செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

செய்திச் சுருக்கம்

அரசு கல்லூரிகளில்...

தமிழ்நாட்டில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,3935 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள்  http://www.tngasa.in/  எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

கருத்துக்கேட்பு

விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் இழப்பீடு  வழங்கும் திட்டம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

பயிற்சி முகாம்

அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயனுள்ள பொழுதுபோக்கை அளிக்கும் வகையில் கோடைக்கால அஞ்சல் தலை சேகரிப்பு முகாமை அஞ்சல் துறை ஆண்டுதோறும் நடத்தி வருது. அதன்படி, இந்த ஆண்டுக்கான கோடைக்கால முகாம் வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை என 3 பிரிவுகளாக அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இருப்பு

தமிழ்நாட்டில் 2.96 லட்சம் டன் பருப்பு வகைகள் இருப்பு உள்ளதாக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் தகவல்.

அழைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மய்யத்தில் மே 11ஆம் தேதி ‘காளான் வளர்ப்பு‘ மற்றும் மே 12ஆம் தேதி ‘சிறுதானிய உணவு வகைகள் தயாரிப்பு‘ என்ற தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மருந்தகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரம் பேரும், புற நோயாளிகள் பிரிவில் தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான தனித்தனி மருந்தகங்கள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகள் வசதிக்காக ஒரே இடத்தில் சிறப்பு மருந்தகம் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

மழை வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை (7.5.2023) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பயணம் உறுதி

இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை பயணம் செய்வது உறுதியாகியுள்ளது.

பதிவேற்றம்

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப்-1 முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தங்கள் அசல் சான்றிதழ்களை மே 8 முதல் 16ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

தமிழ்நாடு காவல்துறையில் 621 துணை ஆய்வாளர் கள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

நூலகர் தேர்வுக்கு

ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமன கணினி வழி தேர்வு மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வெழுதத் தற்காலிகமாக அனுமதிக்கப் பட்ட விண்ணப்பத்தார்களின் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment