அமெரிக்காவை முக்கிய தளமாக்கும் ஆர்.எஸ்.எஸ்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

அமெரிக்காவை முக்கிய தளமாக்கும் ஆர்.எஸ்.எஸ்!

ப.தெட்சிணாமூர்த்தி

"பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் இந்து சுயம்சேவக் சங் தனது கிளைகளைக் கொண்டிருந்தாலும் அமெ ரிக்காவையே மிக முக்கியத் தளமாக கொண்டிருப்பதுதான்  மனிதநேயப் பத்திரி கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள், கல்வியாளர்கள் போன் றோரை அச்சத்துடன் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் அதே வேளை யில்  ஆர்எஸ்எஸ், எச்எஸ்எஸ்ஸுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான் சிலும் உருவாகி வருகின்றன."

ஆர்எஸ்எஸ் அமைப்பின் சர்வதேச பிரிவான ஹெச்.எஸ்.எஸ் (ஹிந்து  சுயம்சேவக் சங்), “தர்மத்தின் மூலம் உலக அமைதியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்” எனக் கூறிக் கொள்கிறது. இந்தியாவிலிருந்து அய்ரோப்பா  மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 39 நாடுகளிலும் ஊடுருவி உள்ளது எச்எஸ்எஸ். இப்போது அமெரிக்கா முழுவதும் 34 மாநிலங்களில் உள்ளது, 171  நகரங்களில் 250க்கும் மேற்பட்ட கிளைகள் (ஷாகாஸ்)  எச்எஸ்எஸ்-க்கு உள்ளதாக அதன் 2020- 2021 ஆண்டறிக்கை கள்  கூறுகின்றன.  இந்து சுயம்சேவக் சங் அமெரிக்காவை தனது முதன்மை சர்வதேச அரசியல்  தளமாக இப்போது மாற்றியுள்ளது. அமெரிக்காவில் கிறித்துவ யூத  அமெரிக்கர் களோடு இந்து முஸ்லிம் அமெரிக்கர்களும்  வாழ்ந்து வருகின்றனர்.

இந்துத்துவா  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைக்  கொண்டு பாஜக ஆளும் இந்தியாவிற்குச் சாதகமான கொள்கை களை உருவாக்க அமெரிக்க நிர்வாகத்தை நிர்பந்திக்கும் மோசடி பேரக் குழுக்களை  (Lobbying groups) உருவாக்கவும், இவைகளில்  அமெரிக்காவில் செயல் படும் யூதக் குழுக்களின் வழிகளை  பின்பற்றவும்   தனது அமைப்பினருக்கு ஆர்எஸ்எஸ் ஏற்கனவே வழிகாட்டி யிருந்தது. அமெரிக்க நிருவாகத்தின் பல துறைகளில் ஊடுருவி செயல்படவும்  தாங்கள் விரும்பும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை  உருவாக் கிக்கொள்ளவும் இந்த ‘லாபி’ குழுக்கள் செயல்பட்டன. யூத அமெ ரிக்க மற்றும் இந்து  அமெரிக்க  தலைமைகளுக்கு இடையே வலுவான அரசியல் தொடர்புகளை வளர்ப்ப தில் யூதக் குழுக்கள் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இப்புரிதலின் தொடர்ச்சியில் யூத லாபிகள், இந்திய லாபிகளின் உருவாக்கம் மற்றும் வெற்றிக்கு தீவிரமாக ஆதரவளித்தன.

காவி அமைப்புகளுக்கு ஏராளமாகக் குவியும் நிதி!

பல்வேறு இனங்களில் அமெரிக்கக் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் இப்படிப்பட்ட லாபிக் குழுக்களுக்கு  2017 மற்றும் 2020-இன் இடைப்பட்ட காலத்திற்கு மட்டும் அதிகபட்ச சராசரியாக தலா ஒரு குழுவிற்கு  ரூ.44.98 லட்சம் வரை நரேந்திர மோடியின் அரசு அளித்து வந்துள்ளது.  அதேபோல கலிபோர்னியா மாநிலத்தின் பொதுப் பள்ளி வரலாற்றுப் பாடப் புத்தகங் களில் இந்து மதத்தைப் பற்றிய பாடப் பதிவுகளில் திருத்தங்களை (இந்தியாவில்  பள்ளி பாடப் புத்தகங்களில் வரலாற்றை  உல்டா செய்து பாஜக மாநிலங்களில் திருத்தியது  போல) கொண்டு வருவதற்கு 2012-2016 காலகட்டத்தில் 1,42,000 டாலர்களை  ஹிந்து சுயம்சேவக் சங்கம் செலவழித்தது.

இந்துத்துவாவின்   அமெரிக்க நிருவாக ஊடுருவல்களில்  இந்து அமெரிக்க லாபியிங் மற்றும் அதன்  ஒத்திசைவு வேலை களில் அமெரிக்க நிருவாகத்தில் காவி ஆதரவு ஆட்கள் இருந்தனர். (அமெரிக்க நாடாளு மன்ற  உறுப்பினர்களும்  எச்.எஸ்.எஸ்   ஆட்களுமான   ராஜாகிருஷ்ண மூர்த்தி, துளசி கப்பாட்,  ரோஹித்கன்னா உள்பட). இவர்களைப் போன்ற ஆதரவு ஆட்கள் மற்றும் இந்துத்துவா பிருகஸ்பதிகளின் கைங்கர்யத்தால்  இந்து சுவயம்சேவக் சங்கம்  பல சலுகைகளை அமெரிக்காவில் பெற்றது. அமெரிக்க சட்டத் தொகுப்பு 26 இன் பிரிவு 501(c)(3) இன் கீழ் எச்.எஸ்.எஸ் இலாப நோக்கற்ற தொண்டு அமைப்பாக  அறிவிக் கப்பட்டு  வருமான வரியிலிருந்து விலக்கு பெற்றதும் இதில் ஒன்றாகும். இதன் காரணமாக அமெரிக்க  காவி  அமைப்புகளு க்கு அங்கீகாரமும் ஏராளமான நிதியும் குவியத் தொடங்கியது. வருமான வரி  கணக்குகளின்படி (எச்.எஸ்.எஸ்.ஆல் காட்டப்பட்ட வருவாய் மட்டும்)  2019 ஆம் ஆண்டில்  மட்டும்  மொத்த வருவாய் 18,99,282 டாலர்.  2001-2019 க்கு இடையில், கிடைக்கக்கூடிய வரி அறிக்கைகளின்படி, அகில இந்திய இயக்கம் (கிமிவி), அமெரிக் காவின் ஏகல் வித்யாலயா அறக் கட்டளை, இந்திய வளர்ச்சி மற்றும் நிவாரண நிதி, பரம் சக்தி பிஒய்பி (PYP) யோகா அறக்கட்டளை, அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் (AVHP) மற்றும் சேவா இன்டர்நேஷனல்  ஆகிய  ஏழு காவி அமைப்புகள் குறைந்த மதிப்பீட்டில் 158.9 மில்லியன் டாலர்களை (ரூ.1,231.6 கோடிகள்) திரட்டி  அதில் பெரும்பகுதியை இந்தியாவில் உள்ள  இந்துத்துவா குழுக்களுக்கு   அனுப்பின.  

அமெரிக்க யூத - அமெரிக்க இந்துத்துவா - உறவு!

