உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் புரட்சிகர தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 28, 2023

உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் புரட்சிகர தீர்மானங்கள்

*    தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு

*  ஒன்றிய அரசின் தேசிய புதிய கல்வித் திட்டம் அடியோடு நிராகரிப்பு

* விவசாயிகளின் கொள்முதலுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்

சத்திஸ்கர், பிப்.28 உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களிலும் இட ஒதுக்கீடு என்பது உள்பட பல புரட்சிகர தீர்மானங்கள் அகில இந்திய காங் கிரஸ் கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கடந்த  26 ஆம் தேதியன்று சத்திஸ்கர் மாவட் டம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆம் அனைத்து உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. சமூகநீதி சார்ந்த தீர்மானங்கள் அந்த அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரை யாற்றினார்.

''ரோகித் வெமூலா சட்டம்'' என்ற யெபரில் ஒடுக்கப் பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சிறப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்றும் தீர்மானிக்கப் பட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் நலனே இந்தச் சட்டத்தின் குறிக்கோள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்விக்கும், தன்மான உணர்வுக்கும் அவர்களுக்கு உள்ள உரிமையை இந்தச் சட்டம் பாதுகாக்கும் என்று கூறப்பட்டது. இதற்கென தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அமைச்சரவையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கம் வருமாறு: 

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய 

வாய்ப்பு - மதிப்பு

1. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான் மையினர் உள்பட ஒடுக்கப்பட்ட மக்கள் அனை வரின் கல்வி மற்றும் கவுரவ உரிமையின் பாது காப்பு.

2. பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தும் வகையில், ஒரு அமைச்சரவையை உரு வாக்குவது.

தனியார்த் துறைகளிலும் 

இட ஒதுக்கீடு!

3. தனியார்த் துறை வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு சம வாய்ப்புகள் கிடைக்க வழி வகுப்பது.

4. உயர்நிலை நீதித்துறையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்வது.

5. எல்லா வகையிலும் நிறைவான சமூகப் பாதுகாப்பு.

6. விவசாயிகளுக்குக் கொள்முதலுக்கான குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிப்பது. அதற்குக் குறைவான விலைக்கு வாங்குவதை சட்ட விரோதம் என அறிவிப்பது. உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் நியாயம் கிடைக்க வழி வகுப்பது.

7. ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை அடியோடு நிராகரிப்பது.

8. அதிகபட்சமாக ரூபாய் ஆறு லட்சம் வரை விவசாயிகளுக்கு ஒரே தவணையாக கடன் தள்ளுபடி வழங்குவது 

- முதலிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பா.ஜ.க.வின் எதேச்சதிகார போக்கிற்கு முடிவு கட்டவும், சமூகநீதியை எல்லா வகையிலும் நிலை நாட்டவும் உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. ஒதுக்கீடுகளிலும், சமூகநீதி சார்ந்த அம்சங்களிலும் பல சிக்கல்களை பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி விட்டதால், அவற்றையெல்லாம் களைந்தெறிய தீர் மானிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனை வருக்கும் கல்விக்கான உதவித் தொகை தொடர்ந்து கிடைக்க வழிவகுப்ப தென உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு வன்முறைத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த அவல நிலையைப் போக்க காங்கிரஸ் உறுதி பூண்டது. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரின் அராஜகச் செயல்களுக்கு முடிவு கட்டுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிறப்பு அமர்வில் 

காங்கிரஸ் கட்சி உறுதி

குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், மருத்துவ வசதிகள், கைம்பெண்களுக்கு ஓய்வூதியம், மாற்றுத் திறனாளி களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் வாழ்வாதார வசதிகள் வழங்குதல், மகளிருக்கான 33 சதவிகித ஒதுக்கீடு, விவசாயிகளின் நல்வாழ்வு போன்ற அனைத்து நலத் திட்டங்களையும் இந்த ''ரோகித் வெமூலா சட்டத்தின்'' மூலம் நிறை வேற்றுவதென்று இந்தச் சிறப்பு அமர்வில் காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது.


No comments:

Post a Comment