மோர்பி பாலமும் ராமன் பாலமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

மோர்பி பாலமும் ராமன் பாலமும்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்து, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 140-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். 47 குழந்தைகளைப் பலி கொண்டிருக்கிறது அந்த நிகழ்வு. அதிகபட்சமாக 150 பேர் மட்டுமே நிற்க முடியும் என்கிற அந்தத் தொங்கு பாலத்தில், கணக்கு வழக்கில்லாமல் கட்டணம் வசூலித்து மக்களை அனுமதித்தபோது, தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் வியப்பென்ன இருக்கிறது?

1879-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த தொங்கு பாலம், உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல், வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வந்தது. அதிகபட்சமாக 150 பேர் மட்டுமே அந்தப் பாலத்தில் நின்றபடி வேடிக்கை பார்க்க முடியும். 140 ஆண்டுகள் பழைமையான அந்தத் தொங்கு பாலத்தை செப்பனிட்டு, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, 15 ஆண்டுகளுக்குப் பராமரிக்கவும், சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து அதற்குக் கட்டணம் வசூலிக்கவும் தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ஏழு மாதங்களாகப் பராமரிப்புப் பணிகள் நடத்தப்பட்டு, திடீரென்று குஜராத்திப் புத்தாண்டு தினத்தையொட்டி அந்தத் தொங்கு பாலம் மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. ஒருபுறம் தீபாவளி, இன்னொருபுறம் சாட் பூஜை. விடுமுறை தினங்களை முன்னிட்டு வெளியூரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு, கட்டண வேட்டை நடத்த அந்தத் தனியார் நிறுவனம் முற்பட்டதுதான் விபத்துக்குக் காரணம்.

தொங்கு பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடுவ தற்கு முன்னர் மாநகராட்சியிடம் ஒப்பந்தம் செய்த நிறுவனம் அறிவிக்கவில்லை; தொங்கு பாலத்தின் உறுதி குறித்தும், பாதுகாப்பு குறித்தும் மாநகராட்சியில் சான்றிதழ் பெறவில்லை; முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை - இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மாநகராட்சி அதிகாரிகளும், அரசும் முன்வைத்து அந்த நிறுவனத்தின் மீது பழி போடுகின்றனர்.

மோர்பி நகரின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பான தொங்கு பாலம், முன் அனுமதி பெறாமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டதை மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா? இந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? தேர்ந் தெடுக்கப்பட்ட நகராட்சி உறுப் பினர்களும், சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களுக்கு இதில் பொறுப்பு கிடையாதா?

மோர்பி தொங்கு பாலத்தைப் புனரமைத்துப் பராமரிப்ப தற்காக 15 ஆண்டுகள் ஒப்பந்தம் பெற்றிருக்கும் நிறுவனத்திற்கு, அதற்கு முன்னர் பாலம் பராமரிப்பு அனுபவம் கிடையாது. சுவர்க் கடிகாரம் பழுதுபார்க்கும் ‘ஒரேவா’ நிறுவனத்துடன், பாலத்தைப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் 15 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னால் கைமாறிய லட்சங்கள் எவ்வளவு என்பது குறித்து யார் விசாரிப்பது? லஞ்சம் கொடுத்து அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் விலைக்கு வாங்கிய துணிவில்தான், முன் அனுமதி பெறாமல், உறுதியை சோதிக்காமல் பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட்டது அந்த நிறுவனம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதிகாரிகள் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குஜராத் மாநில அரசு, விபத்து குறித்து விசாரிக்க அய்ந்து பேர் குழுவை அமைத்திருக்கிறது. அந்தக் குழு, விபத்தின் காரணத்தை ஆராயுமே தவிர, அனுபவமில்லாத நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் பின்னணியை ஆராயாது. நிறுவன ஊழியர்கள் பொறுப்பாக்கப்படுவார்களே தவிர, மாநகராட்சி அதிகாரிகளும், அவர்களை இயக்கும் அரசியல்வாதிகளும் விசாரணை வளையத்துக் குள் வரமாட்டார்கள். இழப்பீடு வழங்கப்பட்டு, விபத்து மூடி மறைக்கப்பட்டுவிடும்.

இந்தியாவில் 12% நிலப்பரப்பு வெள்ளப் பெருக்கிற்கு  உள்ளாகிறது. ஆண்டுதோறும் 4.6 பில்லியன் டன் சரக்குகள் சாலை வழியாகவும், ரயில் மார்க்கமாகவும் கொண்டு செல்லப்படுகின்றன. 67,368 கி.மீ. ரயில் பாதையில் 1.47 லட்சம் பாலங்கள் இருக்கின்றன. அவற்றில் பல மோர்பி பாலம்போல நூற்றாண்டு கடந்தவை. சாலைகளிலும் பல பாலங்கள் பாதுகாப்பற்றவை. அவற்றின் பாதுகாப்பு குறித்து தொடர் கண்காணிப்பு இருக்கிறதா என்றால் - கிடையாது. விபத்து ஏற்பட்ட பிறகு விழித்துக் கொள்வதும், இழப்பீடு வழங்குவதும், விசாரணைக் குழு என்ற கண் துடைப்பும் தொடர்கின்றன.

உண்மையாக மக்கள் பயன்படுத்தும் பாலத்தை முறையாகக் கட்டிப் பராமரிக்கத் துப்பில்லாத பிஜேபி ஆட்சிதான், கற்பனையான ராமன் பாலத்திற்காக வரிந்து கட்டி நிற்கிறது.

இவர்கள் கூறும், பிரச்சாரம் செய்யும் - ராமன் பாலம் என்பது வெறும் மணல் திட்டுகளின் படிவங்களே! தென் பசிபிக் பெருங் கடலில் உள்ள தீவுகளிலும், மடகாஸ்கர், மொரீஷியஸ், ரீயூனியன் தீவுகளில் எல்லாம் இது சர்வ சாதாரணம். மக்களுக்குப் பயன்படும் உண்மைப் பாலத்தின்மீது அக்கறையில்லை. கற்பனை ராமன் பாலத்தின்மீது கரிசனம் என்பது அசல் அரசியல் - மத மவுடீகத்தின் மூலம் மக்களை ஏமாற்றும் அரசியலே!


No comments:

Post a Comment