2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை,டிச.20- தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 3 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் இன்று (20.12.2022) முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் 18.12.2022 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 3 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 20, 21ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20ஆம் தேதி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும், 21ஆம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வரும் 20, 21, 22ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment