செரிமான கோளாறுக்கும் - செரிமானத்திற்கும் ஒரே மருந்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

செரிமான கோளாறுக்கும் - செரிமானத்திற்கும் ஒரே மருந்து!

வெயிலின் தாக்கம் அதிகமாவதால், உடல் வெப்பம் அதிகரித்து, சரும கோளாறுகள், வயிறு உபாதைகள் உட்பட நிறைய பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு நன்னாரி நல்ல தீர்வு.

இதில் இயற்கையாக உள்ள 'சாபோனின்' என்ற வேதிப் பொருள், வாதத்தைக் குறைக்கிறது. தோலில் ஏற்படும் அரிப்பு, கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்கும் தன்மை, கல்லீரலை சிதையாமல் பாதுகாக்கவும், உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும் உதவுகிறது.

உடலின் உஷ்ணம், பித்தம் எந்த அளவு அதிகரித்தாலும், நன்னாரி சாறு குடித்தால் உடனடியாக பித்தத்தைக் குறைக்கும். இதனால் மன அழுத்தம் குறைந்து, நீர்ச்சத்து குறையாமல் இருக்கிறது.

ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றப் பயன்படும் மூலிகை இது. வெயில் காலத்தில் வியர்வை வாயிலாக அதிக நீர் வெளியேறுவதால், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், செரிமானக் கோளாறுகள் இருக்கும். செரிமானக் கோளாறுகள் இருந்தாலும், சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் நன்னாரி சாறு குடிக்கலாம்.

வெயில் காலத்தில் பெண்களுக்கு சிறுநீரக தொற்று அதிக அளவில் வரும். சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி இருக்கும். இதற்கு, நன்னாரி சாறுடன் ஆன்டி ஆக்சி டென்ட் அதிகம் உள்ள கோதுமைப் புல் சாறையும் கலந்து குடித்தால், சிறுநீரகப் பாதையில் தொற்றை சரி செய்வதோடு, எந்தத் தொற்றும் வராமல் பாதுகாக்கும்.

'ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ்' பிரச்சினையால் மூட்டு களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும். 18 வகையான வேதிப் பொருட்கள் இதில் உள்ளதால், பாக்டீரியா, பூஞ் சைக்கு எதிராக செயல்படும் தன்மை இதில் உள்ளது.

வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தினால் தான், முழுமையான பலன் கிடைக்கும்.

எப்படித் தயாரிப்பது?

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி வேரை 100 கிராம் வாங்கி, சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக மிக்சியில் அரைத்து, 1 லிட்டர் நீர் சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின், எட்டு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். அதன்பின், மெல்லிய துணியில் சிறிய துகள் கூட இல்லாமல் வடிகட்டி, கண்ணாடி சீசாவில் ஊற்றி, குளிர்பதனியில் வைத்து விடலாம்.

தேவையான போது, கால் டம்ளர் நன்னாரி சாறு, எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து குடிக்கலாம். சிலர் வெள்ளைச் சர்க்கரை, எலுமிச்சை சாறு கலந்து கெட்டியாக காய்ச்சி, ஆறவிட்டு வைக்கின்றனர். இது, அத்தனை ஆரோக்கியம் இல்லை.

எவ்வளவு குடிக்கலாம்?

அளவுக்கு அதிகமாக குடித்தால் பக்க விளைவுகள் இருக்கவே செய்யும். நன்னாரியில் உள்ள சாபோனின் அதிக அளவு சென்றால், வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.

வேறு உடல் கோளாறுகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்கள், இயற்கை மருத்துவரின் ஆலோசனைபடி நன்னாரி சாறு குடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள், வாரத்தில் ஓரிரு நாள்கள் மட்டும் குடித்தால் போதுமானது.

No comments:

Post a Comment