கோயில் விழாக்களின்போது ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்திடுக! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

கோயில் விழாக்களின்போது ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்திடுக! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை மார்ச் 16  பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் விழாக்களின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.

சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில் தேர்வு நேரத்தில் பங்குனி விழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை விழாக்களை தள்ளிவைக்க உத்தர விடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "கோயில்  விழாக்களின்போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படு வதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விழாக்களை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

அப்போது தமிழ்நாடு அரசுத் தரப் பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், "தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019-ஆம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.அப்போது கோயில், விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "2019-ஆம் ஆண்டு பிறப் பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப் புடன் பின்பற்றப்படுகிறது" என்று தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத் தில்தான் நடத்த முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இருப்பினும், தேர்வு நேரங்களில் விழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.


No comments:

Post a Comment