"சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்திரர்களுக்குப் ‘பாடம்’ நடத்திய பார்ப்பனர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

"சுப்ரீம் கம்யூனிட்டியும், ஆகார ஸுத்தமும்”! சற்சூத்திரர்களுக்குப் ‘பாடம்’ நடத்திய பார்ப்பனர்கள்

அண்மையில்  இரண்டு காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வந்தன. இரண்டுமே கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற பார்ப்பன சங்க மாநாட்டில் பேசப்பட்டவை. (ஏற்கெனவே இந்த மாநாட்டில் ரங்கராஜ் என்ற மேனாள் தொலைக்காட்சி செய்தியாளர் பேசிய உரையில்தான் கலைஞரை ஜாதிய வன்மத்தோடு பேசியிருந்தார். அது கடும் கண்டனத்திற்குள்ளானது)

தற்போது வந்த காட்சிப் பதிவுகளில் ஒன்று சொறி விட் நடிகர் ஒருவர் பேசியது. ஒன்றிரண்டு திரைப்படங்களில் 'தலை'யை மட்டும் காட்டியவர் போலும். ஒரு பார்ப்பனர், தகுதியே இல்லாவிட் டாலும் எப்படி இன்னொரு பார்ப் பனரைத் தூக்கி விடுகிறார் என்பதற்கு அந்த உரையிலேயே சான்றும் தருகிறார்.

“க்ரியேட்டிவிட்டிக்கு பிரம்மனைச் சொல் வாங்க... இங்கே தி பெஸ்ட் பிரைன்ஸ் (மூளை) இன் தி வேர்ல்டு இருக்கு... பிராமண், பிரம்மன் பெரிய ட்ஃபரன்ஸ் இல்லைன்னு நான் நினைக்கிறேன். கிரியேட்டிவிட்டிக்குப் பேர் போன இந்த பிராமின் கம்யூனிட்டி இஸ் தி சுப்ரீம் கம்யூனிட்டி இன் த வேர்ல்டு. அந்த சுப்ரீம் கம்யூனிட்டிக்குள்ள கம்மி யூனிட்டி இருந்திடக் கூடாது” என்று பேசிய துண்டுக் காணொலி ஒன்று வெளியானது. “அது சரி உங்க வாயி... உங்க உருட்டு”ன்னு விட்டுவிட்டுப் போயிட்டாலும், அதென்ன சுப்ரீம் கம்யூனிட்டி இன் த வேர்ல்டு... இதை எங்கோ கேட்ட மாதிரி இருக்கில்லையா? "கிக்ஷீஹ்ணீஸீ க்ஷீணீநீமீ வீs tலீமீ suஜீக்ஷீமீனீமீ க்ஷீணீநீமீ வீஸீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ" - அப்படின்னு ஹிட்லர் பேசுனது தான். ஆரிய இனம் தான் உலகின் உச்ச இனம் என்பது இவர்களின் மாயை. இருப்பதிலேயே பெஸ்ட் கிரியேட்டிவிட்டி மூளை எல்லாம் அவாள் மண்டைக்குள் தான் ஒளிந்துகிடக்கிறதாம். சோஷியல் மீடியாக்களெல்லாம் அந்த மொட்டைத் தலையிலேயே தாளம் போட்டுக் கொண்டிருக்க,  இதுக்கு ஒரு சில மயக்கமுற்ற பார்ப்பனரல்லா தாரிடமிருந்து, “ஆமா... ஆமா...” என்று குரல்கள் வேறு வந்தன- “என்ன இருந்தாலும் கலைத் துறையில் அவர்களின் சாதனை இருக்கிறதே...” என்று!

“‘இருக்கிறதே’ன்னு சொல்லப்படாதுங்க... இருந்த தே”-ன்னு சொல்லுங்க. ஏன்னா, அடுத்த வங்களை நுழைய விடாமல் தடுத்துக்கிட்டிருந்த வரைக்கும் தான் பார்ப்பன ஆதிக்கம் எல்லா துறையிலும் இருந்தது. இப்போதும் ஆதிக்கம் இருக்கும் துறைகளெல்லாம் யாரையும் வர விடாமல் செய்யப்படும் லாபிகளால் தான். என்றைக்கு பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்து அனைவருக்கும் வாய்ப்பு என்ற நிலை உருவாகத் தொடங்கியதோ, அன்றைக்கே பார்ப்பன ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் பல்லிளிக்கத் தொடங் கிடுச்சுங்காணும்.

இசை என்றால் அவாள் தான், நடனம் என்றால் அவாள் தான், நடிப்பு என்றால் அவாள் தான், படிப்பு என்றால் அவாள் தான் என்று எங்கெல்லாம் ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் பார்ப்பனரல் லாதார் நுழைந் ததும் அவ்வளவு நாளும் “இதுதான் இசை, இவ்ளோ தான் நடனம், நாங்க நடிக்கிறதுதான் நடிப்பு, நாங்க சொல் றதுதான் படிப்பு” என்ற ஏமாற்று எல்லைகளையெல்லாம் தகர்த்தெறிந்து உலகப் புகழ் பெறும் சாதனையாளர்களைக் கண்டாகி விட்டது. அதற்குப் பிறகு அந்தந்த துறைகளில் பார்ப்பன ரல்லாத சாதனையாளர்களிடம் மோத முடியாமல் முண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? அந்த சொறி விட் நடிகர் போன்றவர்களால் சம காலத்தில் உச்சம் தொட்ட கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக் போன்றவர்களைத் தொடவே முடியவில்லையே! வடிவேலு என்ற கலைஞனின் உடல்மொழியும், உரையாடல் வெளிப்பாடும், மண்ணின் மணமும் இவாளுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது. கேட்டால் கிரியேட்டிவிட்டியில் உயர்ந்தவாளாம்!

இன்னொரு காணொலி! அதே மாநாட்டில் ஒரு பார்ப்பனப் பிரசங்கி பேசியிருக்கிறார். அவாளின் ஜாதி ஆணவமும், தீண்டாமை மனோபாவமும் எப்படி இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது அந்த உரை.

“தூத்துக்குடிக்கு உபந்யாசத்துக்குப் போயிருந்தேன்.

ஒரு நாடார் பையன் வந்தான். ‘அடுத்த ஜென்மம் நான் பிராமணனாப் பொறக்கணும்’னான்.

‘வேண்டாம்... வேண்டாம் நீ நாடாராவே பிற’ன்னேன்.

‘ஏன்’ அப்படின்னான். 

‘பிராமணனாப் பொறந்தா கஷ்டம்டா! ஆசா ரத்தை கடைப்பிடிக்கணும். நிறைய பிரச்சினை. நீ நாடாராவே இரு.’

‘இல்ல சாமி, நாங்க பாவம் பண்றோமே..’

‘நீ பாவம் பண்ணாலும், உனக்கு அருகதை இருக்கு. நீ குடிக்கலாம், கொள்ளையடிக்கலாம், கூத்தியாளோடு இருக்கலாம், சீட்டாடலாம்...’

‘இதெல்லாம் பாவம் இல்லையா?’

‘பாவம் தான்.’

‘இந்தப் பாவத்தை எப்படி போக்குறது?

‘மாதம் மாதம் அமாவாசை வருதோ இல் லையோ, நூறு ரூபாவும் ஒன்பது கெஜ வேஷ்டியும் வாங்கி வெச்சுக்கோ, என்னை மாதிரி பிராமணாள் யாராவது ஒருத்தர் இருப்பா, அவர்கிட்ட கொடுத்து நமஸ்காரம் பண்ணு. சகல பாபமும் அவனுக்குப் போயிடும்.’

உடனே அவன் கேட்டான். ‘சாமி அப்புறம் அந்த பாவத்தை நீங்க எப்படி போக்கிப்பேள்?’னான்

‘அதப்பத்தி நீ கவலப்படாதே’

‘இல்ல சாமி, நான் தெரிஞ்சுக்கிறேன்’னு

‘நாங்க பிரம்ம யக்ஞம்னு ஒன்னு பண்றோம். அதப் பண்ணியாச்சுன்னா... எங்களுக்கு சகல பாவமும் போய்டும்’னேன்.

உடனே அவன் சொன்னான். ‘அந்த பிரம்ம யக்ஞ்யத்தை நான் பண்ணலாமா?’

‘நீ பண்ணப்பிடாது. நீ பாவம் தான் பண்ணனும்.’

இதுக்கு மேல ஏதாவது விளக்கம் வேணுமா? நாடார்வாள் முடிஞ்சதோ, அடுத்து ஒரு கவுண் டர்வாள்.

‘இப்போ என்னை தங்க வச்சிருக்கிறவர் ஒரு கவுண்டர் தான். அவா ஆத்திலயும் சாப்பிட மாட்டேன். அவா ஆத்தில தான் தங்கறேன், ஆனா சாப்பாடு மட்டும் நம்மளவா ஆத்திலிருந்து வருது...!’ என்றவர், பேச்சின் தொடக்கத்திலேயே ஒன்று சொன்னார்.

