தலை முடி நரைப்பது ஏன்? அமெரிக்க விஞ்ஞானிகளின் விளக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

தலை முடி நரைப்பது ஏன்? அமெரிக்க விஞ்ஞானிகளின் விளக்கம்!

தலைமுடியை கருமையாகவே வைத்திருக்க உதவும் செல்கள் அவற்றின் முதிர்ச்சியடையும் திறனை இழக்கும்போது முடி நரைக்க தொடங்குவதாக அவர்கள் கூறுகின்றனர். முடி நரைப்பதை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த செல்கள் முதிர்ச்சியடையும்போது அவை மெலனோசைட்ஸாக வளர்ச்சி பெறுகின்றன. இது முடியை அதன் இயற்கையான நிறத்தில் இருக்க உதவுகிறது. செல்கள் முதிர்ச்சியடையாத பட்சத்தில் இந்த வளர்ச்சி தடை படுகிறது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எலியிடம் இந்த பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். மனிதர்களைப் போலவே எலிகளுக்கு முடி வளர்ச்சிக்கு உதவும் அணுக்கள் உள்ளன.

நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்றும் செயல்முறையை தொடங்க இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும் என்று ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறுகின்றனர். மெலனோசைட்டுகள் பற்றிய ஆய்வுகள் ஒரு புரிதலை வளர்த்து, சில புற்றுநோய்கள் மற்றும் பிற சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையை கண்டறிய உதவும் என்று பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜிஸ்ட்ஸ் (ஙிகிஞி) கூறுகிறது.

முடி எப்படி நரைக்கிறது?

நமது சருமத்தில் இருக்கும் மயிர்க்கால்களில் இருந்து முடி வளர்கிறது. முடியை கருப்பாக வைத்திருக்க உதவும் அணுக்கள் அங்கு உள்ளன. மெலனோசைட்ஸ் எனப்படும் இந்த அணுக்கள் தோன்றுவது, பின்னர் அழிவது, மீண்டும் தோன்றுவது என சுழற்சியை கொண்டுள்ளன. ஸ்டெம் செல்களில் இருந்து இந்த செல்கள் உருவாகும்போது அவற்றில் எதாவது தடை ஏற்பட்டால், மனிதர்களின் தலைமுடி நரைக்கத் தொடங்கும் என்று நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லாங்வான் ஹெல்த் குழு சிறப்பு ஸ்கேனிங் மற்றும் ஆய்வக நுட்பங்களின் உதவியுடன் இந்த உயிரணுக்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையை ஆய்வு செய்துள்ளது. முடிக்கு வயதாகும்போது அவை உதிர்ந்து பின்னர் மீண்டும் முளைக்கும். ஆனால் பின்னர் மெலனோசைட் செல்கள் மந்தமாக மாறத் தொடங்குகின்றன. ஸ்டெம் செல்கள் ஒரே இடத்தில் நிலைபெற்று மெலனோசைட் செல்களாக உருவாகாமல் போகின்றன. இதனால், முடியை கருமையாக மாற்ற உதவும் நிறமி உற்பத்தி செய்யப்படாமல், முடி சாம்பல் நிறமாகவோ, வெள்ளை நிறமாகவோ மாறும்.

முடி நரைத்தால், நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியுமா?

`முடியை கருமையாகவே வைத்திருக்க மெலனோசைட் ஸ்டெம் செல்கள் எப்படி செயலாற்றுகின்றன என்பதை அறிந்துகொள்ள எங்கள் ஆய்வு உதவியுள்ளது` என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லாங்வான் ஹெல்த் குழுவைச் சேர்ந்தவரும் ஆராய்ச்சி குழுவின் தலைவருமான மருத்துவர் ஷி சன், நேச்சுரல் சஞ்சிகையிடம் கூறியுள்ளார். மெலனோசைட் செல்களை சரி செய்வது மூலம் நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்துகிறது. நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்ற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுவது இது முதன்முறையல்ல.

அதேநேரத்தில், முடி விரைவாகவே நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைப்பாடு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மறுபுறம், மன அழுத்தம் காரணமாகவும் முடி விரைவாக நரைப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர். மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்ப்பது மூலம் முடி நரைப்பதை சில காலத்திற்கு தள்ளிப்போட முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

இதேபோல், சில நிபுணர்கள் முடி நரைப்பதற்கும் மரபணுக்களுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகின்றனர். சிலர் தங்களது நரையை மறைக்க முடிக்கு டை அடிக்கின்றனர். ஒருசிலர் முடி நரைப்பதற்கு முன்பே முடிக்கு சாம்பல், வெள்ளை நிற டையை அடித்துகொள்கின்றனர்.

கிளாமர் பத்திரிகையின்படி, சில்வர் நிறத்தில் முடிக்கு டை அடித்துக்கொள்வது இளம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதேபோல், முத்துப் போன்ற நிறத்தில் டை அடித்துக்கொள்வதும் பிரபலமாக உள்ளது.

