கருப்பு அங்கிகளா? காவி அங்கிகளா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 10, 2023

கருப்பு அங்கிகளா? காவி அங்கிகளா?

- பி.தட்சிணாமூர்த்தி -



நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து  இந்திய நீதித்துறையின்  மீது இந்துத்துவா  பாசிசத்தின் அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பன்முகத்தன்மை மற்றும் சமய சார்பற்ற  சுதந்திரமான நீதித்துறை இல் லாமல் இந்திய அரசியலமைப்பையும்  இந்திய நாடாளு மன்ற ஜனநாயகத்தையும்  பாதுகாக்க முடியாது என்ப தால்  ஒன்றுடன் ஒன்று  பிரிக்க முடியாத இம்மூன்றின் மீதும்  ஒரே சமயத்தில் தாக்குதலை  நடத்தி  தகர்ப்பதன் மூலம் தனது மதவாத நிகழ்ச்சி நிரலை நோக்கி  மேலும் முன்னேற முடியும்    என இந்திய காவி-கார்ப்பரேட்  கள்ளக் கூட்டணி நம்புகிறது. ராகுல் காந்தியின் நாடாளு மன்ற உறுப்பி னர் தகுதி பறிப்பு எளிதாக கடந்து போகும் மோடி  அரசின்  அரசியல் சூழ்ச்சி மட்டும் அல்ல; ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தும் இந்திய அரசியல் அமைப்பின்மீது நீதிமன்ற அனுமதியோடு நடத்தப்பட்ட தாக்குதல்  எனக் கூறலாம். இந்திய நீதித்துறையின் மீதும் அரசியலமைப்பு விதிகளின் மீதும் ஜனநாயகம் மற்றும் அரசியல் நாகரீகத்தின் மீதும்  இந்திய சட்டவியலை பயன்படுத்திக் கொண்டே வரலாறு காணாத இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

வரலாறு நெடுகிலும் அந்தந்த காலகட்டத்தின் அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கினை ஒட்டியே இந்திய நீதித்துறை  மாறியும் வளர்ந்தும்  வந்துள்ளது. இதன்  வரலாற்றை சுருக்கமாக திரும்பிப் பார்ப்பதன் மூலம் இன்றைய இந்துத்துவா பாசிசம் உருவாக்கிவரும்  அபாயகரமான நிலையை  எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

16 ஆம் நூற்றாண்டு முதல்

16-வது நூற்றாண்டில் வர்க்கங்கள் தெளிவாக பிளவுபடாத இந்து மன்னராட்சி காலத்தில் சட்டங்கள், விசாரணைகள், தீர்ப்புகள், தண்டனைகள் எல்லாம் இந்து புராணங்கள், ஸ்மிருதிகள்; மற்றும் முகலாய ஆட்சிகளின் போது முகமதிய ஷரியத் சட்டங்களின் பெயரால் தர்மங்கள்; கடவுளர்களின் மற்றும் ராஜ விசுவாசத்தின் பெயரால் நீதி நிர்வாகங்கள் செயல்பட்டு வந்தன.  

இரண்டாம் கட்டத்தில் பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தி யாவிற்குள் காலடி எடுத்து வைத்தது. 1640, 1687,  1690 ஆண்டுகளில் முறையே மெட்ராஸ், பம்பாய், பெங்கால், ராஜதானி நிர்வாக முறைகள் தோற்று விக்கப்பட்டன. பிரிட்டிஷ் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்ட பிர தேசங்களில் அவர்களது நலன்கள் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான நீதி நிர்வாகம் உருவாகி வளர்ந்தது.  

மூன்றாம் கட்டத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதி நிர்வாக தேவைக் காகவே 1726 ஆம் ஆண்டு கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை மூன்று ராஜதானி நகரங்களில் மேயர் நீதி மன்றங்கள் துவக்கப்பட்டன. இதன் பின்னர் தான் ஒரே சீரான நீதித்துறை உருவானது. 