“எனக்கு போன் வந்திண்டே இருக்கு.நீங்க பி.ஜே.பி.கிட்ட சொல்லுங்கோ... இந்த அரிஜன் அப்பாய்ண்ட்மெண்ட்டுக்குன்னா. நாங்க சொல் லிண்டு தான் இருக்கோம். நீ ஆகமத்தைப் படின்னேன் நான்”

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆவதற்கு எதிராக யாரிடம் காய் நகர்த்துகிறார்கள். யார் அவர்களுக்குச் சார்பாக இருக்கிறார்கள் என்று பி.ஜே.பி.யின் உண்மை முகத்தைக் காட்டிவிட்டார் திருச்சி கல்யாணராமன் என்ற அந்தப் பார்ப்பனர்.

இந்தப் பேச்சு பரவியதும் இவரின் இன்னொரு பேச்சிலிருந்தும் ஒரு காணொலித் துணுக்கு வந்தது.

இன்னொரு உபந்யாசம். “ஒரு முறை அரிமளம் போறேன். செட்டியார் ஊருக்கு! சாப்பாட்டுக்கு பிரா மணன் இருக்கானான்னு, ஏற்பாடு பண்ணிட்டுத் தான் ஒத்துக்கிறது. அப்படி இல்லன்னா, ஆத்துக்காரி கூட வர்றா... நாங்க சமைச்சுக்கிறோம். ... ஆகார ஸுத்தம் முக்கியம்!”

தீண்டாமை என்பது யாருக்கோ உள்ள பிரச்சினை என்று கருதிக் கொண்டிருக்கும், ஸூத்திர ஜாதியாரைத் தான் ‘ஷாத்து ஷாத்து’ என்று சாத்தியிருக்கிறார் கல்யாணராமன். தொடக் கூடாத, புழங்கக்கூடாத ஜாதி என்று ஒடுக்கப்பட்ட மக்களையும், உயர்ஜாதி என்றும் தங்களையும் கருதிக் கொண்டிருப்போரைத் தான், ‘சுத்தம் இல் லாதவர்கள், பாவம் செய்யப் பிறந்த வர்கள்’என்று பட்டியலிடுகிறார். இதற்கிடையில் நாடார் சமூகத்திலிருந்து எதிர்ப்புக் குரல் வந்ததும், நான் அந்தப் பொருளில் சொல்லவில்லை என்று அந்தக் கருத்துக்கு மட்டும் மன்னிப்பு கேட்டு ஒரு காணொலி வெளியிட்டாராம் திரு.கல்யாணராமன். 

கல்யாணராமன் என்ற தனிநபர் மட்டும் அல்ல; அவர் பேசிய இந்த ஒரு பேச்சு மட்டுமல்ல;  அவரை இப்படி பேசச் செய்ததும், அவாளை இப்படி கருதச் செய்ததும் ஹிந்து மதமும், வர்ணாசிரம - சநாதன தர்மமும், பார்ப்பன ஆதிக்கமும் தான்.

ஜாதி இருக்கும் வரை, ஹிந்து மதம் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும், மற்றவர்கள் அனை வரையும் இழிவாகக் கருதும் மனநிலையும் இருந்தே தீரும். அதை ஒழிக்காமல் வீராப்பு பேசுவதெல்லாம் வெற்றுக் கூச்சலே! எனக்குக் கீழ் ஒருவன் இருக்க வேண்டும் என்ற எண்ணமே, எனக்கு மேல் ஒருவன் இருக்கலாம் என்ற எண் ணத்தையும் உருவாக்குகிறது. இதை பிறப்பிலேயே உறுதிப்படுத்தும் கேவலம் ஒழிக்கப்படும்வரை எதுவும் மாறாது. அவாள் மாநாட்டுப் பேச்சுகள் ஒட்டு மொத்த பார்ப்பன சமூகத்தின் உள்ளத்து வெளிப்பாடு. அவாள்லாம் அப்படி இல்லை இப்போ என்று பேஷிக் கொண்டிருக்கும் பாதந்தாங்கிகளுக்கும், ‘பிராமணன்னா இப்படித் தான் இருக்கணும்’ என்று ஆச்சாரத்தைக் கொஞ்சம் அவசரத்துக்காக விட்டொதுங்கும் பிராமணாளுக் கும் சொல்லியிருக்கிறார். 

அந்தப் பெரியவா பேச்சை 'ப்ராப்தி' இருந்தால் கேளுங்கோ... புத்தி இருந்தால் திருந்துங்கோ?

- சமா.இளவரசன்


No comments:

Post a Comment