முடி நரைத்தல்

சிகையலங்கார நிபுணர், லூக் ஹெர்ஷ்சன், சமீபத்தில் பிரிட்டிஷ் வோக்கிடம் பேசும்போது, “நரை முடியை மக்கள் விரும்பாத ஒரு காலம் இருந்தது, ஆனால், தற்போது நரை முடியை வயதானவர்களுக்கானது என்று நாம் கருதுவதில்லை. நிறைய பேர் தங்கள் முடியை நரைத்தது போன்று மாற்றிக்கொள்கின்றனர். லாக்டவுனுக்குப் பிறகு, மக்கள் சுதந்திர உணர்வை உணர்ந்துள்ளனர் - நரை முடியை ஏற்றுகொள்ள தொடங்கியுள்ளனர்.

பொதுவாக, நமது முடி நரைக்கும்போது, நரைத்த முடியை நம்மில் சிலர் அகற்ற முயற்சிப்பார்கள். இது மிகவும் தவறானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு நரைத்த முடியை அகற்றுவதன் மூலம், அந்த மயிர்க்காலிலிருந்து வெளிவரும் அடுத்த முடி நரைத்திருப்பதை நம்மால் தவிர்க்க முடியாது. நீங்கள் மயிர்க்காலை சேதப்படுத்தினால், மீண்டும் முடி வளர்வது என்பது கடினமாகும். இதனால், அந்த இடத்தில் முடி இல்லாமல் வெறுமையாக காட்சியளிக்கும்.

பொதுவாக மக்கள் வெள்ளை நிறமாக மாறும்போது ஒற்றை முடியை அகற்ற முயற்சிப்பார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, அதே செல்களில் இருந்து வெளிவரும் மற்ற முடிகள் வெள்ளையாக மாறுவதைத் தடுக்க முடியாது. அவர்களின் கூற்றுப்படி, மயிர்க்கால்கள் சேதமடைவதால், புதிய முடி வளர்ச்சியும் நின்றுவிடும், இந்த சூழ்நிலையில் முடி குறையத் தொடங்குகிறது அல்லது வழுக்கை ஏற்படுகிறது.

பிரிட்டிஷ் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜிஸ்ட்ஸ்-அய் சேர்ந்த டாக்டர் லீலா அஸ்ஃபோர் பிபிசியிடம் பேசும்போது, தலைமுடிக்கான சாயம் என்பது மிகப் பெரிய வணிகமாக மாறியிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், அவர் `2030இல் தலைமுடி சாயம் தொடர்பான பன்னாட்டு சந்தையின் மதிப்பு 33.7 பில்லியன் டாலரை எட்டும். தலைமுடி சாயத்திற்கான தேவை உள்ளது` என்றார்.

மேலும், இந்த ஆராய்ச்சியில் தெளிவான சான்று உள்ளது. சாமானியர்களின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, நரைத்த முடியை மீண்டும் கருமையாக மாற்றும் முயற்சியில் ஒருபடியை நாம் நெருங்கிவிட்டோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். மருத்துவர்களின் பார்வையில் பார்க்கும்போது, மற்ற சிக்கல்கள் நன்றாக புரிந்து கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, மெலனோமா அல்லது தீவிர தோல் புற்றுநோய் போன்ற நோயின் தன்மையைப் புரிந்துகொள்ளவும் உதவும்` என்றார்.

`சருமத்தில் தோன்றும் வெள்ளை புள்ளிகள் (க்ஷிவீtவீறீவீரீஷீ) பற்றிய கூடுதல் தகவல்களை இந்த ஆய்வு தருகிறது. பாதிக்கப்பட்ட மயிர்க்கால்களை மாற்றுவதன் மூலம் சருமத்தை அதன் இயற்கையான நிறத்தில் வைத்திருக்க செய்யும் முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளக் கூடும். ஆனால், இதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவை` என லீலா தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஹேர் அண்ட் நெயில் சொசைட்டியைச் சேர்ந்த டாக்டர் யுஷுர் அல்-நுமி, வயதாகும்போது நல்ல முடி வளர்ச்சிக்கு உச்சந்தலையின் ஆரோக்கியம் முக்கியமானது என்று கூறினார்.

“எலிகளில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் மயிர்க்கால்கள் மற்றும் முடியை கருமையாக வைத்திருக்கும் செல்கள் பற்றிய நமது புரிதலை அதிகரித்துள்ளன” என்று அவர் குறிப்பிடுகிறார். “முடி உதிர்தல் மற்றும் பிற நிலைமைகளுக்கான ஸ்டெம் செல் சிகிச்சையின் சாத்தியம் பற்றிய கூடுதல் தகவல்களை சேகரித்து வருகிறோம். முடிக்கு நிறமளிக்கும் செல்கள் பற்றிய புதிய ஆய்வுகள் மூலம் நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் சிகிச்சை அளிப்பதில் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்` என்று அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment