கோவையில் ஆகஸ்ட் 5 இல் திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு: தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 22, 2023

கோவையில் ஆகஸ்ட் 5 இல் திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு: தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

தஞ்சை, ஜன.22 -  திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரை யாடல் கூட்டம் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் நேற்று (21.1.2023) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில், மாநில மாணவர் கழக செயலாளர் 

ச. பிரின்சு என்னாரெசு பெரியார் மாலை அணிவித்தார். உடன் மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் உணர்ச்சிமிகு முழக்கமிட்டனர்.

காலை 10.30 மணிக்குத் தொடங்கிய கலந்துரையாடல் கூட்டத்தில், மாநில மாணவர் கழக அமைப்பாளர் 

இரா. செந்தூர பாண்டியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பொறியியல் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி.தங்கமணி கடவுள் மறுப்பு கூறினார். மாநில மாணவர் கழக துணை செயலாளர் செ.பெ.தொண்டறம் கூட்டத்தின் தலைமையை முன் மொழிந்தார். மாநில மாணவர் கழக துணைத் செயலாளர் மு.ராகுல் வழிமொழிந்தார். பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய உதவி பேராசிரியர் முனைவர் இர. சாம்ராஜா,  பெரியார் மணியம்மை தொழில்நுட்பக் கல்லூரி பெரியார் சிந்தனைகள் துறையில் நடைபெறுகிற வகுப்புகளை பற்றி எடுத்துக் கூறினார். சுற்றுச்சூழல் தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சுற்றுச்சூழல் பொறியாளர் வீ.பிரபாகரன் உலகில் உள்ள காலநிலை மாற்றங்களை பற்றியும், எதிர்கால சுற்றுச்சூழலை பற்றியும் உரையாற் றினார்.

மாநில கழக அமைப்பாளர் இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார். உரத்தநாடு திருமங்கலக் கோட்டை பெரியார் பிஞ்சு மேகம் தந்தை பெரியார் பற்றி மழலை உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள் சார்பில் திருவையாறு ஓவியா, உரத்தநாடு கவிபாரதி, கோவை ராகுல், சென்னை பொறியாளர் தங்கமணி, சென்னை தொண்டறம், மண்டலக் கழக பொறுப்பாளர்கள் சார்பில் நாகை இளமாறன், அரியலூர் திராவிடச் செல்வன், மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள் சார்பில் தருமபுரி பூபதிராஜா, மதுரை வெங்கடேசன் ஆகியோர் உலகத் தலைவர் தந்தை பெரியார் பற்றியும், திராவிட மாணவர் கழக செயல்பாடுகளையும், எதிர்கால செயல்பாடுகள் - திட்டங்களையும் குறித்து மிக எழுச்சியுடன் உரை யாற்றினார்.

தொடர்ந்து மாணவர் கழக மாநில செயலாளர் 

ச. பிரின்சு என்னாரெசு பெரியார் 2023 ஆண்டுக்கான செயல் திட்டங்களைப் பற்றியும், மாணவர் கழக 2022 செயல்பாடுகளையும், சமூக வலைத்தள பிரச்சாரங்கள், பேச்சாளர் பயிற்சிகள், எழுத்து பயிற்சி தொடர்பானவை பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார்.

9 தீர்மானங்கள்

மிக முக்கியமான காலகட்டத்தில்  9 தீர்மானங்களை முன்மொழிந்தார். அந்த 9 தீர்மானங்களையும் அனைத்து மாணவர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள்  கர வொலி எழுப்பி வழிமொழிந்தனர்.

சமூக ஊடகங்களில் பெரியார் கொள்கைகளைப் பரப்புவது குறித்து திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர்கள் இரா.ஜெயக்குமார்,  துரை.சந்திரசேகரன் ஆகிய இருவரும் மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் செய்ய வேண்டிய செயல் திட்டங்களைப் பற்றி உரையாற்றினர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  திராவிட மாணவர் கழக தோற்றத்தையும், மாணவர் கழக எதிர்கால திட்டங்களையும், நாம் செய்ய வேண்டிய பேச்சு, எழுத்து பயிற்சி பற்றியும்  மாணவர் கழக தோழர் கள் எப்படி இருக்க வேண்டும் எனவும்  உரையாற்றினார்.

கோவையில் ஆகஸ்ட் 5 இல் 

திராவிட மாணவர் கழக மாநில மாநாடு

கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர் களிடம் கேள்வி - பதில் முறையில் எளிமையாக, இனிமையாக  செய்ய வேண்டிய கடமைகளையும், செயல் திட்டங்களையும், சில மாணவர்களுக்கான உதவிகளைப் பற்றியும், 9 தீர்மானங்கள் பற்றியும் திராவிட மாணவர் கழக 80 ஆவது ஆண்டு மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவையில் நடைபெறும் என்ற அறிவிப்பையும் கூறி வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், தஞ்சை மண்டல தலைவர் மு. அய்யனார்,தஞ்சை மாவட்ட கழக பொறுப் பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அனைத்து மாவட்ட  திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் தோழர்களுக்கு அமெரிக்கா சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் பெரியார் 1000 வினா- விடை புத்தகம் அன்பளிப்பாக அளித்தார். 

திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் மாவட்ட வாரியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் குழுப் படம் எடுத்துக் கொண் டனர். விழுப்புரம் மண்டல மாணவர் கழக செயலாளர் திராவிட புகழ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment