திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஓர் உயிர் பறிபோனது: வைகோ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அலட்சியத்தால் ஓர் உயிர் பறிபோனது: வைகோ

சென்னை, நவ.30 நாளை (1.12.2022) திராவிடர் கழகத்தின் சார்பில் ஆளுநரைக்கண்டித்து நடைபெறுகின்ற ஆர்ப்பாட் டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு,

ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி சிறீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்த இணையர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர்.

அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார்.

காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிய அஜய்குமாருக்கு அதிர்ச்சி காத் திருந்தது.

வீட்டில் அவரது மனைவி சிறீதனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் கதறி அழுதார். பின்னர் சிறீதனாவின் மரணம் குறித்து உடனடியாக கரிவலம் வந்தநல்லூர் காவல் துறைக்கு  தகவல் தெரி விக்கப்பட்டது.

காவல்துறையினர் சிறீ தனா மாஞ்சி உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய் வுக்காக  சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஜய்குமார் மாண்டல் கூலி வேலைக்குச் சென் றதும் வீட்டில் தனியாக இருந்த சிறீதனா மாஞ்சி தனது அலைபேசியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் அவரது அலைபேசியை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, ஆன்லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்ட முன் வரைவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, கடந்த அக்டோபர்-28 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.

ஆளுநர் விளக்கம் கேட்டதையடுத்து, தமிழ்நாடு அரசு உரிய விளக்கத்தை அளித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தக்க காரணம் இன்றி ஆன் லைன் சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவசர சட்டமும் காலாவதி ஆகிவிட்டது.

இந்நிலையில்தான் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற் கொலை செய்து கொண்டுள்ளார். இது போன்ற தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழ்நாடு அரசு ஆன் லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது.

ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆன் லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் தற்கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமான சூழலில், அதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகை முன் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கும்.

மதிமுகழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்று, கண் டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன்.

-இவ்வாறு வைகோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment