சிறுபான்மை மக்களே, உஷார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

சிறுபான்மை மக்களே, உஷார்!

திரிபுரா, நாகாலந்து, மேகாலயாவில் மாநிலக்கட்சிகளை உடைத்து, உள்ளூர் ஆட்களை வளரவிட்டு, வாக்குகளை பிரித்து, மாநிலக்கட்சிகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அங்கு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. தற்போது அந்த மோசடி வெற்றிகளைக் காட்டி  கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது.

கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அம்மாநிலத்தின் வெற்றிக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். இவர்களின் வாக்கு வங்கியை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பெற்று வருகின்றன. பாரம்பரியமாகவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் கோட்டையாக இருக்கும் ஒரு மாநிலத்தை கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. இப்போதே களத்தில் இறங்கியுள்ளது.

2019 தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் தனது அட்டகாசத்தை முடுக்கிவிட்ட பா.ஜ.க.வால் அங்கு காலூன்ற முடியவில்லை. சபரிமலை விவகாரத்தில் உச்சகட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், தேசிய போக்குக்கு எதிராகத்தான், அக்கட்சி மாநிலத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. மாநிலத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் நான்கை வென்றன.வலதுசாரி ஆதரவாளர் களுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே பல வகுப்புவாத மோதல்கள் நடந்தாலும், மாநிலத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சி என்பது தடைபட்டே வந்துள்ளது. அதன்காரணமாக இந்த முறை திட்டமிடப்பட்ட மிகப்பெரிய  திட்டத்தை பா.ஜ.க. செய்துள்ளது.

அதன்படி ஈஸ்டர் வாரத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் வருகை தருவார்கள் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் 9, ஈஸ்டர் ஞாயிறு அன்று, 10 ஆயிரம் பாஜகவினர் 1 லட்சம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர்.

கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் வாரத்தில், ஆயிரக் கணக்கான பா.ஜ.க.வினர் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பரிசுகளுடன் வருகை தந்ததாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.அதேபோல் வலதுசாரி ஹிந்துத்துவவாதிகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஈத் அன்று முஸ்லிம்களின் வீடுகளுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.ஏப்ரல் 15 ஆம் தேதி 'விஷு பண்டிகை'யின் போது பா.ஜ.க.வினரின் வீடுகளுக்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட உள்ளனர்.  பாஜகவின் இந்த நடவடிக்கையை ஆளும் இடதுசாரிகளும், எதிர்க்கட்சியான காங்கிரசும்  உன்னிப்பாக கவனித்து வருவதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்

அய்தராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது, கேரளாவில் உள்ள சிறுபான்மையினருக்கு "சிநேக சம்வாத்" (பாசத்தின் செய்தி) ஏற்பாடு செய்யுமாறு கட்சியினரைக் கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையே இந்த திட்டம் ஆகும்.

மூன்று வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்ற பிறகு, டில்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள கேரளாவில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார். இம்முறை, வடகிழக்கில் அதற்கு அதிக ஆதரவை வழங்கிய கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவை   மோடி சுட்டிக்காட்டினார்.

கேரளாவில் இரண்டு ஆதிக்கக் கட்சிகளைச் சுட்டிக் காட்டி அம்மாநிலத்தில் இடதுசாரிகளும், காங்கிரசும் கடும் போட்டியாளர்களாக இருக்கும்போது, திரிபுரா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகப் போட்டியிட்டு பெற்ற வெற்றியை மோடி சுட்டிக் காட்டினார். 

மாநிலத்தின் பல்வேறு ஒன்றிய அரசின் திட்டங் களின் பயனாளிகளின் சாட்சியங்களை உள்ளடக்கிய "நன்றி மோடி" திட்டத்தையும் பிரச்சாரம் செய்ய  பாஜக திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் பா.ஜ.க. "நன்றி மோடி" வீடியோக்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு  வெளியிட்டு பெரிய அளவில் அனைவரிடமும் கொண்டுபோய் சேர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறது.

தேர்தல் கால கட்டத்தில் சிறுபான்மை மக்களை தாஜா செய்து அவர்களின் வாக்குகளைக் கபளீகரம் செய்யலாம் என்ற சூழ்ச்சியில், தந்திரத்தில் பா.ஜ.க. ஈடுபடுவது என்பது அவர்களின் பாணிதான்.

வாக்குகளைப் பறித்து அதிகாரத்துக்கு வந்து விட்டால் வாள்களைத் தூக்கிக் கொண்டு திரியக் கூடியவர்கள்தான் சங்கிகள் என்பது சிறுபான்மை மக்களுக்குத் தெரியாதா?

குடியுரிமைச் சட்டத்தை மறந்து விடுவார்களா? காஷ்மீர் மாநிலத்தைத் துண்டாக்கியதன் நோக்கம் புரியாதா?

சிறுபான்மைச் சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் இப்பொழுதே ஒருங்கிணைந்து  பா.ஜக.. பரிவார்களின் சூழ்ச்சிகளைத் தொடக்கத்திலேயே கிள்ளி ஏறிய முனைவது அவசியம், அவசரமாகும்.

No comments:

Post a Comment