தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசின் சின்னத்துக்கு வாக்களித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்வீர்! தி.மு.க.வின் சாதனைகளுக்கும் சான்றளிப்பீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 10, 2023

தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசின் சின்னத்துக்கு வாக்களித்து இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்வீர்! தி.மு.க.வின் சாதனைகளுக்கும் சான்றளிப்பீர்!

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்:

அண்ணா கொள்கையைக் காற்றில் பறக்கவிட்ட அண்ணா தி.மு.க.வுக்கும் - பாசிசப் படுகுழிக்கு இழுத்துச் செல்லும் பி.ஜே.பி.,க்கும் பாடம் கற்பிக்கும் முக்கியமான தேர்தல்

நடக்க இருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசை வெற்றி பெறச் செய்து, அண்ணா கொள்கையைக் காற்றில் பறக்கவிடும் அ.தி.மு.க. வுக்கும், பாசிச பா.ஜ.க.வுக்கும் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்  என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

வரும் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் இதுவரை 80 பேர் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் கால அவகாசம் இன்று மாலையோடு முடிவதால், இந்த எண்ணிக்கை குறையக் கூடும் என்றாலும், தேர்தல் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கும், இ.பி.எஸ். அணிக்கும் இடையிலான போட்டியாகத்தான் அமையும்.

அண்ணா பெயரைத் தாங்க 

அருகதை உண்டா?

அண்ணா தி.மு.க. என்று எழுதக் கைகூசுகிறது; ஏனெனில், அண்ணா கொள்கைக்கும், இவர்களுக்கும் ஒட்டும் இல்லை - உறவும் இல்லை.

அண்ணா நாமம் என்று அவர்கள் சொல்லுவது எல்லாம் - அண்ணா கொள்கைக்கு நாமம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்த அளவுக்குத் துரோகம்?

தமிழ்நாட்டில் உள்ள வேலை கிட்டா இளைஞர் களுக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி செய்த துரோகம் சாதாரணமானதல்ல.

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்நாட்டையும் கடந்து இந்தியாவில் உள்ள வெளி மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கதவை அகலமாகத் திறந்துவிட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அல்லவா!

தமிழிலும் தேர்வு

தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில், ‘திராவிட மாடல்' ஆட்சியில் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழுக்குத் தனித் தாள் தேர்வு வைத்து, குறைந்த பட்சம் 40 மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளதே!

இவையெல்லாம் 18 வயதில் வாக்குரிமை பெற்ற இளைஞர்களுக்குத் தெரியாமல் போகுமா?

ஆளுநருக்கு எதிராகக் 

குரல் கொடுத்ததுண்டா அ.தி.மு.க.?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஊறுகாய் ஜாடியில் போட்டு  விஷம வேடிக்கை காட்டும் ஆளுநரை எதிர்த்து ஒரு குரல் கொடுத்த துண்டா அ.தி.மு.க.? 

சனாதனத்தை எதிர்த்தவர் அல்லவா அண்ணா!

சனாதனத்தை கடுமையாக எதிர்த்தவர் அறிஞர் அண்ணா! ‘ஆரிய மாயை, ஏ தாழ்ந்த தமிழகமே, புராண மதங்கள், தீ பரவட்டும்' என்றெல்லாம் ஆரியத் தையும், சனாதனத்தையும் எதிர்த்து எழுத்துக் கருத் தோவியம் தீட்டியவர் அறிஞர் அண்ணா.

இவற்றில் கடுகு மூக்கு அளவாவது நம்பிக்கை உண்டா அண்ணா தி.மு.க.வுக்கு?

திராவிட இயக்கத்தில் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் நேர் எதிரான பி.ஜே.பி. ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட்டால், நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று இவ்வளவுக் கேவலமாகவா போக வேண்டும் மூன்று முறை இடைக்கால முதலமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம்?.

பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன?

பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன? ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கோஷ்டிகளை மோதவிட்டு, இடையில் இரத்தம் குடிக்கும் வேலையைத்தானே பி.ஜே.பி. செய்துகொண்டு இருக்கிறது!

