மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் மகிழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் மகிழ்ச்சி

சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உதவும் என்றும், மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதிவிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய முகமாக இருப்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைதான். 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது, தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் அறிக்கையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ் நாள் முழுவதும் வாழ்க்கைக்கு உதவி செய்யப்போகும் பல்வேறு நலத்திட் டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. திராவிட மாடல் கருத்தியலை முழுமையாக உள்ளடக் கிய நிதிநிலை அறிக்கையாக இது அமைந்துள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். 2011-_2021 வரை 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட்டு போன நிர்வாக சீர்கேடு மற்றும் நிதிச் சீரழிவுகள் காரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரூ.1,000 உரிமைத் தொகையை வழங்க இயலவில்லை.

நிர்வாகத்தை சரிசெய்து, நிதியையும் சரிசெய்ய தி.மு.க. அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக் குறையை நடப்பு மதிப்பீடுகளில் ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்.

தமிழ்நாட்டை நோக்கி ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தொழில் வளர்ச்சி பெருகியுள்ளது. வேளாண் உற்பத்தி பெருகி இருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. இந்த முன்னேற்றத்தின் அடையாளமாக நிதி யும் ஓரளவு தன்னிறைவு பெறும் சூழலை  எட்டி வருகிறது. இந்தநிலையில் மக்களுக்கு அளித்த மிக முக்கியமான வாக்குறுதியான ரூ.1,000 உரிமைத் தொகையை அறிவித்துள்ளோம். இதற்கு முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மகளிர் வாழ்வில் மாபெ ரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் மகத்தான அறிவிப்பாக இது இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது.

மதுரையில் மாபெரும் நூலகம்

தமிழ்நாட்டின் அனைத்து சமூகங்க ளையும், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் திட்டம், முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரால் மதுரையில் மாபெரும் நூலகம் போன்ற தமிழ் மற்றும் தமிழர் அறிவு மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும் அறிக் கையாக இது அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு தனிமனிதர் நலனை உள்ளடக்கியும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் வைத்தும் திட்டங்கள் தீட்டப்பட் டுள்ளன. நிகழ்காலத்துக்காக மட்டு மல்ல, எதிர்காலத்தையும் உள்ளடக்கி யதாக இந்த திட்டங்கள் அமைந் துள்ளன.

மகளிர், மாணவ -மாணவிகள், இளைஞர், ஏழை எளிய விளிம்பு நிலை மக்களைக் கை தூக்கிவிடுவதன் மூல மாக அவர்களை மட்டுமல்ல, அவர்கள் வழியில் வரவிருக்கிற தலைமுறையையும் சேர்த்து இந்த நிதிநிலை அறிக்கை வளர்த்தெடுக்க இருக்கிறது. இதனைத் தான் ஒற்றைச் சொல்லாக 'திராவிட மாடல்' என்று நாங்கள் சொல்கிறோம். இது ஒரு கட்சியின் அரசல்ல, ஓர் இனத்தின் அரசு; கொள்கையின் அரசு என்று நாங்கள் சொல்லி வருவதை உறுதிப்படுத்துவதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்களை அறியும் பக்குவம் இல்லாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இந்த நிதிநிலை அறிக்கை மின்மினிப் பூச்சியைப் போன்றது என்றும், மின்மினிப் பூச்சியில் இருந்து வெளிச் சம் கிடைக்காது' என்றும் சொல்லி இருக்கிறார்.

இந்த நிதிநிலை அறிக்கை என்பது உதயசூரியனை போல் அனைவருக்கும் ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப் பூச்சி அல்ல. உதயசூரியனின் வெப்பத்தில் மின்மினிப்பூச்சிகள் காணாமல் போய்விடும். இருண்ட காலத்தை தமிழ்நாட்டுக்கு வழங்கிய அவரால் உதயசூரியனின் ஒளியைப் பார்க்க முடியாமல் தவிப்பதையே அவரது பேட்டி உணர்த்துகிறது.

நிதிநிலைமை சீராக இருந்திருக்கு மானால் இன்னும் பல்வேறு திட்டங் களைத் தீட்டியிருக்க முடியும் என்பதே எங்களது எண்ணம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து வந்த இருண்டகால நிதிநிலைமையைச் சீர்செய்து தமிழ் நாட்டை தலைநிமிர வைக்கும் நிதிநிலை அறிக்கையை உருவாக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டங்களை முறையாக நிறைவேற்றி உரிய காலத்தில் முடித்து, முழுப்பயனையும் மக்களுக் கும், மாநிலத்துக்கும் வழங்க அமைச்சர் கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் அயராது பாடுபட வேண் டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திசை நோக்கிய நமது பயணம் தொடரும்! வெல்லும்! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment