அம்பேத்கர் படத்திற்கு காவிச் சாயம் பூசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 22, 2022

அம்பேத்கர் படத்திற்கு காவிச் சாயம் பூசிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சாவூர்,டிச.22- கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  டிசம்பர் 6 ஆம் தேதி சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை யொட்டி பல்வேறு கட்சியினர் அவரு டைய சிலைக்கும், உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.  இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் டி.குருமூர்த்தி. இவர் இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளராக உள்ளார். 

அம்பேத்கர் படத்தில் காவி  உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும், காவி (ய)த் தலைவனே என அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை கும்பகோணம் மற்றும் மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி னார். மேலும், தனது முகநூல்  பக்கத்திலும் பதிவு வெளியிட்டார்.  இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி,  சிறுபான்மை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், “மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படும் இந்து  மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் கும்பகோணம் குருமூர்த்தி, மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோரை கைது செய்ய வேண்டும்” என கும்பகோணம் காவல் துறை கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்தனர். மேலும் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதை யடுத்து குருமூர்த்தி கைது செய்யப்பட்டார்.  

இந்நிலையில், குருமூர்த்தி தன்னை கைது செய்யக் கூடாது. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கோரி, நீதிமன்றத்தை நாடியிருந்தார். 

இதையடுத்து, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி சார்பில் மண்டலச் செய லாளர் விவேகானந்தன், நீதிமன்றத்தில் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது. அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்டச் செயலாளர் என்.சிவகுரு, அவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நீதி மன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.  இதையடுத்து, வழக்கை விசாரித்த தஞ்சாவூர் நீதிமன்றம் குருமூர்த்தியை குண் டர் தடுப்பு  சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டது. பின்னர் குருமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.   


No comments:

Post a Comment