பார்ப்பனரல்லாதவர்க்கு... 03.07.1927- குடிஅரசிலிருந்து..... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 14, 2023

பார்ப்பனரல்லாதவர்க்கு... 03.07.1927- குடிஅரசிலிருந்து.....

நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர் ஆட்சேபித்து வருவதும் உங்களுக்குத் தெரியும்.

தஞ்சை ஜில்லா துவார் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி அங்கு  கூடின சபையில், நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்றே தீர்மானமும் செய்துவிட்டார்கள். இத்தீர்மானம் ராஜ்யவாதிகளாக நடிக்கும் பார்ப்பனர்களுக்கும், திருப்தியாக சம்மதந்தான் என்பதற்கு உங்களால் பிழைத்து வரும் சுதேச மித்திரன் இந்து முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் கண்டிக்காமல் இருப்பதே போதுமான சாட்சியாகும். ஆராய்ச்சிக் குறைவினால் உண்டான குருட்டுத்தனமான மூடக் கொள்கை களின் பாசத்தால், கட்டுப்பட்டிருக்கும் உங்களை உள்ளே ரம்பப் பொடியை நிறைத்து வெளியே பொன்முலாம் பூசின நயவஞ்சகப் பேச்சால் இதுவரை ஏமாற்றி வந்த தைரியமும் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பு போன்றும் கோழை களான உங்களில் சிலர் அப்பார்ப்பனர்களுடன் சேர்ந்திருக்கும் தைரியமும், உங்களின் இழிவை நிலைநிறுத்தக் காரணமாய் இருந்தது. நான்கு ஜாதியான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு பதத்திற்கும் அவர்களின் இந்து சாஸ்திரத்தில் அர்த்தமெழுதப்பட்டிருக்கிறது. அதில் சூத்திரன் என்ற பதத்தின் அர்த்தம் அநேகருக்குத் தெரியாது.  உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று பார்ப்பனர்களுக்குத் தெரிந்திருந்தால் இத்தனை தைரியமாக நீங்களெல்லாம் சூத்திரர்கள் என்று தீர்மானம் செய்திருக்கமாட்டார்கள்.

சூத்திரன் என்னும் பதத்திற்குக் கிலேசமுடையவன், துக்கி, வேசிமகன், ஆசார மில்லாதவன், தேஜசில்லாதான், ஒழுக்க மில்லாதவன், ஏவற்றொழில் செய்வோன், சுத்தி இல்லாதவன், கண்டதைப் புசிப்போன், அடிமை என்று இதே இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தையுடையவர்கள் நீங்களானால் எங்களுக்குப் பார்ப்பாரிடம் இனிச் சண்டையேயில்லை. இந்த இழிவான பட்டத்தை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு இஷ்டமில்லை என்பதுண்மை யானால் உங்களின் வைதீகச் சடங்குகளைப் பூர்வீக உங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வந்துப் பார்ப்பாரப் புரோகிதர்களை நீக்கி விடுங்கள்.


No comments:

Post a Comment