நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 9, 2023

நாடு முழுவதும் 4 கோடி வழக்குகள் தேக்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

புதுக்கோட்டை, ஏப். 9- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம், பொன்னமராவதி, கறம்பக்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என 3 புதிய நீதிமன்றங்கள் திறப்பு விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு புதிய நீதிமன்றங்களை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 3லு கோடி முதல் 4 கோடி வழக்குகள் தேங்கி இருக்கின்றன. ஒரு வழக்கு தீர்ப்புக்கு பின் மேல் முறையீடு செய்யப்படுகிறது. ஒரு வழக்கிற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த காலத்தை ஏன் குறைக்கக் கூடாது? என்று கேட்க வேண்டிய கேள்வி எழுந்துள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் வாதாடும்போது அதிகமாக 3 முதல் 5 நிமிடங்களுக்குள் வாதாடி முடிக்க வேண்டும். இதில் ரத்தின சுருக்கமாகவும், தெளிவாகவும் நீதிமன்றத்தில் எடுத்து கூறினால் விரைவாக நீதியை பெற முடியும்.

நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க ஏது வாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆன் லைன் முறை, இ-பைலிங், காணொலியில் வழக்கு விசா ரணை என்ற வசதி உள்ளது. இந்த வசதிகளை வழக்குரை ஞர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இன்னும் 2 ஆண்டுகளில் நீதித்துறையில் புரட்சி நடக்க உள்ளது. சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

காகிதம் இல்லாத முறையும் கொண்டு வரப்பட உள்ளது. 4 கோடி வழக்குகளை எப்படி தீர்த்து வைப்பது என நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டங்கள் மாறி வரு கின்றன. அதனை வழக்குரைஞர்கள் தெரிந்திருக்க வேண் டும். நீதிபதிகளின் கடினமான கேள்விகளுக்கு வழக்குரை ஞர்கள் கோபத்துடன் பதில் அளிக்க கூடாது. கோபம் இல்லாமல் பதில் அளித்தால் வெற்றிக்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு முதன்மை மாநிலம்

விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''தமிழ்நாடு நீதி நிர்வாகம் மற்றும் சிறைத் துறையில், உயர்நீதிமன்றத்தின் முழு ஒத்துழைப்பின் மூலம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நீதிமன்றங்கள் கட்ட மைப்புகள் மிக சிறப்பாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழும். வழக்குரைஞர்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது நிதி நிலைமை சரியில்லாததால் அதனை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. நிதி நிலைமை சரியானதும் வழக்குரைஞர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


No comments:

Post a Comment