'தொழிலாளர்' பற்றிய பெரியாரின் புரட்சிகரமான நிலைப்பாடுகள் என்ன? பாடம் எடுத்தார் ஆசிரியர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

'தொழிலாளர்' பற்றிய பெரியாரின் புரட்சிகரமான நிலைப்பாடுகள் என்ன? பாடம் எடுத்தார் ஆசிரியர்!

 முதலாளி முதல் போடுகிறான்; தொழிலாளி உழைப்பைப் போடுகிறான்;

லாபம் கிடைத்தால் தொழிலாளிக்கு பங்கு தேவை! நிர்வாகத்தில் உரிமை கொடு!

தமிழர் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு பட்டாடை அணிவித்தார். அமைச்சருக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி கழகத் தலைவர் சிறப்பாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

தாம்பரம்.மே,21- திராவிடர் கழக தொழிலாளரணியின் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

திராவிடர் கழக தொழிலாளரணியின் 4 ஆம் மாநில மாநாடு மேற்கு தாம்பரத்தில் உள்ள டி.ஜி.பி. திருமண குளுமை மண்டபத்தில், 20-5-2023, சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. 

திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையின் தலைவர் அ.மோகன் தலைமையேற்க, பொருளாளர் மா.இராசு அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பேரவையின் செயலாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கொடியேற்றினார். 

தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி உரையாற்றினார். 

தொடர்ந்து தொ.மு.ச.பேரவையின் பொதுச்செயலாளர் மு. சண்முகம் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்புரை ஆற்றினார். 

நிகழ்வில் கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், முனைவர் துரை. சந்திர சேகரன், தொழிலாளரணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, தொ.மு.ச. பேரவையின் பொறுப்பாளர்கள் நடராசன், செயலாளர் வேலுச்சாமி, தனசேகரன், பொன்னுராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஓசூர் பாகலூர் ஏசியன் பெரிங் ஒர்க்கர்ஸ் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அ.கிறிஸ்து நேசன், பெ.நாராயணன், செ.பாபு, ராமச்சந்திரன் ஆகியோர் வனவேந்தன் முன்னி லையில், 1 ஆண்டு விடுதலை சந்தா மற்றும் கோரிக்கை மனுவை தமிழர் தலைவரிடம் அளித்தனர். 

தொ.மு.ச.பேரவையின் பொதுச்செயலாளர் மாநிலங் களவை திமுக உறுப்பினர் மு. சண்முகம் அவர்கள் தமிழர் தலைவருக்கும், ஆசிரியர் அவர்கள் மு.சண்முகத்திற்கும் அடுத்தடுத்து ஆடை அணிவித்து மரியாதையை பகிர்ந்து கொண்டனர். 

தொ.மு.ச.பேரவையின் பொதுச்செயலாளர் மாநிலங் களவை திமுக உறுப்பினர் மு. சண்முகம் பேசுகையில், 

தொழிலாளர் அமைப்புகளில் இருக்கும் பல்வேறு சட்டசிக்கல்களைக் குறிப்பிட்டு இதில் தொ.மு.ச.பேரவை என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என்று பட்டிய லிட்டார். மேலும், ‘தமிழர் தலைவர் வழிகாட்டியபடி நாங்கள் இயங்குகிறோம்’ என்று கூறி உரையை நிறைவு செய்தார். 

தொழிலாளர் நலத்துறை  அமைச்சர் மாண்புமிகு சி.வி. கணேசன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

மாண்புமிகு அமைச்சர் சி.வி. கணேசன் அவர்களுக்குக் கழகத் தலைவர் சிறப்பாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கருத்தரங்கம், 

தீர்மானங்கள் நிறைவேற்றம்

தொடர்ந்து, “தொழிலாளியா? பங்காளியா?” எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், “ஊதியத்தில் ஆண், பெண் வேறுபாடு ஏன்?” எனும் தலைப்பில் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ”தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை, ஏன்?” எனும் தலைப்பில் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, “ஒப்பந்தத் தொழிலாளர் முறை நீடிக்கலாமா?” எனும் தலைப்பில் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். 

அதைத் தொடர்ந்து தீர்மான அரங்கை கும்பகோணம் குருசாமி தொடங்கி வைத்தார். 22 தீர்மானங்களை திராவிடர் கழக தொழிலாளரணியின் மாவட்டப் பிரதிநிதிகள் முன் மொழிய கூடியிருந்த தோழர்கள் அதை ஒருமனதாக நிறைவேற்றித் தந்தனர். 

திராவிடர் கழக விவசாயத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் க. வீரய்யன் நன்றி கூறினார்.

