கொலிஜிய விவகாரம்: ஒன்றிய அமைச்சர்கள் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

கொலிஜிய விவகாரம்: ஒன்றிய அமைச்சர்கள் கட்டுப்பாடாக நடந்துகொள்ள வேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

புதுடில்லி, டிச. 11- கொலிஜிய விவகாரத்தை பொதுவெளியில் விமர்சிக்ககூடாது, ஒன்றிய அமைச்சர்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற  நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜிய பரிந்துரைகள் குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுக்காமல் இருப்பதற்கு எதிராக பெங்களூரு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இதன்படி நடைபெற்ற விசாரணையின்போது ஒன்றிய அரசின் அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியிடம் நீதிபதிகள், 'கொலிஜியத்தால் பரிந்துரைக் கப்பட்ட 19 பெயர்களை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது போன்ற பல பெயர்கள் பல மாதங்களாக, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இன்னும் எத்தனை நாள் இந்த முரண்பாடு தொடரும்? நீதிபதிகளின் பெயர்களை உயர்நீதிமன்ற கொலிஜியத்துக்கு பரிந்துரைக்கும்போது மூப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்கிறது. நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜிய முறை நடைமுறையில் இருக்கும் வரை அதை செயல்படுத்த வலியுறுத்த வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக வேறு ஏதேனும் சட்டத்தை கொண்டுவர ஒன்றிய அரசு விரும்பினால் அதை யாரும் தடுக்கவில்லை.

எந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும், எந்த சட்டத்தை பின் பற்றக்கூடாது என சமூகத்தின் ஒரு பிரிவினர் முடிவு எடுக்கத் தொடங்கினால் சிக்கல்கள் உருவாகும். சட்டத்தை பொறுத்தவரை அதை நடுநிலையோடு மாற்றம் செய்யும் பொறுப்பை அரசமைப்பு சாசனம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கி உள்ளது. சட்டத்தை ஏற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. ஏற்றப்படும் சட்டங்கள் உச்சநீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை தான். எந்த ஒரு சட்டத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகு அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற தகவலை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்' என்று தெரிவித்தனர். 

மேலும் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை தொடர்பாக பொது வெளி விமர்சனங்களை முன்வைப்பதில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும்படி அமைச்சர்களுக்கு அறி வுறுத்துங்கள். கொலிஜியம் முறை குறித்து ஒன்றிய அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துகள் நல்லவிதமாக பார்க்கப்படவில்லை. அமைச்சர்கள் கொஞ்சம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் தலைமை வழக்குரைஞர்களிடம் நீதிபதிகள் தெரிவித்து, மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜூ கடந்த நவம்பர் 25ஆம் தேதி கொலிஜியம் முறை அரசமைப்பு சாசனத்துக்கு புறம்பாக உள்ளது என்ற கூறியது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment