அண்ணா - கலைஞர் பின்பற்றியது தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை இந்தியாவுக்கு வழிகாட்டும் அந்த ஈரோட்டுப் பாதையில் தொடருவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 4, 2023

அண்ணா - கலைஞர் பின்பற்றியது தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை இந்தியாவுக்கு வழிகாட்டும் அந்த ஈரோட்டுப் பாதையில் தொடருவோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மார்ச் 4- காஞ்சித் தலைவரான பேரறிஞர் அண்ணா அவர்களும், திருக்குவளையில் பூத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் ஈரோட்டுப் பாதையில்தான் பயணித் தனர். அந்த வகையில், நம் பயணமும் தொடர்கிறது, தேர்தல் களத்தில் வெற்றி முரசு கொட்டுகிறது.

'இன்று ஈரோடு, நாளை நம் நாடு!' என இந்த வெற்றிப் பயணம் தொடரும்; ஈரோடு கிழக்கைப் போல இந்தியா முழுவதும் விடியும் என்று ''உங்களில் ஒருவன்'' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அக்கடித விவரம் வருமாறு:

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல்.

மார்ச் ஒன்றாம் நாள் என்னுடைய 70 ஆவது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்ட ஆயிர மாயிரம் உடன்பிறப்புகளின் வாழ்த்துகளிலும், அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம் நெகிழ்ந்தேன். நேரில் வர இயலாத உடன்பிறப்புகள் பலர் அவரவர் பகுதிகளில் எளிமையான முறையில் பிறந்தநாள் விழாக்களை நடத்தி, எளிய மக்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளை செய்து என மனதை நிறைத்தனர்.

தி.மு. கழக மாநில- மாவட்ட- ஒன்றிய- நகர- பேரூர் அமைப்புகளின் நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.கழகத்தின் சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி நிர்வாகப் பிரதிநிதிகள், தோழமைக் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உடன் பிறப்புகளுடன் பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பதிவிட்டனர்.

மானுடத்தின் பேரன்பு மழையில் 

நனைந்து மகிழ்ந்தேன்!

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், பிற மாநில முதலமைச்சர்கள், பிற மாநில ஆளு நர்கள், இந்திய தேசிய காங்கிரசின் மதிப்பிற்குரிய சோனியா காந்தி அம்மையார், சகோதரர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல் வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைப் பரிமாறினர். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த், கலைஞானி - மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், தே.மு.தி.க பொதுச்செயலாளரும், அன்பு நண்பரு மான விஜயகாந்த்,  கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோரும், தமிழறிஞர்கள், பல்துறை வல்லுநர்களும் உளம் கனிந்த வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.  வெளிநாடுவாழ் தமிழர்கள், அயல்நாட்டுத் தூதர்கள் என எல்லைகள் கடந்து குவிந்த வாழ்த்துகளால் மானுடத்தின் பேரன்பு மழையில் நனைந்து மகிழ்ந்தேன்.

தி.மு. கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியினரும், சமூக வலைளத்தளங்களில் களமாடும் கழக ஆதரவாளர் களும்  #பிஙிஞிவிரிஷிtணீறீவீஸீ70 என்ற ஹேஷ்டேக்கை உலகளாவிய அளவில் ட்ரெண்டிங் செய்து அன்பை வெளிப்படுத்தியதை ஊடகச் செய்திகளில் கண்டு நெகிழ்ந்தேன். என்னை வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடப் பேரியக்கத்தின் தியாகம் மிகுந்த சாதனையின் நீட்சி!

தி.மு. கழகத்தின் தலைவராக - தமிழ்நாட்டின் முதலமைச் சராக இருக்கிறேன் என்றால் அது திராவிடப் பேரியக்கத்தின் தியாகம் மிகுந்த சாதனையின் நீட்சி. ஆதிக்கமற்ற சமு தாயத்தை உருவாக்கிட சமூகநீதி என்ற இலட்சியப் பாதையில் பயணிக்கும் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தலைவர் களான தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி என் நன்றியினைத் தெரிவித்தேன்.

70 வயதில் ஏறத்தாழ 56 ஆண்டு கால பொதுவாழ்க்கை!

70 வயதில் ஏறத்தாழ 56 ஆண்டுகளை பொதுவாழ்வில் கழித்து, தி.மு. கழகப் பணியிலும் - மக்கள் பணியிலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவனான என் னைத் தமிழ்நாட்டு மக்கள் இன்று முதலமைச்சர் என்ற பொறுப்பில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்குக் காரண மான, என்னை இந்த உலகத்திற்குத் தந்த தந்தைக்கும், தாய்க்கும் முதல் நன்றி செலுத்துவதுதானே முறையானதாக இருக்கும்! அதனால்தான் பிறந்தநாளில் தலைவர் வாழ்ந்த -நான் வளர்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி, என் அன்புத் தாயார் தயாளு அம்மாவிடம் வாழ்த்துகளைப் பெற்றேன். அதுபோலவே, சி.அய்.டி. காலனி இல்லத்திற்கும் சென்று தலைவர் படத்திற்கு மரியாதை செலுத்தி, ராஜாத்தி அம்மா அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற்றேன்.

உழைப்புதான் எனக்கு 

மகிழ்ச்சி - மனநிம்மதி

மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள், பேரப்பிள் ளைகள், உறவினர்கள் எனச் சொந்தங்களின் வாழ்த்து மழை யும் சேர்ந்தே பொழிந்தது. எத்தனையெத்தனை வாழ்த்துகள்.. எவ்வளவு பேரன்பு! ஒவ்வொரு பிறந்தநாளிலும் நான் பங்கேற்கும் சிறுமலர் பள்ளி மாணவமணிகளின் அன்பில் இந்தப் பிறந்தநாளையொட்டியும் மகிழ்ந்தேன். காணொலி வாயிலாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்குமானப் புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தேன். உழைப்பதில்தான் எனக்கு உற்சாகம். உழைப்புதான் எனக்கு மகிழ்ச்சி - மனநிம்மதி. அந்த உழைப்பைத் தொடர்வதற்கே பிறந்தநாள் எனும் அன்பு மழை ஆண்டுக்கொரு முறை பொழிகிறது.  வசவுகளால் என்னை வீழ்த்திவிடலாம் என நினைப்பவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி, வாழ்த்துகளால் என்னை ஊக்கப்படுத்தும் உடன்பிறப்பு களாலும், பொதுமக்களாலும் ஆண்டு முழுவதும் உழைப்பதற் கான ஆற்றலைப் பெற்றுவிடுகிறேன்.

அரசமைப்புச் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்

தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் இந்த உழைப்பு, இந்திய ஒன்றியம் முழுவதும் தேவைப்படும் காலம் இது. சமூகநீதி எனும் நெடும்பாதையில் திராவிட இயக்கம் மேற்கொண்டுள்ள நெடும்பயணம் என்பது இந்திய ஒன்றியத்திற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகாட்டியுள்ளது. சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முறையாகத் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களின் உரிமைக்கான குரலாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கியவர் பேரறிஞர் அண்ணா. இந்திய அரசியலை நெருக்கடி சூழ்ந்தபோதெல்லாம் ஜன நாயகத்தைக் காப்பாற்றும் போராளியாக - இந்தியாவின் குடியரசுத் தலைவர்களையும், பிரதமர்களையும் தீர்மானிக்கும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இன்று இந்தியாவை மதவாதப் பாசிச சக்திகள் சூழந் துள்ளன. பன்முகக்தன்மையைச் சிதைக்க நினைப்பவர்களின் கைகளில் நாடு சிக்கியிருக்கிறது. மாநில உரிமைகள் பறி போகின்றன. தாய்மொழிகளை அழித்து ஆதிக்க மொழி யினைத் திணிக்கும் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்கிறது. எந்த ஒரு தனி மனிதரும் சுதந்திரச் சிந்தனையுடன் வாழ முடியாத நெருக்கடி சூழ்ந்துள்ளது. அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையை இந்திய ஒன்றியம் எதிர்கொண்டுள்ளது. அதனால்தான், இந்திய அளவிலான தலைவர்களின் பார்வை மீண்டும் தெற்கு நோக்கித் திரும்பியுள்ளது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு. கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமை யில், கழகப் பொருளாளர் அன்பு நண்பர் டி.ஆர்.பாலு அவர்கள் வரவேற்புரையாற்ற, சென்னை தெற்கு மாவட்ட தி.மு. கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற என் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் மரியாதைக்குரிய மல்லிகார்ஜூன் கார்கே, ஜம்மு-காஷ்மீர் மாநில மேனாள் முதலமைச்சர் - ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநிலத் துணை முதலமைச்சர் - ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தி.மு.கழகம்தான் இந்தியாவுக்குத் 