நான்காம் கட்டத்தை 19-ஆம் நூற்றாண்டின் துவக் கத்திலிருந்து இந்திய அரசியலமைப்பு விதி அமலுக்கு வரும் 1950 வரையிலும் நிர்ணயிக்கலாம். 10.7.1833 லண்டன் பாராளுமன்றத்தில் பேசிய லார்டு மெக்காலே, ‘‘இந்தியாவில்  நமது எதிர்காலம் கணிக்க  முடியாத இருளில் உள்ளது’’ என குறிப்பிட்டார். இந்திய அரசியல் சுதந்திரத்தை திட்டமிட்டு தவிர்க்கும் அதே  வேளையில் இந்தியாவில் தனது காலனிய ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான தந்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு முறையான ஆட்சி நிர்வாகத்தை இந்திய மக்களுக்கு அளிக்க வேண்டிய நிலையில் இந்திய நீதித்துறையின் சீர்திருத்தம் என்பதும் தவிர்க்க முடியாததாக மாறியது. மெக்காலே பிரபு தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்ட கமிஷனின் தலைவராக 1834-இல் நியமிக்கப் பட்டார். அடுத்தடுத்த பிரிட்டிஷ் இந்திய சட்டக் கமிஷன்கள், சிவில் நடைமுறை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம்,  சாட்சியச் சட்டம் போன்ற  அடிப்படை சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் பாம்பே  நகரங்களில் 1862 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றங்கள் துவக்கப்பட்டன.  புதிய சட்டங்கள்,  விதிகள் நீதிமன்றங்களில் அமல்படுத்தப்பட்ட பிறகுதான் படு பிற்போக்குத்தனமான இந்து சனாதன மற்றும் ஷரியத் சட்ட விதிகள் முடிவுக்கு வந்தன.

1950 முதல் 1991 வரை

அய்ந்தாம் கட்டம் 1950-லிருந்து 1991-ஆம் ஆண்டு வரையிலானது. இக்காலகட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட ஆணையம் 1955 இல் அமைக்கப்பட்டு 1991-வரை  பன்னிரண்டு சட்ட ஆணையங்கள்; 143  பரிந்துரை அறிக்கைகள் வெளியாகின.  சர்வதேச நிதி நிறுவன சட்டம் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம், கனிம எண்ணெய்கள் (கலால் மற்றும் சுங்கத்தின் கூடுதல் கடமைகள்) திருத்தச் சட்டம், வேலைவாய்ப்பு பரிமாற்றங் கள் சட்டம் உள்ளிட்ட சுதந்திர இந்தியாவிற்கான ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டன. இணையாக பெரும்பாலான மாநிலங்களில்   சிவில் நிர்வாகத்தில் இருந்த  நீதி நிர்வாகம்   பிரிக்கப்பட்டு தனித்துறையாக் கப்பட்டு  ஏராளமான புதிய நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள், சட்ட நூலகங்கள் இந்தியா முழுவதும் உரு வாக்கப்பட்டன. உலகப் புகழ்பெற்ற  மக்கள் உரிமைப் போராளியும் நெறிசார் மக்கள் நீதிபதியுமான (Internationally renowned human rights activist and righteous  People’s  judge) நீதியரசர் வி.ஆர்.கிருஷ் ணய்யரைப் போன்ற நீதிபதிகள் இந்திய நீதித்துறைக்கு பெருமை சேர்த்தனர். 

நவீன தாராளமயக் காலம் 

ஆறாம் கட்டத்தில் 1992 இல் இருந்து 2014 வரை குறிப்பாக மன்மோகன் சிங் நிதி அமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும் இருந்த, ஒரு பகுதி பாஜக ஆட்சியும் இருந்த காலத்தில் (பதினைந்தாவது நாடாளுமன்றம் முடிய) இந்திய சட்டவியலில் ஏற்பட்ட  பெரும்பாலான மாற்றங்கள் அடிப்படையில் தாராளமய- தனியார்மய- உலகமயச்  சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளின் தேவைகளோடும் நிர்ப்பந்தங்களோடும்  தொடர்புடைய வைகளாக மாறியிருந்தன. அரசியலமைப்பு விதி 12  மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இண்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்  சட்டம்,  காப்பீட்டுச் சட்டத் திருத்தம், மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம்  போன்ற ஏரா ளமான ஆணைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.  நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், ரியல் எஸ்டேட்  (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், சரக்கு மற் றும் சேவை வரி சட்டங்கள்  போன்றவை இயற்றப்பட்டன. 

தீவிர வலதுசாரி ஆட்சிக் காலம்

ஏழாம் கட்டத்தில்  2014-லிருந்து இன்றுவரை தீவிர  வலதுசாரி   மதவாத  பாஜக ஆட்சியில் இந்திய சட்ட வியல், இந்திய நீதி நிர்வாகம்  மற்றும் இந்திய அரசிய லமைப்பு விதிகள்  சிதைக்கப்படும்  காலமாக மாறி யுள்ளது.  முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் சட்டம், ஜம்மு மற்றும் காஷ்மீர் அலுவல் மொழி சட்டம் ரத்து மற்றும் திருத்தச் சட்டம், தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மற்றும் ஏராளமான விதிகள் உருவாக்கங்களும் நாடாளுமன்ற விவாதங்கள் இன்றி ஏதேச்சதிகாரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

