புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 12, 2022

புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கி

விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கரூர்,நவ.12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.11.2022) கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

3,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...

எரிசக்தி துறையின் 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.9.2021 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் 3,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, எரிசக்தித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.     

அந்த அறிவிப்பிற்கிணங்க, விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது; என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது

பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவதால், இன்று என் மனமும் குளிர்ந்து கொண்டிருக் கிறது. அதுதான் உண்மை. அந்த மகிழ்ச்சியில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் எதைச் செய்தாலும் அதிலே ஒரு முத்திரையை பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதிந்திருக்கக்கூடிய இந்த விழா வில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்கிற முறையில் கலந்து கொள்வதிலே நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாடு அரசினுடைய வரலாற்றில் பொன்னெழுத் துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஒரு நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. இந்த விழாவின் மூலமாக 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இன்றைக்கு வழங்கக்கூடிய வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் நாம் வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று அய்ம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

5 மாத காலத்திற்குள்ளாக 

ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இணைப்புகள்

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது, ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத் திற்குள்ளாக, 15 மாதகாலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால், இதைவிட ஒரு மிகப்பெரிய சாதனையை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசுதான் செய்து காட்டி இருக்கிறது. ஏன், இந்தியாவிலே எந்த மாநிலத் திலாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது, நம்முடைய மாநிலம்தான், தமிழ்நாடுதான் அந்த சாதனையைச் செய்து காட்டியிருக்கிறது. அதனால்தான் இதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் என்று நான் சொன்னேன்.

நான் வந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட, உணவு உற்பத்தி பெருகிட 50,000 கூடுதல் இலவச விவசாய இணைப்புகள் வழங்கப்பட்ட தொடக்க விழா பயனாளிகளுடைய விவரம் என்று ஒரு புத்தகம் வைத் திருந்தார்கள். அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே அமைச் சரிடத்தில் கேட்டேன், இன்றைக்கு 50,000 மின் இணைப்பு என்று விளம்பரப்படுத்தி விழாவை நடத்திக் கொண்டிருக் கிறோமே அதனுடைய விவரமா என்று கேட்டேன். இல்லை, 50,000 பேரை இந்தத் திடலுக்குள் அழைத்துவந்து உட்கார வைக்க இடம் இல்லை, அதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, 20,000 பேரைத்தான் அழைத்திருக்கிறோம். அந்த 20,000 பேருடைய பெயர் இந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது, பெயர் மட்டுமல்ல, முகவரி மட்டுமல்ல, அவர்களுடைய கைப்பேசி எண் உள்பட முழுமையாக சேகரித்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். எதற்காக இதைச் சொல் கிறேன் என்று சொன்னால், ஏதோ சொல்லிவிட்டு, பேசிவிட்டு செல்கிறவர்கள் அல்ல, அதைச் செய்து காட்டக்கூடியதுதான் நம்முடைய அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய அளவிற்கு செய்து காட்டியிருக்கக்கூடிய நம்முடைய செந்தில் பாலாஜி அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 

நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்குவோம் என்று ஏற்கெனவே அறிவித்தோம். அப்போது எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், இது நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும் - சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

23.9.2021 அன்று இந்தத் திட்டத்தை நான் துவக்கி வைத்தேன். துவக்கி வைத்த ஆறே மாதத்தில், ஒரு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு லட்சமாவது மின் இணைப்பையும் நான்தான் வழங்கினேன். இப்போது கூடுதலாக அய்ம்பதாயிரம் இணைப்புகளையும் நானே இங்கே வழங்கி இருக்கிறேன். இதன் மூலமாக ஒன்றரை லட்சம் உழவர்கள் பயனடைய இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு உணவுப் பொருள்கள் கிடைக்கப் போகிறது என்பதை நினைத்தாலே, எனக்கு   பெருமையாக இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல, உங் களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும்.

காரணகர்த்தாவாக அன்றும் இன்றும் இருந்தவர் கலைஞர்

இந்த நேரத்தில் நம்முடைய மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால், முதன்முதலில் இந்தியாவிலேயே உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்தவர்தான் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். 1989-1990ஆம் ஆண்டில் அதை தொடங்கி வைத்தார்.

இந்த முப்பதாண்டு காலத்திலும் - எல்லாக் காலத்திலும் உணவுப் பொருள்  விளைவித்து, தமிழ்நாட்டு உழவர் பெரு மக்கள் வளம் வழங்க, தலைவர் கலைஞர் அவர்கள்தான் அன்றும் இன்றும் காரணகர்த்தாவாக அமைந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 

சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை!

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை களையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது.

இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் பெருமிதத்தோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘‘முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 

முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்'' என்று நமக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கற்றுத் தந்திருக்கிறார்.

அத்தகைய வெற்றியை எந்நாளும் பெறுவோம்.

மண்ணைக் காப்போம்; 

மக்களைக் காப்போம்!

‘மக்களுக்கான சேவையே மகத்தான சேவை' என்ற ஒரே குறிக்கோளோடு, மழைநேரங்களிலும், இயற்கை இடர்பாடு களின்போதும், தன்னலமின்றி தொடர்ந்து சேவைசெய்து வரும் தன்னிகரற்ற அனைத்து மின்வாரியத் தொழிலாளர் களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

மண்ணைக் காப்போம். மக்களைக் காப்போம்.

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமதுரையில் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment