சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுடன் சண்டை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுடன் சண்டை

சிதம்பரம், பிப்.19 சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தீட்சிதர்களுடன், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 சிதம்பரத்தில்   நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் படி பக்தர்கள் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று (18.2.2023) சிவராத்திரியையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால்,  சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் ஜெயசீலா என்ற பெண் உள்ளிட்ட சில பக்தர்கள், சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய சென்றனர். இதைப் பார்த்த தீட்சிதர்கள் அவர்களை சித்சபையில் ஏறவிடாமல் வெளியேற்றினர். 

இதனால் தீட்சிதர்களுக்கும், பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர்  ரகுபதி, நகர காவல் ஆய்வாளர்  ஆறுமுகம் மற்றும் காவல் துறையினர் கோவிலுக்கு விரைந்து வந்து தீட்சிதர்கள் மற்றும் பக்தர்களை சமாதானப்படுத்தினர். அப்போது காவல்துறையினர் அரசாணைப்படி பக்தர்களை சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். இதையேற்ற தீட்சிதர்கள், மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்களை சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதித்தனர். அதன்பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment