சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

சாமியார்கள் ஜாக்கிரதை! பூஜை பெயரால் பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை : சாமியார் கைது

திருமலை,மே 19- உடல் நலன் பாதிப்பை சரி செய்ய சிறப்பு பூஜை செய்வதாக கூறி இளம்பெண்ணை நிர்வாணமாக்க முயன்ற மோசடி சாமியார் கைது செய்யப்பட்டார். 

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ரேணிகுண்டா அடுத்த தாரகாராமா நகரை சேர்ந்தவர் ஹமாவதி (30). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்தநிலையில், காளஹஸ்தியை சேர்ந்த சுப்பையா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் ஹமாவதி தனது உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சுப்பையா,’உங்கள் வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் உடல் நலக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும்’’ என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஹமாவதியிடம் பூஜைக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும் என்றும் சாமியார் கூறியுள் ளார். அதற்கு ஹமாவதி ரூ.20 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டு முன்பணமாக ரூ.7,500அய் போன்பே மூலம் சுப்பையாவின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினார். 

கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு வீட்டில் பூஜை செய்ய இருப்பதாகவும் வீட்டில் உன்னை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது எனவும் ஹமாவதியிடம் கூறினார். இதனையடுத்து, ஹமாவதி தனது வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டார். இதையறிந்து கொண்டு சுப்பையா வந்து அவரது வீட்டில் 6 இடங்களில் கோலமிட்டு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை வைத்து ஒரு பொம்மையை வரைந்துள்ளார்.

இதன்பின்னர், அந்த பொம்மை வரையப்பட்ட இடத்தில் ஹமாவதியை நிர்வாணமாக அமரும்படி கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத ஹமாவதி, ‘’அவ்வாறு எந்த பூஜையும் வேண்டாம்’’ என கூறியுள்ளார். அத்துடன் இதை ஏற்க மறுத்த ஹமாவதி வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓட முயன்றார். ஆனால், சுப்பையா ஹமாவதியை வலுக்கட்டாயமாக அடித்து நிர்வாணமாக்க முயன்றுள்ளார். அதற்குள் ஹமாவதி அவசர போலீஸ் 100க்கு போன் செய்து தகவல் தெரிவித்ததால் ரோந்து பணியில் இருந்த ரேணிகுண்டா நகர காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தபோது சுப்பையா தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஹமாவதி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மோசடி சாமியார் சுப்பையாவை கைது செய் தனர். இவ்வாறு வேறு எங்காவது பூஜை செய்வதாக கூறி இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளானா என்று விசாரிக்கின்றனர்.


No comments:

Post a Comment