இரண்டு கோஷ்டிகளையும் கபளீகரம் செய்துவிட்டு, தமிழ்நாட்டில் தி.மு.க.வையடுத்து இரண்டாம் இடத் துக்கு எப்படியாவது வந்துவிடவேண்டும் என்பதுதான் பி.ஜே.பி.யின் ‘அந்தரங்க அஜெண்டா' என்பதைப் பாமர மக்களும் சர்வ சாதாரணமாக உணர்ந்து விட்டார்களே - பொது இடங்களிலும் பேசி வரு கிறார்களே!

வைதீக மொழியில் ஒன்று சொல்லுவார்கள் ‘மகன் செத்தாலும் பரவாயில்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்' என்று; அப்படித்தான் இ.பி.எஸ். அணி மண்மூடிப் போகவேண்டும் என்று ஒ.பி.எஸ். கோஷ் டியும், ஒ.பி.எஸ். அணி அடியோடு அழியவேண்டும் என்று இ.பி.எஸ். அணியும் நினைக்கின்றன என்றால், அந்த நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் என்று எச்சரிக்கின்றோம்.

ஈரோடு இடைத்தேர்தலில் இ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை கொடுத்து ஆதரவு கொடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் பி.ஜே.பி.யின் எண்ணமெல்லாம், பெரிய வித்தியாசத்தில் இ.பி.எஸ். வேட்பாளர் தோற்கவேண்டும் என்பதுதான்.

பி.ஜே.பி.யின் தந்திரம் என்ன?

இப்படி இந்த இரு கோஷ்டிகளும் இணைந்து விட்டன என்ற ஒரு பொதுப் பிம்பத்தை உருவாக் கினால்தான், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளின் கண்கள் தன்மீது பாயும் என்ற நரித்தனம் பி.ஜே.பி.க்கு!

‘குரங்கு அப்பம் பிரித்த கதை'யாக ஆகிவிடும் அல்லவா!

தி.மு.க.வின் சாதனைகளை 

எண்ணிப் பாரீர்!

தி.மு.க.வைப் பொறுத்தவரை அதன் நிலை என்ன? தேர்தல் அறிக்கை என்பது ஒரு சம்பிரதாயமான சடங்காச்சாரமாக இருந்த நிலை போய், அதனைத் தேர்தல் கதாநாயகனாக மாற்றிய சாதனைக்குரிய பெருமை தி.மு.க.வையே சாரும்.

22 மாத ‘திராவிட மாடல்' அரசில், நடந்த சாதனை களைப் பட்டியலிட்டால், மிகப்பெரிய மலைப்பாகத் தோன்றும்.

எடுத்துக்காட்டுக்காக சில இதோ:

மகளிர்க்கு இலவச பேருந்து முதல் 

பெண் கல்விக்கு உதவுவது வரை!

·  தேர்தலில் வெற்றி பெற்றதும் கரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கிட முதல் கையொப்பமிட்டு இரண்டு தவணைகளாகக் கொடுத்தார். 

· மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி

· விவசாய நகைக்கடன் தள்ளுபடி 

· பெட்ரோலுக்கான விலை குறைப்பு,

· வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல்,

· இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

· சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைத்தல்

· நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவி களின் பெயரில்தான் வழங்கப்படும் என்ற அறிவிப்பு

· 5 சவரனுக்கு மிகாமல் வைக்கப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி.

· அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற செயல்பாடு

· பயிற்சி முடித்த அர்ச்சகர்களுக்கு பணியை வழங்கியது,  பெண் ஒருவர் ஓதுவாராக நியமனம்

· இல்லம் தேடி கல்வித் திட்டம், 

· மருத்துவமனைக்கு வரமுடியாத முதியவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக  மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

· 2022 ஆம் ஆண்டு மழைவெள்ளத்தின் பாதிப்பு எதுவும் இல்லாமல் சென்னை உள்ளிட்ட பெருமழை பாதிப்பு நகரங்களை நன்கு திட்டமிட்டு வெள்ளத் தடுப்பை ஏற்படுத்தியது

· அய்ந்தாம் வகுப்புவரை காலை சிற்றுண்டி

உயர்கல்வியில் 

பெண்களுக்கு முக்கியத்துவம் 

தமிழ்நாடு என்னதான் வளர்ந்த மாநிலமாக இருந் தாலும், உயர்கல்வி படிப்பில் மாணவ - மாணவிகளுக்கு இருக்கும் தடைகள் அவர்களின் எதிர்காலத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. அதனை கருத்தில் கொண்டு தி.மு.க. தலைமையிலான அரசு உயர் கல்வியில் சேரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங் கும் திட்டத்தினை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டம் வாயிலாக இலட்சக்கணக்கான ஏழை-எளிய மாணவிகள் பயன்பெறுவார்கள்.

(பெண் கல்விக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று சொன்னவர் அல்லவா தந்தை பெரியார்!).

ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். அவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. இது தொடர்பாக திமுக பெரியாரிய கொள்கையோடு உறுதியாக இருக் கிறது. பெண்கள் நலன் மற்றும் அவர்கள் சாதனைகள் புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும், அனைவரும் இலவசமாக பேருந்துகளில் சென்று வரும் வகையிலும் இலவசப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் வாயி லாக பல கோடிப்பெண்கள் பலன் பெற்றுள்ளனர். 

முதலீடு ஈர்ப்பு 

முதலீடு ஈர்ப்பில் திமுக அரசு தனது ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் ரூ.68 ஆயிரத்து 375 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளது. இதன் வாயிலாக 2 இலட்சத்து 5 ஆயிரத்து 802 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசின் சார்பில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

சமூகநீதி-சம உரிமை

தமிழ்நாட்டிற்கு ‘சமூக நீதியின் தொட்டில்' என்ற அடைமொழியும் உண்டு. அதனை மீண்டும் உறுதி செய்யும் பொருட்டு அரசு அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவி அறிவிப்புகள் மற்றும் திட்ட முன் னெடுப்புகள் அரசின் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்தது.

ஊட்டச் சத்து திட்டம்

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடம் வளர்த் தெடுக்கும் நோக்கத்தோடு இந்தத் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது. பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.  மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு,  ஊட்டச் சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பான ஊட்டச் சத்து திட்டம் ஏற்படுத்த அரசு முடிவெடுத் துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் குழந்தைகள் பயனடை வார்கள்.

தகைசால் பள்ளிகள்  திட்டம்

தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக் கப்படும். முதற்கட்ட ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும். கட்டடங்கள் நவீனமயமாக்கப்படும். மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கக் கூடிய அதே நேரத்தில் கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினை செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ள டக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளிகளில் உருவாக்கப் படும். இந்த வகைப் பள்ளிகள் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். 

நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கக்கூடிய திட்டம் 

கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல நகர்ப் புறங்களில் இந்த மருத்துவ நிலையங்கள் முதற்கட்டமாக சென்னைப் பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும் திட்டம்.

இந்த மருத்துவ நிலையங்களுக்கு ரூ.180.45 கோடி செலவில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். இந்த 708 மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் புறநோயாளிகள் சேவைகள் செயல்படுத்தப்படும். இந்த நிலையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இந்தத் திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் ஏழைகள் இலவச மருத்துவ சேவை பெறுவதை உறுதி செய்து 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழ்வு எனும் இலக்கினை தமிழ்நாடு எட்டும்.

'உங்கள் தொகுதியில் 

முதலமைச்சர்' திட்டம்

இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த, தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் செயல்முறை நடைமுறைக்கு வந்துள்ளது

234 தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப் படாத அவசியத் தேவைகள் குறித்து அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப் பினரும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பரிசீலனை செய்வார்கள். அடுத்து வரும் சில நிதியாண்டுகளில் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும்.  ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தங்களுடைய தொகுதி மக்களின் தேவையை அறிந்து அந்தந்த மாவட்ட  ஆட்சியரிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும். அந்தப் பட்டி யலிலுள்ள மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களில் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற அரசு முன்னெடுத்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அவர் மகன் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று குறைந்த காலத்தில் தொகுதிக்கு மக்கள் பாராட்டும் வகையில் நன்மைகளை செய்துள்ளார் - தொகுதி மக்களிடம் நற்பெயரையும் ஈட்டியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக அவர் திடீர் மரணம் அடைந்து விட்டதால், அவரின் தந்தையான திரு.ஈ.வெ.கி.ச.இளங் கோவன் போட்டியிடும் நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளரின் 

தனிச் சிறப்புகள்

அரசியலில் நிறைந்த அனுபவமும், முதிர்ச்சியும் நிறைந்தவர். சட்டப் பேரவை உறுப்பினராகவும், ஒன்றிய அரசில் அமைச்சராகவும் இருந்த அனுபவக் களஞ்சியம் அவர்.

இவரைவிட சிறந்த வேட்பாளரை அத்தொகுதியில் கண்டுபிடிக்க இயலாது.

ராகுல் காந்தியின் குமரிமுதல் காஷ்மீர்வரையிலான ஒற்றுமை நடைப்பயணம் இந்தியத் துணைக் கண்டத் தையே உலுக்கி எடுத்துவிட்டது. குறிப்பாக பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைமையையும், ஆளும் பிரதமர் உள்பட அமைச்சர்களின் வயிற்றிலும் புளியை கரைத்துவிட்டது.

பிரதமரைக் கிடுக்கிப் பிடிபோட்டுத் திணற வைத்த ராகுல் காந்தி!

குறிப்பாக, நாடாளுமன்றத்தில் அதானியின் அபார பொருளாதார வளர்ச்சியையும், சறுக்கலையும் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி மக்களவையில் எழுப்பியவை வெறும் கேள்விகள் அல்ல - ‘‘அணுகுண்டுகள்!''

மறுநாள் பிரதமர் மோடி அவற்றுக்கெல்லாம் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் பெரும் ஏமாற்றம்தான்!

பந்தை அடிக்க முடியாத பேர்வழி காலை அடிப்பது போல, ஆடியது எல்லாம் தப்பாட்டம்தான் (Foul Game).

ராகுலின் கேள்வி ஒன்றுக்காவது 

பிரதமரால் பதில் சொல்ல முடிந்ததா?

 ராகுலின் ஒரு கேள்விக்குக்கூடப் பதில் அளிக்க முடியாமல் மூச்சுத் திணறும் நிலைக்குப் பிரதமரைத் தள்ளி, நாட்டு மக்கள் மத்தியில் பேருரு எடுத்துவிட்டார் ராகுல் காந்தி.

வடபுலங்களிலும் பி.ஜே.பி. எதிர்ப்பு அலை பீறிட்டுக் கிளம்பிவிட்டது. எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற நிலைதான் பி.ஜே.பி.,க்கு இன்று.

இந்தியாவில் ஒரு தாக்கத்தை 

ஏற்படுத்தும் தேர்தல்!

இத்தகு சூழலில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் பெறும் வெற்றி இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

‘ஒரே நாடு' என்றும், ‘ஒரே மதம்' என்றும், ‘ஒரே கலாச்சாரம்' என்றும், ‘ஒரே மொழி' என்றும் நாட்டை நாசகார பாசிசத்தின் படுகுழிக்கு இழுத்துச் செல்லும் பி.ஜே.பி.யிடமிருந்து நாட்டை மீட்க, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யு.பி.ஏ.) வெற்றி பெற்றாகவேண்டும் -  2024 இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில்!

அதற்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது ஒரு தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும். அந்த வகையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் பெருமை தந்தை பெரியார் பிறந்த ‘திராவிட மண்'ணுக்கானதாகவே இருக்கட்டும்!

வாக்காளர்களின் கடமை என்ன?

கூட்டணி கட்சிகளும் சரி, கட்சிக்கு அப்பாற்பட்ட வர்களும் சரி இந்தத் தேர்தல் மிக முக்கியமானது - நமக்கு  இருக்கும் கடமை என்பது எதிர்காலத்தின் நம்பிக்கை என்னும் ஒளியைப் பாய்ச்சுவதாக அமையவேண்டும்.

கரணம் தப்பினால் மரணம்!

கரணம் தப்பினால் மரணம் என்பதை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களே மறவாதீர்! மறவாதீர்!!

வாக்களிப்பீர் கை சின்னத்திற்கே! அது இக்காலச் சூழலில் நாட்டு மக்களுக்குக் கைகொடுக்கக் கூடியதாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

முகாம்: திருச்சி

10.2.2023


No comments:

Post a Comment