இச்சூழ்நிலைகளின்  தொடர்ச்சியில்தான் -அமெரிக்க இந்து  மற்றும் அமெரிக்க இஸ்ரேலிய-குழுக்கள் இடையில்  ஒற்று மையும் ஒன்றிணைந்து செயல்படும் சூழலும் உருவானது.  அமெரிக்க இந்திய  தொலை நோக்கு  உறவை ஆதரிக்கும்  இந்தியா மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கான அறக்கட்டளை(Foundation For India And Indian Diaspora Studies FIIDS)  என்னும்  அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட  அமைப்பு, வட கலிபோர்னியா சிலிகான் நகரில்  ஜூலை 2017- இல் இந்திய- இஸ்ரேல் உறவுகள் என்னும் கருத்தரங்கிற்கு  ஏற்பாடு செய்திருந்தது. அதில்   பேசிய யூத கூட்டமைப் பின் இயக்குநர் டயான் ஃபிஷர் இந்தியாவும் இஸ்ரேலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகை வழிநடத்தும் என்று கூறி னார். இந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் சவுமித்ரா கோகலே, இஸ்ரேல்- இந்தியா ஆகிய நாடுகள் மிகவும் பழமையான கலாச்சாரங்கள் கொண்ட  ஜனநாயக நாடுகள் என்று உண்மைக்குப் புறம்பாக வரலாற்றுக் கூச்சமின்றிக் கூறினார்.

அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு  ஆதரவான கியூபா-சீனா-பாலஸ்தீனத்திற்கு  எதிரான உணர்வு நிலையை அமெரிக்காவில்  உருவாக்கும் வேலையை அமெரிக்க  யூத- அமெரிக்க இந்துத்துவா சக்திகள் உரு வாக்கி வருவதையும்  இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்கா-இஸ்ரேல்-இடையிலான உறவுகள் ஆழமாகிக் கொண்டிருப்பதையும் காணமுடியும். இதன் தொலைநோக்கு வளர்ச்சியாக இந்தியா - இஸ்ரேல் -  அமெரிக்கா-அய்க்கிய அரபு அமீரகம் நாடுகளை  உள்ளடக்கிய ‘அய்2யு2’ அணி எனப்படும் ‘இந்தோ-ஆபிரகாமிக்’ கூட்டணி யாகும். மத்திய கிழக்கு மேற்காசிய-கிழக் காசியப் பிராந்தியங்களுக்கும்  இந்தக் கூட்டணி விரிவடையவிருப்பதாகவும் அதன் இப்போதைய நகர்வுகள் புலப் படுத்துகின்றன. இக்கூட்டணி உள்மறையில் சீனத்திற்கு எதிரான ‘நாற்கர பாதுகாப்பு கூட்டணி’ எனப்படும் (குவாட்-QUAD) ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே யான தொலைநோக்கு (மலபார் கடற்படை பயிற்சி உள்பட) கூட்டணியின் மற்றொரு பதிப்புதான் என்பதில் சந்தேகமில்லை. இந்த உறவுகளுக்கிடையே செல்லும்  ராஜதந்திர பிணைப்புக் கயிற்றின் ஒரு முனை நாக்பூர் என இத்தருணத்தில் உறுதியாக நாம் கூறலாம். நாஜி கோட்பாடு களின்படி, ஜெர்மானியர்களும் பிற வட அய்ரோப்பியர்க ளும்  “ஆரியர்கள்” - ஓர் உயர்ந்த இனமாகவும், மற்ற  அனைத்து தேசிய இனங்களும் தாழ்ந்த இனங்களாகவும் கருதப்பட்டன; யூதர்கள் முற்றிலும் ஆரியர்களின் கொடிய எதிரிகளாகவும் காணப்பட்டனர்.

