“தமிழர் சமுதாய இழிவை ஒழித்திட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 10, 2022

“தமிழர் சமுதாய இழிவை ஒழித்திட அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்”

- தந்தை பெரியாரின் வரலாற்று புகழ் படைத்த தீர்மானங்கள்!

சரித்திரச் சிறப்பு வாய்ந்த “தமிழர் சமுதாய ஒழிப்பு மாநாட்டில்", இந்திய அரசியல் சட்டமே பேதத்திற்கு வித்திடுகிறது என்றும், நம் இன இழிவை போக்கிக்கொள்ள தந்தை பெரியார் அவர்கள் உள்ளம் குமுறி எழுந்து தமிழர் இனத்தைக் காக்க கொண்டுவந்த தீர்மானங்கள். இன்றைக்கும் எப்படி பொருந்துகிறது என்பதனை அறிந்துகொள்ள இங்கே எடுத்துக்காட்டப்படுகிறது.

தீர்மானம் 1:

நமது ஆட்சி கடவுள், மத நடவடிக்கைகள் சம்பந்தமற்ற மதச்சார்பற்ற (Secular State) ஆட்சி என்று பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. என்றபோதிலும், மக்கள் எல்லோரும் மதப்படியும் ஜாதிப்படியும் பிரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லீம், கிறிஸ்தவர், பார்சி, யூதர் தவிர்த்த மற்றவர்கள் யாவரும் பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் உள்பட ஹிந்து மதஸ்தர்கள் என்று ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஹிந்துக்களில் இரண்டு ஜாதி உண்டென்றும், அவைகளில் ஒன்று பார்ப்பனர் (பிராமணர்) மற்றொன்று பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்££ மக்களும் சூத்திரர்கள் ஆவார்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றும், ‘சூத்திரன்’ என்றால் நாலாவது ஜாதி ஆவான் என்பதோடு, அவன் பார்ப்பானுடைய (‘பிராமண’னுடைய) தாசிமகனாவான் என்று ‘இந்து லா’ என்னும் கட்டத்திலேயே விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ‘இந்து லா’வை அங்கீகரிப்பதோடு, மதச் சதந்திர உரிமை என்னும் பேரால், அரசியல் சட்டத்தில் உள்ள 25, 26ஆவது ஷரத்துக்களைக் காட்டி உச்சநீதிமன்றம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முடியாது என்றும், மத விஷயங்களில் அரசு தலையிட்டு ஜாதி ஒழிப்புப் போன்ற சீர்திருத்தங்களை செய்ய இயலாது என்றும் திட்டவட்டமாக அண்மையில ஒரு தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பது பார்ப்பனரல்லாத ‘சூத்திர’ மக்களாகிய நம் மக்களின் இழிவினை என்றும் நிலை நிறுத்தும் தன்மையில் இருப்பதால்,அதனை மாற்றி நம்மை மனிதர்கள், சமத்துவம் வாய்ந்த மனிதர்கள் என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்பதால் கீழ்க்காணும் வகையில் அரசியல் சட்டம் திருத்தப்பட்டாக வேண்டும் என்று அரசியல் காரணங்களின்றி, சமுதாயக் கண்ணோட்டத்தோடு தமிழர் சமுதாயத்தின் சார்பாக மத்திய அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

(1) மதச் சுதந்திர உரிமை பிரிவுகள் என்றுள்ள 26ஆவது அரசியல் சட்ட ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும்; ஜாதி ஒழிப்புக்கு வழிவகை செய்ய ‘மதச்சார்பின்மை'யை உண்மையாக்கும் வகையிலும் அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

சோஷலிசத்தைக் கொள்கையாகக் கொண்ட கட்சி என்று சொல்லிக் கொள்ளும்படியான கட்சியானபடியால், மதச் சுதந்திரம் என்ற பெயரால் மனித சமத்துவம், சுதந்திரம் பறிபோகக் கூடாது என்று இம்மாநாடு உறுதியான கருத்துக் கொண்டு இருக்கிறது.

(2) இந்திய அரசியல் சட்டத்தின் 44ஆவது விதியாகிய எல்லா மக்களுக்கும் பெருந்தக்கூடிய ஒரே சீர்மையான சிவில் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தி, அந்தந்த மதத்தின் பேரால் தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

பிரிட்டிஷ்காரர்கள் தந்த கிரிமினல் சட்டம் எப்படி எல்லா ஜாதி எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டமோ அதுபோலவே சிவில் சட்டமும் அமைவதன் மூலம்தான் உண்மையான ஒருமைப்பாட்டினை உருவாக்க முடியும் என்று இம்மாநாடு கருதுகிறது.

டில்லி அரசு இதற்கேற்ற வகையில் அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றினைக் கொண்டுவர வேண்டும்.

(3) ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்; ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அனை எந்த ரூபத்தில கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்“ என்று அரசியல் சட்டத்தின் 17ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள “தீண்டாமை” (“Untouchability”) என்பதற்குப் பதிலாக “ஜாதி” (“Caste”) என்ற சொல்லை மாற்றி ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண்டும்.