திறந்த வெளி மாநாடு

திராவிடர் கழக தொழிலாளரணியின் 4 ஆம் மாநில மாநாடு, தாம்பரம் பெரியார் நகர், பாரதி திடலில் உள்ள சண்முகம் சாலையில் திறந்தவெளி மாநாடாக, 20-05-2023, சனிக்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கி, இரவு 9:30 மணிக்கு நிறைவுற்றது. தொழிலாளரணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்தவெளி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார்.

பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செய லாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரையாற்றினர். 

தமிழர் தலைவர் தலைமையுரை

அதுதான் திராவிட நாகரிகம்!

 திறந்தவெளி மாநாட்டிற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றிய ஆசிரியர்,

“100 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1916 இல், நம்மை இணைக்கின்ற ஒரு சொல் கிடையாது. சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் பல்வேறு ஜாதிகளாக பிரிந் திருந்தோம் என்றார் தொடக்கத்தில், பின்னர், “நமக்கென்று வரலாறு இல்லையா?” என்று கேள்வி கேட்டார். ‘இருக்கிறது, அதுதான் திராவிட நாகரிகம்!’ என்று மயிர்க்கூச்செரியும் படியாக பதில் சொன்னார். அதிலும் ஒரு கேள்வியாக, ‘எது திராவிட நாகரிகம்?’ “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” “அனைவருக்கும் அனைத்தும்!, எல்லோருக்கும் எல்லாமும்” என்று அடுக்கி, இதுதான் திராவிட நாகரிகம்’ என்றார் பலத்த கைதட்டல்களுக்கிடையே. இப்படிப்பட்ட வரலாற்றை மீட்டு நமக்கு, “பார்ப்பனரல்லாதார்” என்று குறிப்பிட்டனர். பின்னர் எதிர்மறையான பெயர் எதற்கு? ஆகவே ’திராவிடர்’  என்ற நேர்மறையான பெயர் தந்தை பெரியாரால், 1944 இல் சேலத்தில் “அண்ணா தீர்மானம்” என்ற பெயரில் சூட்டப்பட்டது.

நீதிக்கட்சி தொடங்கிய பள்ளிக்கூடம்!

தொடர்ந்து, ‘திராவிடர் என்றாலே தொழிலாளர்கள்தான்’ என்று சொன்னவர், அதற்கு ஆதாரமாக மனுதர்மத்தை எடுத்துக் கொண்டு விளக்கினார். வரலாற்றில் திராவிடர் கழகம் பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்றுதான் விளிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்தினார். அதனுடைய தொடர்ச்சியாக அண்ணா, நீதிக்கட்சி எங்கள் பாட்டன்! என்று சொன்னதையும் அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கிருக்கும் திராவிட மாடல் ஆட்சி! மேலும் அவர், “1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி முதல் முதலில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக்கூடங்களை திறந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது தெரியுமா?” என்று கேள்வி கேட்டு, “லிணீதீஷீuக்ஷீ sநீலீஷீஷீறீs" என்று பதிலும் சொன்னார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்குவதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று திராவிடர் இயக்கத்தின் மூல வரலாற்றை திறந்தவெளி அரங்கில் எடுத்து வைத்தார்.

தொழிலாளர்களுக்கு 7 மணி நேரம் வேலை!

தொடர்ந்து, 91 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கத்தின் பெருமைமிகு ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தினார். அதாவது, சமீபத்தில் 12 மணி நேரம் வேலை தொடர்பாக எழுந்த சர்ச்சையும், திராவிடர் கழகமும், மற்ற கூட்டணிக் கட்சிகளும் ஆற்றிய எதிர்வினையும் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மே தினத்தில் சொன்ன பதிலையும் நினைவூட்டி,  தந்தை பெரியார் அளித்த சுயமரியாதை - சமதர்ம வேலைத்திட்டத்தில் 7 ஆவது திட்டம் என்ன தெரியுமா? என்று கேட்டு, “தொழில் செய்கிறவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது! அவர்களின் வாழ்க்கை நிலை உயர்த்தப்பட கூலி உயர்வு வேண்டும்! இலவச நூல் நிலையம் அமைத்து அறிவைப் பெருக்க வேண்டும்!” என்று பதில் சொன்னார். தொடர்ந்து சனாதனம், சமதர்மம் ஆகிய இரண்டு  தத்துவங்களுக்கிடையே நடக்கின்ற போராட்டம் இது. அறிவைக் கொடு என்பது திராவிடம்! அறிவைக்கொடுக்காதே என்பது ஆரியம்? என்று அந்த தத்துவங்களின் குணங்களையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 1907 சென்னை பல்கலைக்கழகம், கல்வி நிலை, உத்தியோகநிலை முதல் எம்.ஜி.ஆர், மோடி வரை பல பிரச்சினைகளை கொள்கை ரீதியாக சம்பத்தப்படுத்தி, 2023 செப்டம்பருக்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2024 க்கு பிறகு மோடி அரசே; பி.ஜே.பி.அரசே செல்லாமல் போய்விடும் என்று சிந்தனையும் தோய்ந்த வண்ணம் பேசி, பொதுத்துறையை தனியார் மயமாக்குகின்ற ஒன்றிய அரசின் மோசடியைத் தகர்க்க, தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டுவரவேண்டும். அதற்குப் பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளதால் நமது அடுத்த இலக்கு அதுதான்! என்று சொல்லி, மக்களைப் பார்த்து, ‘இது எங்களுக்காக அல்ல, உங்கள் எதிர்காலத்திற்காக, உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திறகாக’ என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அமைச்சர் சி.வி.கணேசன் சிறப்புரை

