தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்ப இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெறக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்ப இயக்கம்

சென்னை,நவ.3- ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்பதற்காக கூட்டணி கட்சிஎம்.பி.க்களிடம் திமுக சார்பில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், அவர்பங்கேற்கும் நிகழ்வுகளில் திராவிடம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், ஆரியம், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசமைப்பு சட்டப்படி பதவியேற்றுக் கொண்ட ஆளுநர், அதற்கு எதிரான கருத்துகளை வெளியிடுவதாக சமீபத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்க்களுக்கு, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், கட்சி பொருளாளருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க திமுக முடிவெடுத்துள்ளது. திமுக மற்றும் இதே கருத்து கொண்டநாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்து, குடியரசுத் தலைவருக்கு அளிக்கும் மனுவை நவ.3ஆம் தேதிக்கு (இன்று) முன்பாக படித்துப் பார்த்து கையெழுத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

-இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


No comments:

Post a Comment