ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

ஒற்றைப் பத்தி

மரமா? மனிதனா?

உத்திரமேரூர் அருகே உலக நன்மைக்காக மரங்களுக்கு கிராமத்தினர் வினோத திருமணம்  நடத்தி வைத்தனர். 

உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழைமையான கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் பழைமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்ப மரம் ஒன்று சுயம்புவாகத் தோன்றி தானாக வளரத் தொடங்கியதாம். இதனை கிராம மக்கள் நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் வழிபடத் தொடங்கினராம். இந்நிலையில் உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் செய்து வைத்து வழிபாடு நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனராம். இதற்காக திருமண அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டதாம். அதில் மணமகன் அரசன் என்றும், மணமகள் வேம்பு நாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. காரணைமண்டபம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வீடு, வீடாகச் சென்று அழைப்பிதழ் விநியோகம் செய்யப்பட்டது. கிராம மக்கள் புடைசூழ திருமண நிகழ்ச்சி நடைபெற்றதாம். முன்னதாக அரச மரத்துக்கு பட்டு வேட்டியும், வேப்பமரத்துக்கு பட்டு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமணச் சடங்கு நடத்தப்பட்டதாம். 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளம் முழங்க, கிராம மக்கள் புடைசூழ அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றதாம். பின்னர் ‘தீபாராதனை' காண்பிக்கப்பட்டு கிராம மக்கள் அனைவரும் வழிபட்டனராம். இந்த வினோத திருமணத்துக்கு வந்திருந்த கிராம மக்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுடன் விருந்து அளிக்கப்பட்டு, தாம்பூலப்பை வழங்கப்பட்டதாம். இதில் காரணைமண்டபம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனராம்.

கழுதைக்கும், கழுதைக்கும் கல்யாணம், தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் நடத்தி வைக்கும் காட்டுவிலங்காண்டித் தனமான மூடத்தனங்களும் இன்னொரு பக்கம்.

மரத்துக்கு மரம் கல்யாணம் செய்தால் வறுமை ஒழிந்துவிடுமா? பட்டினி பறந்திடுமா? நோய் நொடிகள் ஓடிவிடுமா? மருத்துவமனைகளை இழுத்து மூடி விடலாமா?

மரத்தை வளர்ப்பது நல்லதுதான். ஆனால், மனிதனே மரமா£வது புத்திக்கு உகந்தது அல்ல.

பகுத்தறிவு இயக்கத்தின் இன்றியமையாமையை இப்பொழுதாவது உணர்வீர்!

-  மயிலாடன்


No comments:

Post a Comment