சேவைக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட விரு துகள் வழங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நாட்டின் மேனாள் குடியரசுத் தலைவர் மறைந்த எஸ்.ஆர்.நாதனுக்கு தமிழ் பயிற்று வித்துள்ளார்.

முதலமைச்சரை சந்தித்த 88 வயதான முனைவர் சுப.திண்ணப்பனுக்கு, அவர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவை களைப் பாராட்டி அவருக்கு முதலமைச்சர் சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.

முதலமைச்சரை, சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் சுப.திண்ணப்பன், நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரால் தான் வந்தது. திருவாரூரில் நான் படித்துக் கொண்டு இருந்த போது தான் முதன்முதலில் கலைஞரின் பேச்சைக் கேட்டேன். அப்போது தான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது, தமிழ் ஆசிரியராக வேண்டும், தமிழ் பேராசிரியராக வேண் டும் என்ற வேட்கை வந்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, பெண்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுபோல மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தி வருவது ஆகியவை பாராட்டுக்குரியவை.

கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை தனது முழு மூச்சாக கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இப்போது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிங்கப்பூர் வந்துள் ளார்.   சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை பாராட்டியதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது."

 இவ்வாறு பேராசிரியர் சுப. திண்ணப்பன் கூறினார்.


No comments:

Post a Comment