நீதித்துறையை 

காவிமயமாக்க முயற்சி

இதே காலத்தில் நீதித்துறையை  காவிமயமாக்கவும் மோடி அரசு முயற்சித்து வருகிறது. நீதிபதிகளை பரிந்துரைக்கும்  கொலீஜியத்தில்  அரசின் பிரதிநிதி களை நுழைத்து  நீதித்துறையின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தேர்வு முற்றி லும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பிராந்திய மற்றும் வகுப்புவாத கண்ணோட்டத்தில் இருந்து வேறுபட்டு  இருக்க வேண்டும் என முதலாம் சட்ட ஆணையம் (1958)   தனது பரிந்துரையில் கூறியிருந்தது. ஆனால் அப்பட்டமான  இந்துத்துவா நபரான விக்டோரியா கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார்.    அர சியலமைப்பை உருவாக்குவதில் நிர்வாகத்து க்கோ, நீதித்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கோ எந்த பங்களிப்பும் இல்லை; அரசியலமைப்பில் மாற்ற ங்கள் நாடாளுமன்றத்தில்தான் நடைபெறவேண்டும். அதில் வேறு எந்த அமைப்பும் வர முடியாது என்று குடி யரசுத் துணைத் தலைவர்  ஜகதீப் தன்கர் பேசியிருந்தார்.  ஏராளமான மொழிகள், இனங்கள், மதங்கள் கொண்ட இந்திய நாட்டில்  பெரும்பான்மை மத வாதத்தை விசிறி விட்டு  வெறுப்பு அரசியலின் உச்சத்தில் பெறப்படும் அசுரப் பெரும்பான்மையில் எந்தவித விவாதமும் ஆய்வும் இன்றிதான் நினைத்ததைச் செய்து கொள் ளலாம்  என பாஜக நினைக்கிறது. அதையே ஜகதீப் தன்கர் பிரதிபலித்தார்.

நீதிபதிகள்  பதவியில் இருக்கும் போதே  ஓய்வு  பெற்றதற்குப் பிறகு அதற்கு இணையான  மற்றொரு உயர் பதவியை  காட்டி  உயர்நீதி துறையை வளைக்கும்  போக்கு   வரலாறு காணாத அளவில் அதி கரித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய், அப்துல் நசீர் இவர்களுக்கு கவர்னர்களாகவும் மாநிலங் களவை உறுப்பினராகவும் பதவிகள் வழங்கப்பட்டன. இவற்றின்   பின்னணியை இந்திய பத்திரிகைகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் ஒளிவு மறைவின்றி வெளிப் படுத்தின. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ்-காரர் அசீமானந்தா உள்ளிட்ட 5 பேரை விடுவித்த நீதிபதி  கே.ரவீந்தர் ரெட்டி, அடுத்த சில மணி நேரத்தில் பதவி விலகி பாஜகவில் இணைய பகிரங்கமாக விருப்பம் தெரிவித்தார். 

மூத்த நீதிபதிகளின் 

பகிரங்க குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செலமேஸ்வர்  உள்ளிட்ட 4  நீதிபதிகள் 12.1.2018 அன்று  செய்தியாளர்களை  பகிரங்கமாக சந்தித்தனர். உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் ஒழுங்காக இல்லை; விரும்பத்தகாத பல  விஷயங்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளன என்று கூறினர். சோராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு சிபிஅய் நீதிபதி பி.எச்.லோயா மர்மமான முறையில் மரணம் அடைந்த  அந்த வழக்கை,  பணி மூப்பும் அனுபவமும் இல்லாத நீதிபதி மிஸ்ராவின் அமர்விற்கு மாற்றியதை  நீதிபதிகளின் பத்திரிகையாளர்  சந்திப்பு அம்பலப்படுத்தியது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் குறிப்பிட்ட  நீதிபதியின் அமர்விற்கு ஒதுக்கப்படும் ‘செலக்டிவ் கோர்ட்’ அல்லது ‘பெஞ்ச் பிக்சிங்’ என்பது போன்ற சூதாட்டங்களும் பகிரங்கமாக  வெளியாகின.  நீதிபதி அருண் மிஸ்ரா உச்ச நீதிமன்றத்தில் திடீரென்று செல்வாக்குமிக்க நீதிபதியாக எப்படி  உயர்ந்தார் என்பது கேள்விக்குறியானது. 2019 ஆம் ஆண்டு முதல் நீதிபதி மிஸ்ரா தலைமையிலான அமர்வுகளால் விசா ரிக்கப்படும் அதானி குழும நிறுவன வழக்குகளின் முடிவுகள் அதானி குழுமத்திற்கு  சாதகமாக சென்றதாக  செய்திகள் வெளியாகின. இதே   நீதிபதி அருண்குமார் மிஸ்ரா, பிரதமர் மோடி உலக அளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படும் பல்துறை மேதை என்று பகிரங்கமாக பாராட்டியிருந்ததுதான்  உச்சக்கட்ட கிளைமாக்சாக மாறியது.  இவருக்குத்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியை  நரேந்திர மோடி  பரிசாக வழங்கினார். 

