மோடி பேசியது எல்லாம் மறந்து விட்டனவா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

மோடி பேசியது எல்லாம் மறந்து விட்டனவா?

ஜூன் 2015-இல் பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, “வங்க தேச பிரதமர் பெண்ணாக இருந்தபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாதென அறிவித்ததில் நான் சந்தோஷ மடைகிறேன்” எனப் பேசினார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா குறித்த, பாலின பாரபட்சம் நிறைந்த இந்தப் பேச்சால் இந்தியாவின் தரம் பன்னாட்டு அளவில் குறைந்துவிட்டதாக கடும் கண்டனங்களை எதிர்கட்சிகளிடமிருந்து மோடி சம்பாதித்துக் கொண்டார்.  

2015ஆம் ஆண்டின் மே மாதம், தென் கொரியத் தலைநகரான சியோலில் வாழும் புலம்பெயர் இந்தியர்களிடையே ஆற்றிய உரையில், ”கடந்த காலத்தில் (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) மக்கள் இந்தியாவில் பிறந்ததற்கு என்ன பாவம் செய் தோமென வருத்தப்பட்டார்கள்" எனக் கூறினார். அவரது கருத்து எதிர்க்கட்சிகளிடம் பெரும் கோபத்தைக் கிளப்பியது. சமூக வலைத் தளங் களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  டொரண்டோ நகரின் ரிகோ கொலிசியத்தில் புலம்பெயர் இந்தி யர்களிடையே பேசுகையில் முந்தைய இந்திய அரசாங்கங்களை   கேலி பேசிய மோடி, “முன்பெல் லாம் (காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது) இந்தியாவின் அடையாளம் என்பது ஊழலாக இருந்தது. நாங்கள் அந்த அடையாளத்தை திறன் கொண்ட இந்தியா என மாற்றியிருக்கிறோம்,” என்றார்.

2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சீனா சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் "முன்பு நீங்கள் இந்தியராக பிறந்ததற்கு அவமானம் அடைந்தீர்கள். இப்போது எனது நாடு இந்தியா என்பதில் பெருமைப்படுகிறீர்கள்” என்று கூறினார்.

இப்படியெல்லாம் பேசியவர் தான் பிரதமர் மோடி; இந்த நிலையில், ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியா குறித்து கேவலமாகப் பேசி விட்டார், இது மாபெரும் தலைக் குனிவு என்றும், மானம் கப்பலேறி விட்டது என்றும் பிஜேபியினர், சங்பரி வார்கள் கதறுவதை நினைத்தால் நகைச்சுவை யாகத்தான் இருக்கிறது.

தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில் இந்தியாவிலிருந்து இந்திய நிலையைக் குறித்துக் கருத்துத் தெரிவித்தாலும், அடுத்த நொடியில் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இறக்கை கட்டிப் பறந்து விடும். இதில் என்ன வெளிநாடு, உள்நாடு?

ராகுல்காந்தி பேசியதில் என்ன குறை -  தவறாக அவர் எதைப் பேசினார் என்பதைப்பற்றி விமர்சிப் பதை விட்டு விட்டு, துரும்பு கிடைத்தாலும் தூணாக்கிப் பேசுவது எல்லாம் பச்சை அரசியலே! 

குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி, "எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்லுவேன்?" என்று கேட்டாரே - அதன் உள்ளடக்கம் என்ன?

மோடிக்குப் பல நாடுகளிலும் விசா மறுக்கப் பட்டதுண்டே, என்ன காரணம்? கண்ணாடி வீட் டிலிருந்து கல்லெறியும் வகையறாக்கள் ஒருமுறை தம் முகத்தை நிலைக் கண்ணாடி முன்னின்று பார்ப்பது நல்லது!

No comments:

Post a Comment