எனவேதான் 1935-களிலும் அதற்கு பின்பும் ஜெர்மனியில்  இனத்  தூய்மை (Racial purity) செய்வதற்காக லட்சோப லட்சம் அய்ரோப்பிய யூதர்களை ஹிட்லர்  படுகொலை செய்தான்.  மார்க்சிசம், கம்யூனிசம், ஜனநாயகம் போன்ற வார்த்தை கள் மற்றும் அதன் இயக்கங்கள் தேசிய வாதத்திற்கு எதிரானவை என்றும், அவை அழிக்கப்பட வேண்டிய ஆபத்தான, இன அடிப்படை யிலான யூத “ஆவியை” பிரதிபலிப்பதாகவும் நாஜிக்கள் கருதினர். கூட்டிக் கழித்துப் பார்த்தால் யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள்தான்  தங்களின் தீர்மானகர மான எதிரிகளாக நாஜிகள் கருதினர். ஆர்எஸ்எஸ்ஸின் பிதாமகர்களான கே.பி.  ஹெட்கேவார், பி.எஸ். மூஞ்சே  ஆகியோர் இனத்தூய்மை மற்றும்  ஆரியத்தின் பெருமை பேசும்  உயர் இன  வெறி கொண்ட  ஹிட்லரை தங்களது  தத்துவார்த்த முன் மாதிரியாகக்  கண்டனர். ஆனால் அவர் களின் இன்றைய வாரிசுகள் அமெரிக்க யூதக் குழுக்களோடு இணைந்து அமெரிக்க நிழ லில் செயல்படுவது வரலாற்றின் விநோதம் என்பதோடு சர்வதேச அமைதியின்மையை உருவாக்கும் புதிய  பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்   என்பதில் சந்தேகமில்லை. சீனத் திற்கு  எதிராகத் தனது சர்வ தேச நாட்டாண் மையை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள ஜீவ மரணப் போராட்டம் நடத்தும் அமெரிக்கா வுடனும் அதன் நெருங்கிய முதல் கூட்டாளி யான இஸ்ரேலுடனும் ஆர்எஸ்எஸ் முழுமையாகக் கைகோத்துள்ளது. இதன் தொடர்ச்சியில்தான் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் இந்து யூத அமைப்புகளின் பங்களிப்புகள் இருந்தன.     

காவி அமைப்புகளின்  சூழ்ச்சியும் தந்திரமும்!

எச்.எஸ்.எஸ்சின் முக்கிய சூழ்ச்சிகளில் முதன்மையாக  இந்துக்கள் உள்பட அமெரிக்க மக்களை மனதளவில் கட்டிப் போடும் கலாச்சாரம், பண்பாடு, மதம் பற்றிய இந்துத்துவா சூழ்ச்சி அரசியலின் முதல் அத்தியாயக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துவது. சூரிய நமஸ்காரம், யோகா, தியானம் பயிற்சிகளை இந்துத்துவா கண்ணோட்டத்துடன் நடத்துவது, இலவச இந்திய முறை உணவு விநியோகம் மற்றும் சிறு சிறு தொண்டூழியங்களின்  மூலம்  இந்துத்துவா ஒரு வாழ்வியல் முறை என்றும்  எச்.எஸ்.எஸ் நலதர்ம வாழ்விற்கான தொண்டு நிறுவனமே என்னும் மாய்மாலத்  தோற்றத்தை உரு வாக்கிக் கொண்டு  தனது கிளைகளின் (ஷாகாஸ்) மூலம்  அமெரிக் காவில் தனது கால்களைப் பரப்பி, நிமிர முயற்சித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் இந்து சுயம்சேவக் சங் தனது கிளைகளைக் கொண்டிருந்தாலும் அமெ ரிக்காவையே மிக முக்கியத் தளமாக கொண்டிருப்பதுதான்  மனிதநேயப் பத்திரி கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள், கல்வியாளர்கள் போன் றோரை அச்சத்துடன் கவனிக்க வைத்துள்ளது. ஆனால் அதே வேளை யில்  ஆர்எஸ்எஸ், எச்எஸ்எஸ்ஸுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புகள் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான் சிலும் உருவாகி வருகின்றன.

காவிக் கம்பெனிகளுக்கு எதிரான இயக்கங்கள்

அமெரிக்க பத்திரிக்கையாளரும் மனித உரிமை போராளியுமான பீட்டர் பிரடெரிக். இவரது  அரசியல் அடித் தளத்தைப் பற்றிய சர்ச்சைகள் உருவாக்கப் பட்டாலும் அநேகமாக சர்வதேச அரங்கில் ஆர்எஸ்எஸ்-ஐ தோலுரித்து உலகிற்கு அம்பலப்படுத்திய முதல் பத்திரிக்கை யாளர் என இவரைக் கூறலாம். 6.2.2020 அன்று, அமெரிக்காவின் மும்பை துணைத் தூதரக கான்சல் ஜெனரல் டேவிட் ரான்ஸ், நாக்பூரில் உள்ள ஹெட்கேவார் நினை விடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியதை கண்டித்து கீழே கையொப்பமிடப்பட்ட நாங்கள், கான்சல் ஜெனரல் டேவிட் ரான்ஸ் பதவி விலக வேண்டும் அல்லது திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று  சமூக ஆர்வலர்களின் கையெழுத்துக்களை சேகரித்து அமெரிக்க அரசிற்கு அனுப்பினார் பீட்டர்.  19.2.2020 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மாணவர் கருத்தரங்கில்  மிகப்பெரும்  ஒளித்திரை  காட்சிகளோடு உரையாற்றிய பீட்டர் பிரெடெரிக், “1920-களில் மேற்கில் உள்ள பாசிசத்திற்கும் கிழக்கில், இந்துத்துவா தேசியவாதத்திற்கும் இடையிலான துவக்கம், தொடர்பு  ஒரே மாதிரியாக இருந்ததை”க் குறிப்பிட்டார். “ஆர்எஸ்எஸ்  நிறுவப்பட்ட அதே ஆண்டில் ஹிட்லர் ‘மெயின் கேம்ப்’-ஐ வெளியிட்டு  எஸ்எஸ் படை (நாஜிசத்தின்  இனப்படுகொலையை நிறைவேற்றிய  படை) துவங்கியதையும்  அதே சமகாலத்தில் ஆர்எஸ்எஸ் தனது துணை ராணுவப் படையை நிறுவியது என்பதையும் விவரித்த அவர், இந்துத்துவாவின் பிதாமகர்கள் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் வளர்ந்து வரும் பாசிச இயக்கங்களிலிருந்து கருத்தியல் உத்வேகம் பெற்றனர் - மேலும் நேரடி தொடர்புகளில் ஈடுபட்டனர்" என்றும் உரையாற்றினார். 

பிரெஞ்சு பத்திரிகையாளரும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினருமான கிளமென்ட்டைன் ஆடெய்ன், 23.3.2021 அன்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “அடால்ஃப் ஹிட்லரையும் பெனிட்டோ முசோலினி யையும் ஆர்எஸ்எஸ்-இன்  ஆரம்பகால தலைவர்கள் வெளிப்படையாகப் போற்றினர்; ஆர்எஸ்எஸ்  மதங்களுக்கு இடையிலான வெறுப்பைத் தூண்டுகிறது, வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறது” எனக் கூறினார். இந்தியாவுக்கான பிரெஞ்சு  தூதர் இம்மானுவேல் லெனைன்  9.2.2021  அன்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றது ஏன் என்று, பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் அவர் வினா எழுப்பினார். அரசு முறை  உறவுகள்  இல்லாத ஒரு அமைப்பான ஆர் எஸ் எஸ்- க்கும் பிரஞ்ச் அரசுக்கும்  இடையே உள்ள தொடர்பு என்ன என்பதையும்  “பிரெஞ்சு அதிகாரிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு இடையே வேறு சந்திப்புகள் ஏதேனும் உள்ளதா?” என்பதையும் அறிய விரும்புகிறேன் என்று பகிரங்கமாக கேள்வி கேட்டார்.   அந்த  பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் பெரும்பாலான  இந்திய பத்திரிக்கைகளில்   பிரசுரிக்கப்படவேயில்லை. 

டிராய் மாநகராட்சி மாமன்றத்தில்...

2021  செப்டம்பர்  இறுதியில் அமெரிக்காவின் ட்ராய்  நகர மேயர் பேக்கர், எச்எஸ்எஸ்-ஐ பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை எதிர்த்து 11.10.2021 அன்று பீட்டர் பிரடெரிக், ட்ராய் மேயர் பேக்கரின் மாமன்றத்தில் பல கேள்விகளை எழுப்பினார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே மாமன்றம், எச்எஸ்எஸ்-ஐ பாராட்டி அறிக்கை வெளியிட்டது, என்று மேயர் பேக்கரை நோக்கி  கம்பீரமாக துவங்கிய பீட்டர், “அமெரிக்காவில் செயல்படும் எச்எஸ்எஸ்- இந்திய ஆர்எஸ்எஸ்-இன்  சர்வதேச ஊதுகுழல்தான் என்பதும், ஆர்.எஸ்.எஸ்-சின்  இந்து ராஷ்டிராதான் அதன் இறுதி இலக்கு என்பதும், அதில் இந்துக்கள் அல்லாதவர்கள் ஒழிக்கப்படு வார்கள்  என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தனது இந்துத்துவா திட்டங்களுக்காக இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள் மீது ஆர்எஸ்எஸ்  நடத்திய  இனப்படுகொலைகளைப் பற்றி  உங்களுக்குத் தெரியுமா? ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினர் மகாத்மா காந்தியை படுகொலை செய்தார் என்பதும்  அந்தக் கொலையாளியை புகழ்ந்து ஆர்எஸ்எஸ் ஆட்கள் விழா எடுத்ததும் உங்களுக்குத் தெரியுமா? ஆர்எஸ்எஸ்-க்கு ஐரோப்பிய பாசிஸ்ட்டுகளான ஹிட்லர், முசோலினிதான் வழிகாட்டிகளாக  கருதப் பட்டவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார். 

சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), தேசிய எழுத்தாளர்கள் சங்கம் (NWU)- ஆகியவற்றைச் சேர்ந்தவரும் ‘அமெரிக்கா தி அப்சர்வர்’ இதழின் தலைமைச் செய் தியாளருமான விஜயலட்சுமி நாடார்  பேசும்போது, “நாஜி களால் ஈர்க்கப்பட்ட வலதுசாரி துணை ராணுவக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸின் தயாரிப்புதான்  நரேந்திர மோடி. இந்துவாக பிறந்து அமெரிக் காவில் வசிக்கும் நான்  மோடி அரசின்  கபட  விளையாட் டுகளை  வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்; இந்தியா  இன்று ஆழ்ந்த சிக்கலில் உள்ளது. சர்வாதிகார ஆட்சியால் இந்தியா அரிக்கப்பட்டு வருகிறது.   இது புறக்கணிக்கப்பட்டால், அது இந்தியா, ஆசியா, ஐரோப்பா மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்க அரசியலின், ஒவ்வொரு நிலையிலும் காங்கிரஸ் மற்றும் செனட்டிலும் எச்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது“ என்றார்.  அடுத்தடுத்து அக்கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம் எச்எஸ்எஸ் மற்றும் ஆர்எஸ்எஸ்-சின் உண்மை நோக்கங்களைப் பற்றி எச்சரித்தனர். விவாதத்தின் முடிவில், ஆர்.எஸ்.எஸ்-ஆல்  இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகள் பற்றிய தகவல் அறிவு இல்லாததைக் கண்டு நான் திகைத்துள்ளேன். எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன்” என  மேயர் பேக்கர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. 

அமெரிக்க ஐரோப்பிய  நாடுகளில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான  போராட்டங்கள், பொதுவெளியில் நடைபெற்ற வாதங்கள் இந்திய ஊடகங்களில் முழுமையாக பேசப் படுவதில்லை. ஆர்எஸ்எஸ்-க்கு சாதக மாகவே இச்செய்திகள் ஒரு கட்டுக்குள் எப்போதாவது பிரசுரிக்கப்படுகின்றன. கலிபோர்னியாவின் மாண்டெகா மாநகர மன்றம், "மனிதகுலத்திற்கான ஆரோக்கியம் - யோகா 2022" என்ற இந்து சுயம் சேவக் சங்-நிகழ்ச்சியைப்   பாராட்டி ஒரு நகர பிரகடனத்தை 18.1.2022  அன்று வெளியிட் டிருந்தது. இதைக் கண்டித்து, அந்த பிரகடனத்தை திரும்பப்பெற வேண்டும் என 19.7.2022 அன்று மாநகர மன்றத்திற்கு எதிரே ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர்கள், “ஆர்எஸ்எஸ்-அய் தடுத்து நிறுத்து; எச்எஸ்எஸ் அமெரிக்காவை விட்டு வெளியேறு” எனப் பதாகைகளைத் தாங்கி போராட்டம் நடத்தினர். பார்வையாளர்களால் நிரம்பி வழிந்த மாண்டெகா மாமன்ற அவையில் உரையாற்றியவர்கள் அனைவரும் எச்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ்-ஐ அம்பலப்படுத்தி 18.1.2022 பிரகடனத்தை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து எச்எஸ்எஸ்-ஐ பாராட்டிய அந்த பிரகடனம்  ரத்து செய்யப்பட்டது. மேலும்  இதனால் புண்படுத்தப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் மாண்டெகா நகரம் விரும்புகிறது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

கடந்த  ஆகஸ்ட் 14 அன்று, நியூஜெர்சி மாகாணம் எடிசன் நகரில் நடந்த இந்திய சுதந்திர தின அணிவகுப்பில், இந்தியாவில் முஸ்லிம்களின் வீடுகளை இடித்ததன் அடையாளமாக  நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தின் படங்களுடன் “டாடி புல்டோசர்” என்று எழுதப்பட்ட புல்டோசருடன் காவி குழுக்களின் குண்டாந்தடி சேவக்குகள் ஊர்வலம் நடத்தினர். வெறுப்பரசியலின் வெட்கக் கேடானதும் அருவருப்பானதுமான இச்செயலை நியூஜெர்சி மக்கள் வெறுத்து கண்டித்தனர். ஆளும் ஜனநாயகக் கட்சியின் நியூஜெர்சி முனிசிபல் பிரிவு (டிடிஎம்சி) தறிகெட்டு திரியும் இந்த இந்துத்துவா குழுக்களை கண்டித்து அந்நிய வெறுப்புக் குழுக்கள் என்று முத்திரை குத்தி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தில் இந்துத்துவா குழுக்கள் மீது எப்பிஐ மற்றும் சிஐஏ விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தது.

“அட்லாண்டா, சிகாகோ, சார்லோட், ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோ, சியாட்டில் மற்றும் மெட்டா நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியா ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் மாத விடுமுறைகளில் பெரும் எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் கூடி, பேஸ்புக் பாசிசத்தை செயல்படுத்துகிறது  என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி, இந்தியாவில் வெளியிடப்பட்ட வெறுக்கத் தக்க பாசிச பேச்சுக்களை சுதந்திரமாக அனுமதிக்கும் பேஸ்புக்கிற்கு  எதிர்ப்புத் தெரிவித்ததோடு  தீவிர இந்துத்துவா  வலதுசாரி வன்முறைத் தூண்டுதலுக்கு” ​​உடனடி முடிவு கட்ட வேண்டும் என்று கோரினர்.  

ஹூஸ்டனில் நடைபெற்ற போராட்டத்தில், இந்தியாவில் வெறுப்பை பரப்பும் ஒரு மூர்க்கத்தனமான கருவியாக பேஸ்புக் மாறி வருகிறது; இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியின் பாரதிய ஜனதா கட்சி யின்  கருத்தியல் மூல அமைப்பு ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் மற்றும் அவற்றின் ஆயுதமேந்திய துணை அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகளை ஆபத்தான மற்றும் பயங்கரவாத அமைப்புகளாக டெக் டைட்டான் (பேஸ்புக்)  அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். 

ஆர்எஸ்எஸ் அரசியலின் நயவஞ்சக வடிவம்தான் இந்துத்துவா

அமெரிக்க வரலாற்றில்  முதன்முறையாக, ஹார்வர்டு, ஸ்டான்ஃபோர்டு மற்றும் பிரின்ஸ்டன் உட்பட 50- க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் துறைகள் மற்றும் மையங்களின் அனுசரணையுடன்  ஒன்றி ணைந்து இந்துத்துவா பற்றிய மிகப்பெரும் மூன்று நாள் ஆன்லைன் மாநாட்டை (10.9.2021 - 12.9.2021) கிழக்கு நேர மண்டல (ET) நேரம் முற்பகல் 9.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை நடத்த ஏற்பாடு செய்திருந்தன. “உலகளாவிய இந்துத்துவாவை அம்பலப் படுத்துதல்” என்ற அம்மாநாடு இந்தியாவிலும் பிற இடங்களிலும் உள்ள இந்து மேலாதிக்க சித்தாந்தம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை விவாதித்தது. கருத்துச் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் பாசிச இந்துத்துவா கம்பெனிகள் இம்மாநாட்டை தடுத்து நிறுத்த  உலகமெங்கும்  சகல வழிகளிலும்  பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டன. லட்சோப லட்சம் மிரட்டல் மின்னஞ்சல்கள் பல்கலைக்கழகங்களுக்கும் மாநாட்டு பங்கேற்பாளர்களுக்கும் அனுப்பப் பட்டன.  இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தனது நான்கு வயது குழந்தைக்கு கொலை மிரட்டல் வந்தது என்ற அதிர்ச்சியூட்டும் தகவலோடு லட்சக் கணக்கான அம்மாநாட்டின்  திரைகளில் இந்திய எழுத்தாளர்  மீனா கந்தசாமி தோன்றினார். “சனாதன தர்மத்திலிருந்து  சங் பரிவாரம் வரை- இந்துத்துவாவின் அரசியல் பரிணாமம்” என்ற  தலைப்பில் உரையாற்றிய அவர் காவி அமைப்புகளின் மிரட்டல்களை தனது உரைத் துவக்கத்திலேயே அம்பலப் படுத்தினார். அம்மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று அனைவருக்கும் மிரட்டல்கள் வந்தன என்ற உண்மைகள்  பங்கேற்பாளர்கள் மூலம் வெடித்து வெளியே வந்தன. உலகம் முழுவதிலுமிருந்து 937 கல்வியாளர்கள், மாநாட்டிற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிட்டனர்  “அமெரிக்கா, ஐரோப்பா அல்லது உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களில்  இந்துத்துவா துணை அமைப்புகளால் நடத்தப்படும் மிரட்டல் பிரச்சாரத்தை அனுமதிக்க முடியாது. பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சர்வதேச அரங்கில் இந்துத்துவா பாசிசத்தைப் பற்றிய  ஆய்வுகளின்  முடிவுகள், கருத்துக்கள்  முழுமையான கருத்தியல் வடிவம் பெறுவதற்கும் இக்காலகட்டத்தின் பொதுக் கருத்தை பிரகடனப்படுத்துவதற்கும் வழி காட்டியாக அம்மாநாடு அமைந்திருந்தது. 

1925-களில் ஐரோப்பாவில் தோன்றி விசுவரூபம் எடுத்த    ஹிட்லரின் நாஜி பூதத்தை  ஒத்த கொடூர பாசிச இயல்புகளோடு   ஆர் எஸ் எஸ்- ஆசிய கண்டத்தில் மையங் கொண்டு விரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரும் பயங்கரவாத இயக்கமாகவும் இன்று மாறிவருகிறது. இந்துத்துவா என்பது  வாழ்வியல் முறையல்ல; 21ஆம் நூற்றாண்டின் மனித குலத்திற்கு எதிரான ஆர்எஸ்எஸ்  மதவெறி அரசியலின் சக்திவாய்ந்த, நயவஞ்சக வடிவமாகும் என்ற கருத்து பல நாடுகளிலும் பரவியும்  வருகிறது.   இது  மனிதகுல முன்னேற்றத்தை அமைதியான வாழ்வியலின்  மாண்புகளை நேசிக்கும் அனைவருக்கும் நிறைவளிப்பதாகும்.

நன்றி: "தீக்கதிர்" (28,29-10-2022)


No comments:

Post a Comment