பெரியாருக்கு முன்! பெரியாருக்கு பின்!

முன்னதாக பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ‘பெரியாரை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. நான் ஆசிரியர் அய்யாவைத்தான் பெரியாராகப் பார்க்கிறேன். நான் ஆசிரியர், கவிஞர் எப்போது அழைத்தாலும் வந்துவிடுவேன். காரணம், நான் இப்படி நன்றாக உடையுடுத்தி இங்கு உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால், அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தான்! அதனால் நான் பெரியாரை, கி.மு., கி.பி., போல, ’பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின்’ என்று பிரித்து தமிழ்நாட்டைப் பார்க்கிறேன்’ என்றார். திராவிட மாடல் ஆட்சியைப் பின்பற்றி மிகக்குறுகிய காலத்தில், 1,07,000 பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுத்திருக்கிறோம்’ என்றார், 13 லட்சத்திற்கும் மேற்பட்டோரை புதிதாக நலவாரியத்தில் இணைத்திருக்கிறோம். அதே போல, பெல்  தொழிலாளரணிச் செயலாளர் சேகர், சொன்னதை நிறைவேற்றுவேன் என்றார். விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஆகிக்கொண்டிருந்தது. இப்போது கரூர் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் உரியதொகை 24 மணி நேரத்தில் முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வழங்கப்பட்டது. இதுதான் திராவிட மாடல் அரசு என்று பெருமிதத்துடன் என்று பல்வேறு தகவல்களைக் கூறி, உரையை நிறைவு செய்தார்.  

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள்!

ஆசிரியர் பேசுவதற்கு முன்பு, பல்வேறு கட்சித்தோழர்கள் ஆசிரியருக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தனர். தொழிலாளரணிச் செயலாளர் மு. சேகர் தலைமையில் மாநாட்டு நிதியாக ரூபாய் ஒன்றரை லட்சம் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. இதில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி ஏழுமலை, சிவகுருநாதன், நிலவன், ஆத்தூர் சுரேஷ் உள்ளிட்ட மாநாட்டுக்கு உழைத்த தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

நன்றியுரைக்கு முன்னதாக கடைவீதி வசூலில் ஈடுபட்ட இருபால் தோழர்களுக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். இறுதியில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் நன்றி கூறி நிகழ்வை நிறைவு செய்தார். 

நிகழ்வில் கழகப்பொறுப்பாளர்கள்

திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,  தலைமைக்கழக அமைப்பாளர்கள் வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன், ஈரோடு த,.சண்முகம் மற்றும் திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், காப்பாளர் தி.இரா.இரத்தினசாமி, தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன்,  வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர் உத்தமவிஜயன் உள்ளிட்ட மாநில, மாவட்டங்களின் பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

 பெரியார் பெருந்தொண்டர் ஞானசேகரன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அரூர் இராசேந்திரன், திருப்பத்தூர் மாவட்டக்கழகத் தலைவர் எழிலரசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சுமதி கணேசன், ஆவடி மாவட்டச் செயலாளர் க. இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், இளைஞரணிச் செயலாளர் கண்ணன், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநிலம் தழுவிய அளவில் தோழர்கள் வந்திருந்து மாநாட்டை சிறப்பித்திருந்தனர்.


திராவிடர் கழகத் தொழிலாளரணி 4ஆவது மாநில திறந்தவெளி  மாநாட்டில்  கலந்து கொண்டோர் (20.5.2023)

No comments:

Post a Comment