உ.பி.யில் நடக்கும் 

பயங்கரங்கள்

தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்கள் நிகழ்வதில் முதன்மை மாநிலமாக போலிச் சாமியார்  ஆதித்யநாத்  ஆளும்  உத்தரப்பிர தேசம் உள்ளது.  நாடு முழுவதும் நடக்கும் வன்கொடு மை குற்றங்களில் 25.8 சத வீதம் உத்தரப்பிர தேசத்திலேயே நடக்கிறது. இம்மாநிலத்தின்  ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் ‘உயர்’ ஜாதி கயவர்களால்  கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெற் றோரிடம்கூட உடலை ஒப்படை க்காமல் ஆதித்யநாத் நிர்வாகம் அப்பெண்ணின் உடலை எரியூட்டியது. ஆனால், உ.பி. ஹாத்ரஸ் செசன்ஸ் நீதிமன்றம் இவர் களை விடுதலை செய்தது. இது நீதித்துறை வரலாற்றில் அவமானகரமான  சம்பவம் என அனைத்து ஜனநாயக இயக்கங்கள் குறிப்பிட்டன. இம்மாநில உயர்நீதிமன்ற  நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான அமர்வு  இந்தியாவில் மாட்டு இறைச்சி உணவை உண்பவர்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும்  குற்றத்திற்கு உரியவர்கள் என கூறியுள்ளது.  இந்திய நீதித்துறையில் முன்னெப்போதும் இல்லாத இந்த நிகழ்வுகள் நரேந்திர மோடியின் காலத்தில்தான்  நடைபெற்றன. 

மாநிலங்களின் அதிகாரம்

உயர்நீதித்துறை  ஒன்றிய அரசு மற்றும் உச்சநீதி மன்றத்தின் கூட்டு பொறுப்பில் உள்ளது.  அரசியலமைப்பு விதிகளை விதிகள் 233 - 237-இன்படி மாவட்ட நீதிபதி களின் நியமனம் உள்பட சார்பு நீதித்து றை  அந்தந்த மாநில அரசுகளின் அதிகாரத்தில் உள்ளன. இதை ஒழித்துக்கட்டும்  அடுத்த கட்ட  வேலையையும்  நீதித் துறையின் ஒட்டு மொத்தத்தையும் தன் வசப்படுத்தும் திட்டத்தையும்  இந்துத்துவா பாசிசம்  கொண்டிருக்கிறது. மொத்தத்தில், 16ஆம் நூற்றாண்டின்  படு பிற்போக்குத் தனமான   தர்பார்  பாணி இந்து சனாதன நீதித்துறையை உருவாக்குவதுதான் ஆர்எஸ்எஸ்-இன் திட்டமாகும். வழக்குரைஞர் ஒருவர் நையாண்டியாக இப்படி குறிப்பிட்டார். ‘‘யார் கண்டது அவர்களின் கற்பனை இந்து ராஷ்டிரா நீதி தர்பாரில் நீதிபதிகள்  எனப்படுவோர்  கருப்பு அங்கிகளுக்கு பதில் காவி அங்கிகள் அணிந்து தர்பார் மண்டபத்திற்குள் பிரவேசிக்கும் போது ஜெய் ஹனுமான் என முழக்கமிடுவார்கள் போலும்’’. மொத்தத்தில் ஏராளமான விமர்சனங்கள் குறை பாடுகள் பலவீனங்கள் இருந்தாலும்  நீண்ட  நெடிய மக்கள் போராட்ட  பின்புல வரலாறுகள் கொண்ட உல கின் மிகப்பெரும்  இந்திய நீதித்துறையை தனது ஆக்டோபஸ் கரங்களால் ஆர்எஸ்எஸ் சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.  2019 முதல்  நான்கு ஆண்டுகால ராகுல் காந்தி வழக்கின் நீதிமன்ற நாட்குறிப்புகளுடன் இக்கால கட்டத்தின் இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிகழ்வுகளின் காலவரிசையுடன்   ஆய்வு செய்தால் தெள்ளத் தெளிவாக இதை உணர்த்தும். ஆனால் ஆர்எஸ்எஸ் கும்பல் ஒன்றை மறந்துவிட்டது. வரலாற்றின் நீண்ட கால சுதந்திரப் போராட்ட வரலாறு கொண்ட இந்திய  மக்களின் நல்லிணக்க மனசாட்சியை தவறாக எடை போட்டுள்ளது. 2024 தேர்தல் சம்மட்டி அடி கொடுத்து இதை உணர்த்தும்.

நன்றி: ‘தீக்கதிர்', 10.4.2023


No comments:

Post a Comment