சமுதாய இழிவினை மாற்றுகின்ற இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் டில்லி அரசாங்கம் மறுக்குமானால், எங்களைச் சூத்திரர்களாக, இழிபிறவிகளாக ஆக்கும் இப்படிப்பட்ட ஆட்சியின் கீழ் நாங்கள் குடிமக்களாக இருக்க சம்மதம் இல்லை என்பதை அறிவிப்பதோடு, அதற்கான கிளர்ச்சிகள் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது.

தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இது குறித்து மத்திய அரசுக்கு ஒரு ‘காலக்கெடு’ கொடுப்பதுடன், அக்காலக் கெடுவுக்குள் நமக்கு சரியான சமாதானம் தந்து உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் தவறுமேயானால்,

மாபெரும் கிளர்ச்சித் திட்டங்களைக் கீழ்க்காணும் வகையில் சாந்தமும் சமாதானமும் ஆன வழிமுறைகளில் எவ்வித பலாத்காரமான செய்கைகளுக்கும் இடம் இல்லாமல் இதற்கு முன்னால் உள்ள ஆட்சியில் நாம் செய்தது போலவே மேற்கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது.

1. அரசியல் சட்ட எரிப்பு

2. பகிஷ்காரங்கள்

3. தடை வேலைகள் (தடுப்புப் பணிகள்)

முதலிய காரியங்கள் மூலம் கிளர்ச்சிகள் செய்யப்படும்.

இதற்கான கிளர்ச்சித் தேதி குறிப்பிடுவதையும் மேற்கொண்டு காரியங்கள் செய்வதையும் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு இம்மாநாடு பொறுப்பு அளிக்கிறது.

தீர்மானம் 2:

தமிழர்களை நாலாம் ஜாதியாக்குகிற கடவுள்களையும் அதனை உறுதிப்படுத்தும் மதத்தினையும்; பிரச்சாரம் செய்கின்ற பத்திரிகைகளையும் தமிழ்ப் பெருமக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:

நம்மை “சூத்திரர்கள்”, பார்ப்பானின் தாசிப் புத்திரர்கள் என்று இழிவுபடுத்தும் தன்மையில் கோயில்களில் நாம் கிட்டே நெருங்கினால் தீட்டாகி விடும்; அசிங்கப்பட்டு விடும் என்று கூறப்படுபவன நமக்குக் கடவுள்கள் ஆக மாட்டா என்பதை மக்களிடையே தீவிரமான வகையில் பிரச்சாரம் செய்வதுடன், நமது இழிவினைப் போக்கிக் கொள்ள அவைகளின் தன்மையை ஆதாரங்களில் உள்ளபடி, மக்களுக்கு எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியம் என்று இம்மாநாடு கருதுகிறது. அதற்காக ஒரு கமிட்டியை ஏற்படுத்தி வேலை தொடங்க வேண்டுமென தலைவர் தந்தை பெரியார் அவர்களை இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 4:

கடவுள் வழிபாடு என்பதில் விக்கிரக ஆராதனை என்ற சிலைகளைக் கும்பிடுவதால், ஜாதியைப் பாதுகாக்கும் தன்மையும், நமது பிறவி இழிவும் அதனால் நிலைநிறுத்தப்படுவதால், கடவுள் வணக்கம் என்பதில் விக்கிரக ஆராதனை என்பது தடுக்கப்பட வேண்டும்.

தீர்மானம் 5:

இந்து அறநிலைய பாதுகாப்பு இலாகா என்ற ஒரு இலாகாவை நீதிக்கட்சி ஆட்சி உருவாக்கியதே. கோயில் சாமிகளின் வருமானம்  துஷ்பிரயோகம் ஆவதை தடுத்து, ஒழுங்குபடுத்தவும், பல பொதுநலக் காரியங்களுக்குப் பணம் பயன்படுத்தவுமேயாகும். ஆனால், தற்போதைய தமிழக அரசு, கோயில்களைப் புதுப்பித்தல், உற்சவங்கள் பெரும் அளவில் நடத்துதல் போன்ற காரியங்களில் பல கோடி ரூபாய்கள் செலவு செய்வதும், சதா கோயில் பழுது பார்க்கும் வேலையில் ஈடுபடுவதும் கண்டு இம்மாநாடு மிகவும் வேதனை அடைவதுடன், அம்முயற்சிக்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவ்வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை, குறிப்பாக, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 6:

இந்தியா சுதந்திரம், சுயராஜ்யம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்ளப்பட்ட நாள்முதல் இன்றுவரை குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் போன்ற ஆட்சித் தலைவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவும் அன்றி வடநாட்டார்களாகவுமே இருந்து வந்து இருக்கிறார்கள்.

தற்போதுள்ள பார்லிமெண்டு அமைப்பில் வடநாட்டு உத்தரப் பிரதேச ஹிந்தியாளர்கள்தான் பிரதமர்களாக வரவாய்ப்பு இருக்கிறது. 

இதனை மாற்றி தேச நிர்வாகத் தலைமை ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.அதற்கேற்ப அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment