யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 17, 2023

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து 

என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்!

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர்  நலச் சங்கத்தின் 

30 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவரின் ஏற்புரை

சென்னை, ஜன.17 ‘சமூகநீதிப் போராளி’ என்று விருது கொடுத்து என்னை மேலும் வேகமாகப் பணியாற்றிட ஊக்கப்படுத்தியுள்ளீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘சமூகநீதிப் போராளி’’ விருது வழங்கும் விழா

கடந்த 8.1.2023 அன்று தியாகராயர் நகரில், உள்ள ”தி ரெசிடென்சி டவர்ஸ்” நட்சத்திர விடுதியில், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா - யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழர் தலைவருக்கு “சமூகநீதிப் போராளி” எனும் விருது  வழங்கும் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஏற்புரையாற்றினார்.

அவரது ஏற்புரை வருமாறு:

மற்றவர்களுக்கு வழிகாட்டக் கூடிய யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம்

யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு தொடக்க  விழா விற்குத் தலைமையேற்றுள்ள தோழர்க கருணாநிதி, தொடக்கத்திலிருந்து சிறப்பாகப் போராடி, வாதாடி யதால், பிறகு ஒரு நல்ல அளவிற்கு அது கட்டுக் கோப்பான ஓர் அமைப்பாக வளர்ந்து இருக்கிறது. அது மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடிய ஓர் அமைப்பாக இருக்கிறது என்றால், அது முதல் வரிசையில், முதலிடத்தில் இருக்கக்கூடிய யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா சார்ந்த பெருமைக்குரிய எங்களுடைய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கமாகும். 

முதலாவது ஆண்டு விழாவிலும் - 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு

எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய அளவிற்கு இதை ஆக்கிய பெருமை அருமைத் தோழர் கருணாநிதி (இவ்வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற) அவர்களையும், அவருக்கு ஒத்துழைப்புத் தரக்கூடிய உங்களைப் போன்ற ஓர் அருமையான, தோழர்களையும் சேர்ந்த தாகும். அவருக்கு நல்ல வகையில் ஆதரவு தரக் கூடியவர்கள் - ஒருங்கிணைந்து ஒரு நல்ல கூட்டுக் குடும்பம் - நல்ல சிறப்பான முறையில் இருப்பதைப்போல, எடுத்துக்காட்டான ஓர் அமைப்பாக இது திகழ்கின்றது. இந்த அமைப்பின் 30 ஆம் ஆண்டு விழாவில், - முதலாவது ஆண்டு விழாவிலும் கலந்துகொண்டு, 30 ஆவது ஆண்டுவிழாவிலும் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை நான் பெற்றிருப்பது - அதை எனக்கு அளித் திருப்பதற்காக நானும் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.

ஏனென்றால், நிறைய வங்கிகளில் எனக்குக் கணக்கு கிடையாது. வங்கித் தோழர்களை இப்படிப்போன்ற விழாவில்தான் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அதிலும் இன்றைக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்ன வென்றால், இந்த அருமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதின்மூலம் முதலில் அனைவருக்கும் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்; மகிழ்ச்சி கலந்த வணக்கம்.

சமூகநீதிக்காகப் போராடக் கூடிய களப் பணியாளர்கள்

வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் பொதுச் செயலாளர் சிவா நடராசன் அவர்களே, 

தலைமையேற்று இருக்கக்கூடிய தோழர் கருணாநிதி அவர்கள், இங்கே மட்டுமல்ல, எல்லா வங்கிகளிலும் சரி, இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கன ஓர் அமைப்பு, ஒடுக்கப்பட்டவர்களுடைய அமைப்பு எது வாக இருந்தாலும், அவற்றில் பங்கெடுத்து, சமூகநீதிக் காகப் போராடக் கூடிய களப் பணியாளர், களத்திலே இருக்கக்கூடியவர் நல்ல அளவிற்குக் கொள்கையாளர் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பணியாற்றிவருபவர். தமிழ்நாடு அரசே அவருடைய தொண்டை மதித்த கார ணத்தினால்தான், இன்றைக்குத் தமிழ்நாடு அரசினுடைய மிகப்பெரிய ஒரு பொறுப்பில், சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் இருக்கக்கூடிய அளவிற்குக் கருணாநிதி இடம்பெற்றிருக்கின்றார் என்றால், அது அவருக்கு மட்டும் பெருமையல்ல; இந்த வங்கிக்கே பெருமை - இந்த வங்கியினுடைய அமைப்பிற்கே பெருமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் தமிழ்நாட்டினுடய சிறப்பை அவருக்குத் தேடித் தந்திருக்கின்றீர்கள்.

அதற்கு அடித்தளம் இந்த அமைப்பு. இந்த அமைப் பினுடைய அருமைத் தலைவர் அவர்களே,

ஏனைய அருமைத் தோழர்களே, ‘விடுதலை’யின் நிர்வாக ஆசிரியரும், திராவிடர் கழகத் துணைத் தலை வருமான கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

மற்றும் அருமை நண்பர்களே, உங்கள் எல்லோருக் கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டப் பசி தீரவில்லை!

நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள்; வயிற்றுப் பசி உங்களுக்கு; ஆனால், இந்த நாட்டில் போராட்டத்தின் பலன் இன்னமும் எதுவும் கிடைக்கவில்லையே, என்று ‘அந்தப் பசி’ தீராத அளவில் இருக்கக்கூடிய - அந்தப் பசிக்கு உணவு கிடைக்காதா? என்பதற்காக நாங்கள் ஒரு பக்கத்திலே போராடிக் கொண்டிருக்கின்ற காரணத் தினால், நாம் எல்லோரும் சேர்ந்து போராடிக் கொண் டிருக்கின்ற காரணத்தினாலும் - வயிற்றுப் பசியைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு - இந்த போராட்டப் பசி தீருவதற்கு, பசி ஆறுவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி நாம் யோசிப்பதற்காகத்தான் - இந்த விழா!

அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலில் உரையைத் தொடங்குவதற்குமுன் என்னுடைய அன்பான நன்றியை மிகுந்த பணிவன்போடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்துவிட்டீர்கள்

நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; 90 வயது என்பதை எனக்கு நினைவூட்டி - எனக்கு வயதாகிவிட்டதை எனக்கு அடிக்கடி நினைவூட்டி - அதற்காக தனி சிறப்பு செய்தீர்கள். இங்கே ஒவ்வொருவரும் உங்களுடைய அன்பால், நட்புறவால் என்னை  திணற வைத்து விட்டீர்கள்; அதற்காக என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாக, இவையெல்லாம் எங்களுக்கு மிகவும் புதுமையானது, எதிர்பாராதது. இதுவரை நாங்கள் இங்கே கொடுத்ததுபோன்று ‘பொக்கே’ வாங்கியதில்லை. கல்லடி யையும், சொல்லடியையும்தான் இதுவரையில் வாங்கியிருக்கின்றோம். 

இங்கே வரும்பொழுது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகத் தோன்றியது; நாம் வேறொரு உலகத்தில் இருக்கின்றோமா என்று சொல்லக்கூடிய அளவில், அதிலும் அறிவார்ந்த ஓர் அரங்கத்தில், இப்படிப்பட்ட தோழர்கள், இருபால் தோழர்கள்,  தோழர்களிடமிருந்தும் வாழ்த்துப் பெற்றிருக்கின்றோம்.

நீங்கள் என்னை கொஞ்சம்  தட்டிக் கொடுக்கிறீர்கள்

அதைவிட மகிழ்ச்சி என்னவென்றால், வங்கியில் சமூகநீதி செயல்பட்டது; அந்த சமூகநீதி செயல்படுவதற்கு இன்னும் தீவிரமாக களத்தில் இறங்கக்கூடிய உறுதிப்பாடு, ஈடுபாடு இந்த இரண்டுமே பெற்றிருக்கக் கூடியவர்களிட மிருந்து பாராட்டை நான் பெறுகிறேன் என்று சொல்லும் பொழுது, இன்னும் அதிகமாக வேலை செய்; உங்களிட மிருந்து இன்னும் அதிகமான பணியை எதிர்பார்க்கிறோம் என்று சொல்வதற்கு, நீங்கள் என்னை கொஞ்சம் தட்டிக் கொடுக்கிறீர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.

அதைவிட எனக்கு இன்னொரு மகிழ்ச்சி - வங்கி களில் பணியாற்றும் மகளிர் தோழர்கள் அனைவரும் சேர்ந்து மேடைக்கு வந்தார்கள்; இவ்வளவு மகளிர் வங்கியில் பணியாற்றுவதே பெரியாருக்குக் கிடைத்த வெற்றி - சமூகநீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! பூரிப்படைகிறோம்.

மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி

பிற்படுத்தப்பட்டோரில், ஆண்களே முன்னேறாத நிலையில், பெண்களே படிக்கக் கூடாது என்று இருந்த காலத்தில், ‘சரசுவதி’ என்று பெயர் வைத்திருக்கின்ற பாட்டிக்குக்கூட எழுதப் படிக்கத் தெரியாது; ஆனால், ‘பேத்தி சரசுவதி’ இன்றைக்கு வங்கி அதிகாரியாக, மற்ற மற்ற துறைகளிலும் இருக்கிறார்கள் என்று சொன்னால், இது மிகப்பெரிய சமூகப் புரட்சி - ரத்தம் சிந்தாதப் புரட்சி- ஆயுதம் ஏந்தாத புரட்சி. எப்படி ஏற்பட்டது?

அதேநேரத்தில், திராவிட இயக்கம் இந்த நாட்டில் அரும்பாடுபட்டு உருவாக்கிய இது ஓர் அற்புதமான சிறப்பான புரட்சியாகும்.

அந்த வகையில், நீங்கள் எனக்கு இங்கே கொடுத்த பட்டயத்தைவிட மிக முக்கியம் - இத்தனை சகோதரிகள் இருக்கிறார்கள்; இத்தனை மகளிர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வங்கியிலே பணிபுரிகிறார்கள்; அதி காரிகளாக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கும்பொழுது, இதைவிட பெரிய பரிசு, இதைவிட மிகப்பெரிய சிறப்பு எங்களுக்கு வேறு கிடையாது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து, இந்த எண்ணிக்கை பெருகவேண்டும்.

நம்முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக்கொள்கிறோம்

அதேபோல, ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகள் பெறப்படவேண்டும்; மற்றவர்களுடைய உரிமைகளை நாம் பறிப்பதற்காக இதை நாம் கேட்கவில்லை; நம் முடைய உரிமைகளை நாம் பெறுவதற்காகக் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனென்றால், சமூகநீதியினுடைய தத்துவத்தை பலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதுதான் சமூகநீதியே தவிர, மற்றவர்களுக்குக் கிடையாது என்று சொல்வது அல்ல.

ஆனால், அனைவருக்கும் அனைத்தும் கூடாது எல்லாம் எங்களுக்கே என்று சொல்வதுதான் சமூக அநீதி.

அந்த சமூக அநீதியை எதிர்த்து நிற்பதுதான் சமூகநீதி. எப்பொழுதுமே அநீதி நடக்கும்பொழுதுதான், நீதி கேட்கவேண்டிய அவசியமே வரும்.

அந்த வகையில்தான், நீதி கேட்கக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இங்கே 30 ஆம் ஆண்டு விழாவில், அவர் சொன்னதுபோன்று, ஓர் அமைப்பை 30 ஆண்டு கள் கட்டி காத்து, மேலே மேலே அது வளர்ந்துகொண்டே செல்வது என்பது மிகுந்த உற்சாகத்தைத் தரக்கூடிய ஒன்றாகும்.

தீர்மானங்கள் மிக முக்கியமானவை

இங்கே நிறைவேற்றப்பட்டு இருக்கக் கூடிய தீர் மானங்கள் மிக முக்கியமானவையாகும். ஏழு தீர்மானங் கள் பொதுவானவை;  வங்கி நிர்வாகத்திற்குக் கோரிக் கைகளை 6 தீர்மானங்களாக வைத்திருக்கிறீர்கள். 

வங்கி நிர்வாகக் கோரிக்கைகள் உங்களைப் பொறுத்து தெளிவாக வந்திருக்கிறது என்றாலும், எல் லோருக்கும் தேவை - நாட்டிற்கே தேவையானதை ஏழு கோரிக்கையாக வைத்திருக்கிறீர்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment