பெண்ணுரிமை எழுச்சியின் முக்கிய மைல் கல் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் முதலமைச்சர் தலைமையில் பொன் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 17, 2023

பெண்ணுரிமை எழுச்சியின் முக்கிய மைல் கல் தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் முதலமைச்சர் தலைமையில் பொன் விழா

சென்னை, மார்ச் 17 தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் பொன் விழா கொண்டாடுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (17.3.2023) சென்னையில் கோலாகல விழா நடக்கிறது.  தமிழ்நாடு காவல் துறையில் இந்த ஆண்டு மாபெரும் முத்திரை பதிக்கும் ஆண்டு ஆகும். ஆம், பெண் காவலர்களின் பொன் விழா ஆண்டு ஆகும். 1973-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தான் தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்களின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். 

அவர் தொடங்கி வைத்த 'பெண் காவலர்கள்' 50 ஆண்டுகளை தொட்டு இன்று 'ஆண் காவல்துறை'க்கு இணையாக, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறார்கள். 1973-ஆம் ஆண்டு முதல்-முதலில் பெண் காவலர்  பிரிவு தொடங்கியபோது ஒரு துணை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர், ஒரு ஏட்டு, 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் காவலர் படைக்கு முதல் உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார். 22 பேருடன் தொடங்கப்பட்ட 'பெண் காவலர்'கள், தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. 1 டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 அய்.ஜி.க்கள் இந்த பெண் காவல்துறையில் அணிவகுத்து நிற்கிறார்கள். 1992-ஆம் ஆண்டில் சென்னையில் ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. 

அந்த காவல் நிலையத்தில் முதல் ஆய்வாளராக சிசிலி பதவி ஏற்றார். 2004-ஆம் ஆண்டு அதே ஜெயலலிதாவால், 'பெண் காவல் பட்டாலியன்' தொடங்கப்பட்டது. இந்த 'பெண் காவல் பட்டாலியனி'ல் பெண் காவல் கமாண்டோ படை, அதிவிரைவு படை போன்றவையும் அடங்கும். 1976-இல் தமிழ்நாட்டின் முதல் பெண் அய்.பி.எஸ். அதிகாரியாக திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநர் என்ற பெருமை பெற்றவர் லத்திகாசரண். சென்னையின் முதல் பெண் காவல் ஆணையரும் இவர்தான். இந்த பெருமையை லத்திகாசரணுக்கு வழங்கியவரும் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரால்தான். தமிழ்நாடு காவல் பிரிவைச் சேர்ந்த அய்.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் டில்லியில் சி.பி.அய். காவல்துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி பெருமை சேர்த்தார். சென்னையில் முதல் பெண் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டவர் ஜெயகவுரி. இப்படியாக சிறிது சிறிதாக உயர்ந்த பெண் காவலர்கள் தமிழ்நாட்டின் அனைத்து காவல் பிரிவுகளிலும் வியாபித்து நிற்கிறார்கள். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் காவல் பணியை பெண் காவலர்கள் தான் முழுக்கமுழுக்க முன்நின்று செய்கிறார்கள். 'கரண்டி பிடிக்கும் கை' என்று பேசப்பட்ட பெண் காவலர்கள்தான் துப்பாக்கியை கையில் ஏந்தி காவல் பணி செய்கிறார்கள். 

 லஞ்ச ஒழிப்புத் துறையில் 3 அய்.ஜி.க்களில் பவானீஸ்வரி, லலிதா லட்சுமி ஆகிய இருவரும், காவல்துறை துணைத் தலைவராக லட்சுமியும், காவல்துறை கண் காணிப்பாளர்களாக விமலா, சியாமளாதேவி ஆகியோ ரும் கோலோச்சுகிறார்கள். ரயில்வே காவல்துறையினருக்கு காவல்துறை கூடுதல் துணைத் தலைமை இயக்குநராக வனிதா தலைமை தாங்கி நிற்கிறார். காவலர்களைத் தேர்வு செய்யும் சீருடை பணியாளர் தேர்வாணய காவல்துறை துணை இயக்குநராக சீமாஅகர்வால் பெருமை சேர்க்கிறார். சேலம் காவல் ஆணையராக விஜயகுமாரி, திருச்சி ஆணையராக சத்தியபிரியா, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவராக ராஜேஸ்வரி பணியில் உள்ளனர். சென் னையில் மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையர் மகேஷ்வரி, துணை ஆணையர்களாக நாகஜோதி, மீனா, கூடுதல் துணை ஆணையராக ஷாஜிதா ஆகியோர் முக்கிய பதவிகளில் அங்கம் வகிக்கிறார்கள்.  சென்னை தலைமையக இணை ஆணையராக சாமுண்டீஸ்வரியும், வட சென்னை இணை ஆணையராக ரம்யா பாரதி, கிழக்கு இணை ஆணையராக திஷா மிட்டல் ஆகியோர் உள்ளனர். சென்னை பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரி தன்னந்தனியாக ரவுடியை பிடித்து சாதனை படைத்தவர். சமீபத்தில் பெண் உதவி ஆய்வாளர் மீனா, ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

இப்படி தமிழ்நாடு காவல்துறையின் திரும்பிய திசை எல்லாம் பெண் காவலர்களின் பணி தலை நிமிர்ந்து நிற்கிறது. முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட 'பெண் காவல்துறை'யின் பொன் விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தும் பணியை அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  (17.3.2023) பெற்றுள்ளார்.   சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த பிரமாண்ட விழா நடைபெறுகிறது. 'பெண் காவலர்'களின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் காவலர்களால்தான் நடத்தப்படுகிறது. குதிரைப்படை வீராங்கனைகள்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விழா நடக்கும் அரங்கத்துக்கு வரவேற்று அழைத்து வருகிறார்கள். 

'மோட்டார் சைக்கிள்' வீராங்கனைகளும் அணி வகுத்து வருகிறார்கள். அணிவகுப்பு மரியாதையும் பெண் காவலர்களால்தான் நடத்தப்படுகிறது. சைக்கிள் பேரணி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களின் சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலையையும் முதலமைச்சர் வெளியிடுகிறார். இன்றைய விழாவில் பெண் காவலர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.  விழாவை யொட்டி  நேரு உள் விளையாட்டரங்கம் பெண் காவலர்கள் மயமாக காட்சி அளிக்கிறது.

'தூணாக நின்று பெருமை சேர்க்கும் 'பெண் காவ லர்கள்' பொன் விழா கொண்டாடும் பெண் காவலர்களின் பெருமைகள் குறித்து காவல்துறை தலைமை இயக்குநர். சைலேந்திரபாபு  கூறியதாவது:- தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்களின் பங்களிப்பு முக்கிய மானதாகவும், பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் பெண் குற்றவாளிகளை விசாரித்து கைது செய்வது, பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒரு சில பணிகளில்தான் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது, புலன் விசாரணை செய்வது போன்ற பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. தற்போது அனைத்து பிரிவுகளிலும் பெண் காவலர்களின் பணி முக்கியமானதாக உள்ளது. அவர்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு தூண் போன்று உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள 1,498 காவல் நிலையங்களில் 503 காவல் நிலையங்களுக்கு சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு பெண் ஆய்வாளர்கள் தான் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் அவர்களது பணி சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் 228 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. அந்த காவல் நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டு 75 ஆயிரத்து 600 பெண்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனை பெண் காவலர்கள்தான் சிறப்பாக கையாண்டு உள்ளனர். கணினிப் பிரிவில் பெரும்பாலும் பெண் காவலர்கள்தான் பணியாற்றி வருகிறார்கள். முதல் தகவல் அறிக்கை போன்ற முக்கிய பணிகளை கணினிகளில் அவர்கள்தான் பதிவு செய்கிறார்கள். ஆக, சட்டம்-ஒழுங்கு பிரிவில் இருந்து முக்கியமான நிர்வாக பணிகளிலும் பெண் காவலர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment