பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 3, 2023

பதிலடிப் பக்கம்

‘தமிழ்நாடு' எனும் வரலாற்றுப் பொன்னேடும்

தந்தை பெரியாரின் அரும் பணியும்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ.,பி.எச்.டி

‘தமிழ்நாடு' என்பது தமிழ் மக்களின் உணர்வோடும் உயிரோடும் ஒன்றிக் கலந்த உயிரோவியம்! அது தமிழர்களின் அடையாளச் சின்னம்! அது ‘தமிழகம்' என்றும் 'தமிழ்நிலம்' என்றும், ‘தமிழ்கூறும் நல்உலகம்' என்றும் ‘தென்னாடு' என்றும் தொன்று தொட்டு பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதன் வரலாற்றுப் பெயர் ‘தமிழ்நாடு' என்பதுதான் என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

‘தமிழ்நாடு' என்னும் பெயர் நம் இன எதிரிகளுக்கு இன்று எரிச்சலூட்டும் பெயர்! அது மட்டுமா? ‘திரா விடம்', தமிழ், தமிழ்நாடு என நம்மை அடையாளப் படுத்தும் அனைத்தும் பார்ப்பனர்க்கு எரிச்சலூட்டுகின் றன. இவை நம் கோட்பாடுகளின் குறியீடுகள்! அத னால் அவர்களுக்கு எரிச்சல்!

1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 12 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதனை மொழி அடிப்படையில் 21 பிரிவுகளாகப் பிரித்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்டபோது ஆந்திர, கருநாடக, கேரளக் காங்கிரஸ் கமிட்டிகள் என்று பெயர் பெற்ற போது ‘சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டி' என்றே தமிழகக் காங்கிரசிற்குப் பெயரிட வேண்டும் என்று பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தனர். அப்போது காங்கிர சில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகம்! இந்தச் சூழ்நிலை யில் பெரியார் 1919இல் தன்னைக் காங்கிரசில் இணைத் துக் கொண்டார். ஓராண்டுக் காலத்திற்குள் காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராகப் பெரியார் உருவெடுத்தார்.

இந்தச் சூழ்நிலையில் 1920இல் காங்கிரசுக் கமிட்டி யின் பெயர் மாற்றம் பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப் பட்டன. ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி' என்று பெயர் வைப்பதைப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1920இல் மட்டுமல்ல, 1956லும் மொழிவழி  மாநிலங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலும் ‘தமிழ்நாடு' என்ற பெயரைச் சென்னை மாநிலத்திற்குச் சூட்ட விடாமல் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்தார்கள் என்பதைப் பெரியாரின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

1920இல் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர் வைப்பதில் பெரியாரும் அவருடைய நண்பர் களும் வெற்றி பெற்றார்கள்!

ஓர் அரசியல் கட்சிக்குத் ‘தமிழ்நாடு' காங்கிரஸ் என்று பெயர் சூட்டப் பெற்ற முதல் நிகழ்வு இதுதான்.

ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு ‘சென்னை ராஜ்ஜியம்' என்ற பெயரைச் சுமந்து கொண்டிருந்தது. இதனை மாற்றக் கருதிய பெரியார் போகுமிடமெல்லாம் ‘தமிழ்நாடு' ‘தமிழ்நாடு' என்று வாய்வலிக்கப் பேசினார்! கைவலிக்க எழுதினார்! ‘தமிழ்நாடு' என்ற பெயரை வழக்காற்றில் கொண்டு வந்து மக்கள் உள்ளங்களில் ஆழமாக வேரூன்ற வைத்தார். ‘தமிழ்நாடு' என்ற இந்த ஒற்றைச் சொல்லால் தமிழ் மக்களை உயிர்த்தெழச் செய்ய முடியும் என்று பெரியார் உறுதியாக நம்பினார்.

2.5.1925இல் வெளிவந்த முதல் ‘குடிஅரசு' இதழ் ‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவ தோடு அதனைத் ‘தாய்த் திருநாடு' என்று போற்றுவ தைக் காண்கிறோம். அதே இதழில் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் மறைவையொட்டி எழுதப் பட்ட இரங்கலுரையில் மூன்று இடங்களில் ‘தமிழ்நாடு' இடம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வந்த ‘குடிஅரசு'இதழ்கள் எல்லாவற்றிலும் ‘தமிழ்நாடு' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

1917இல் நீதிக்கட்சியினர் தொடங்கிய ‘திராவிடன்' நாளிதழ், அதன் பத்தாவது ஆண்டில் (1927) விற்பனை சரிந்து இதழ் நின்று விடும் நிலைக்கு வந்து விட்டது. இதனை அறிந்த பெரியார் பெரிதும் வருந்திப் பின் வரும் அறிக்கையை வெளியிட்டார்.

‘தமிழ்நாடு என்பதாக 10 ஜில்லாக்கள் கொண்ட ஒரு நாடு, தமிழ் மக்கள் - அதாவது பார்ப்பனர் அல்லாதார் என்பதாக 2 கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகம் தங்கள் முன்னேற்றத்திற்கும் சுயமரியாதைக்கும் விடு தலைக்கும் என்பதாக ஏற்பட்ட ஒரு தமிழ் தினசரி பத்திரிகையை நடத்த முடியாமல் விட்டு விடுவ தென்றால் நமது சமூகத்தின் தாழ்ந்த நிலையைக் காட்ட இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்." (குடிஅரசு, 6.3.1937)

தமிழ்நாடு அப்போது (1927) பத்து மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. மக்கள் தொகை இரண்டு கோடிப் பேர், அதுவும் பார்ப்பனரல்லாத மக்களாக இரண்டு கோடிப் பேர் வாழ்கிறார்கள்! என்று வரை யறை செய்து தமிழ்நாட்டைப் பற்றிய ஓர் உருவக் காட்சியை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கிறார் பெரியார்.

தம் (சுய) நினைவின்றி வாழ்ந்த மக்களுக்கு அவர்தம் இனப் பெயரை எடுத்துரைத்துத் தாய்மொழி உணர்ச்சியூட்டி ‘தமிழ்நாடு உன் தாய்த்திருநாடு‘ என்று ஊர்தோறும் முழங்கி மக்கள் நெஞ்சில் தமிழ்நாட்டைப் பதிய வைத்த பெருமை தந்தை பெரியார் அவர்க ளையே சாரும். ‘தமிழ்நாடு' என்பதைப் பற்றி எவரும் பேசாத காலத்தில் பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு ‘தமிழ்நாட்டை' முன்னெடுத்து முழங்கி வந்தார்.

‘தமிழ்நாடு' என்ற சொல்லாட்சியைக் கேட்டதும் மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுவதைப் பெரியாரும் அவர் உருவாக்கிய தலைவர்களும் உணர்ந்து மகிழ்ச்சியடைந்தனர். பெரியார் ஊன்றிய ‘தமிழ்நாடு' என்னும் உணர்ச்சி, முளைத்துச் செழித்து வளர்ந்து அவர் காலத்திலேயே பயன் தந்ததைப் பார்த்து மகிழ்ந்தார் பெரியார்.

1937இல் இராசகோபாலாச்சாரியார் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆச்சாரியார் பள்ளிகளில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார்.

ஹிந்தி ஆரிய மொழி; அதைக் கட்டாயமாக்கித் திணிக்க நினைப்பது மறைமுகமாக சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சிஎன்றும் இது திராவிட மக்கள் மீது ஆரியர்கள் நடத்தும் பண்பாட்டுப் படையெடுப்பு என்றும் பெரியார் கருதினார். தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு ஆகியவை ஹிந்தியாலும் சமஸ்கிருதத்தாலும் சீரழிக்கப்பட்டு அழியும் நிலை உருவாகி விடும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையோடு உணர்ந்து கட்டாய ஹிந்தியை எதிர்த்துக் களம் அமைத்தார் பெரியார். பெரியாரின் அழைப்பை ஏற்று அலை அலையாகத் தமிழ் மக்கள் ஹிந்தி எதிர்ப்புப் போர்க் களத்தில் குதித்தனர்.

ஹிந்தியை எதிர்த்துத் திருச்சியிலிருந்து புறப்பட்ட தமிழர் பெரும் படையை வரவேற்கச் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடை பெற்றது. ஓரிலக்கத்திற்கு மேற்பட்டோர் திரண்டிருந்த அக்கூட்டத்தில் பேசும் போதுதான் தந்தை பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று முழங்கினார். பெரியாரின் உள்ளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த உரிமை உணர்ச்சி அணை உடைத்துப் பாய்ந்த வெள் ளத்தைப் போலப் பீறிட்டுக் கிளம்பியதைக் கேட்ட மக்கள் "தமிழ்நாடு தமிழருக்கே" என்று விண்ணதிர முழங்கினார்கள்.

தமிழ்நாடு தமிழ்நாடு என்று முழங்குவது எதற்காக? இதோ தந்தை பெரியார் 1938இல் விளக்குகிறார்.

"தமிழ்நாட்டுத் தொழில்துறைகள் தமிழனுக்குப் பயன்படவில்லை. இரும்புத் தொழிலில் பம்பாய்க்காரர்; துணித் தொழிலை ஆமதாபாத்காரர்கள் கைப்பற்றிப் பயனடைகிறார்கள் தமிழ்த் தொழிலாளிக்கு இங்கு வேலையில்லை; லேவாதேவித் தொழிலை மார்வாரி நாட்டானும் குஜராத்தி நாட்டானும் ஏகபோக உடை மையாக்கி அவர்கள் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால், தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத் திருகிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள். இவ்வாறு ஏமாற்றி வஞ்சித்துத் தேடும் செல்வம் அத்தனையும் பகற்கொள்ளை - வட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவது போல் கோடி கோடியாய்ச் சிந்து மாகாணத்திற்குக் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோசமான நிலைக்கு வந்து விட்டார்கள். மணல்வீடு கட்டிச் சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி - பாப்பராகி - இன்சால்  வென்டாகித் தற்கொலை செய்து கொள்வதும் நாட்டை விட்டு ஓடுவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள்."

எனவே தோழர்களே! உதைக்கும் காலுக்கு இதுவரை முத்தமிட்டுப் பூசை செய்கிறோம். மலத்தை மனதார முகருகிறோம், மானமிழந்தோம், பஞ்சேந்திரி யங்களின் உணர்ச்சியை இழந்தோம், மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம், இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும் தமிழனல்லாதவ னுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம்.

இனிமேலாவது "தமிழ்நாடு தமிழருக்கே" என்று ஆரவாரம் செய்யுங்கள்.

உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் வீடுதோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!

‘தமிழ்நாடு தமிழருக்கே‘ (குடிஅரசு, 23.10.1938)

தந்தை பெரியாரின் இப்போர் முழக்கம் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! 1938 டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்தியர் நல உரிமைச் சங்க (நீதிக்கட்சி) மாநாட்டில் வாசிக்கப்பட்ட பெரியாரின் உரையிலும் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது. இதற்கு முதல் நாள் வேலூரில் நடந்த தமிழ் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய சர்.ஏ.டி.பன்னீர்செலவம் ‘தமிழ்நாடு தமிழருக்கே‘ என்பதை விளக்கி உரை நிகழ்த்தினார்.

இதுகுறித்துப் பேராசிரியர் அன்பழகனார் 1947இல் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

"தமிழ்நாடு தமிழருக்கே என்ற குரல் இன்று பல திசைகளிலே கேட்கப் பட்டாலும் அதை முதலில் எழுப்பிய பெருமையும் எதிர்ப்புகளுக்கும் ஏளனங்க ளுக்குமிடையே வளர்த்த சிறப்பும் தமிழர் தலைவர் பெரியார் இராமசாமி அவர்களுக்கே உரியதாகும். தோழர் இராசகோபால ஆச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராக அமர்ந்து வடநாட்டு ஹிந்தியை வலுக்கட்டாயமாகத் தமிழ்ச் சேய்களின் வாய்களிலே திணிக்க முயன்றபோது அந்தக் கொடு மையை எதிர்த்துத் தமிழ்ப் பெருங்குடி மக்கள் நடத் திய பெரியதொரு போராட்டத்தில் சிறந்ததொரு விளைவாகத் "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற உரிமை யொலி அன்று எழுந்தது" (வாழ்க திராவிடம், 2017).

- தொடரும்


No comments:

Post a Comment