திசைவழியைக் காட்ட வேண்டும்

பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தின் நோக்கம், என்னை வாழ்த்துவதற்கானது அல்ல. இந்திய ஒன்றியத்தில் உள்ள மக்கள் உரிமையுடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதே! விழாவில் அகில இந்தியத் தலைவர்கள் அனைவரும் அதனை வலியுறுத்தினர். நமக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் எதிராக இருப்பவர்களின் சூழ்ச்சியையும், வியூகத்தையும் உணர்ந்து கொண்டு, ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். காஷ்மீர் தொடங்கி ஒவ்வொரு மாநிலமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசியலில் ஆற்றிய பங்கை எடுத்துரைத்தனர். இன்றைய நிலையில் தி.மு.கழகம்தான் இந்தியாவுக்குத் திசைவழியைக் காட்ட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டனர்.

ஓரணியாக இணைந்து நின்று 

பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும்

ஒன்றுபட்ட - உறுதியான அணியாக நாம் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதையும், காங்கிரசைத் தவிர்த்துவிட்டு மூன்றாவதாகப் புதிய அணி அமைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் எவ்விதப் பயனையும் தராது என்பதையும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நாம் ஓரணியாக இணைந்து நின்று பாசிச சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதையும் ஏற்புரையாக மட்டுமல்ல, பிறந்தநாள் சூளுரையாகவும் தெரிவித்தேன்.  உயிர்நிகர் உடன்பிறப்புகள் திரண்டிருந்த திடலில், உங்களில் ஒருவனான நான் வெளியிட்ட அந்தப் பிரகடனத்தை, உங்களின் அயராத உழைப்பால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன்.  தமிழ் நாட்டிலும் புதுவையிலும் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதி களிலும் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உடன்பிறப்புகளின் கடமை. நம்முடைய உழைப்பால் உருவாகும் மகத்தான வெற்றியும், நாம் கட்டமைக்கும் கூட்ட ணியின் வியூகத்தால் இந்திய ஒன்றிய அளவில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முழுமையான வெற்றியாக மாற்றும்.

அந்த வெற்றிக்கு முன்னோட்டமாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறார் நமது கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அன்புச் சகோதரர் 

ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அவர்கள். அரசியல் எதிரிகளின் அவதூறுகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும், பொய்க் குற்றச்சாட்டுகளையும் வாக்காளர்கள் எனும் மக்கள் சக்தி மொத்தமாகப் புறக்கணித்து, தி.மு.கழக அரசு மீதும், தி.மு.கழகத்தின் தலைமையிலான  கூட்டணி மீதும் பெரும் நம்பிக்கை வைத்து இந்த வெற்றியைத் தந்துள்ளது. 

இடைத்தேர்தல் மட்டுமல்ல,  தி.மு.க ஆட்சியை மக்கள் மதிப்பீடு செய்யும் எடைத்தேர்தல்!

தந்தை பெரியாரின் பேரனான ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக் காகக் கலைஞரின் மகனான நான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பரப்புரை செய்தபோதே, இது இடைத்தேர்தல் மட்டுமல்ல,  தி.மு.க ஆட்சியை மக்கள் மதிப்பீடு செய்யும் எடைத்தேர்தல் என்று தெரிவித்தேன்.  ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான முறையில் எடைபோட்டு, தி.மு.க கூட்டணியே நாட்டுக்குத் தேவை என்பதை முடிவு செய்து, சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

‘இன்று ஈரோடு.. நாளை நம் நாடு..’ 

பிறந்தநாளில் உங்களிடமிருந்து நான் பெற்ற வாழ்த்து களையும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியையும் உழைப்பிற்கான வெகுமதியாகக் கருதுகிறேன். ஈரோட்டுப் பாதையில் தொடங்கியதுதான் நம் திராவிடப் பயணம். அந்தப் பாதையில்தான் காஞ்சித் தலை வனான பேரறிஞர் அண்ணா அவர்களும், திருக்குவளையில் பூத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் பயணித்தனர். அவர்களின் இலட்சியத் தடத்தில் நம் பயணம் தொடர்கிறது. தேர்தல் களத்தில் வெற்றி முரசு கொட்டுகிறது.

‘இன்று ஈரோடு.. நாளை நம் நாடு..’ என இந்த வெற்றிப் பயணம் தொடரும்.  ஈரோடு கிழக்கைப் போல இந்தியா முழுவதும் விடியும்.

-இவ்வாறு அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment