‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை கவிதைகளில் பக்கம் பக்கமாக வடித்திருக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை கவிதைகளில் பக்கம் பக்கமாக வடித்திருக்கிறார்

பெரியார்தான் வள்ளுவர் - வள்ளுவர்தான் 

பெரியார் என்று பறைசாற்றுகிறார்!

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' 

நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை


சென்னை,அக்.4  ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை களை கவிதைகளில் பக்கம் பக்கமாக வடித்திருக்கிறார்; பெரியார்தான் வள்ளுவர் - வள்ளுவர்தான் பெரியார் என்று பறைசாற்றுகிறார் நூலாசிரியர் பேராசிரியர் 

அ.செகதீசன் அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும்வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழா

நேற்று (3.10.2022) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பேராசிரி யர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள் ளுவம்'' நூலினை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரை வருமாறு:

உருவத்தால் - உணர்வால் எப்பொழுதும் இருக்கிறார் பேராசிரியர்!

மிகுந்த மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக் கூடிய ஒப்பற்ற இனமானப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி ஏற்கெனவே ஓர் இனமானப் பேராசிரியரை இந்த நாட்டிற்கு அளித்தது. அந்த இனமானப் பேராசிரியர் இல்லையே, உருவத்தால் - உணர்வால் எப்பொழுதும் இருக்கிறார் என்பதற்குச் சான்றாக, உருவத்தால் இல்லையே என்ற அந்த ஏக்கத்தை நீக்கக் கூடிய அளவிற்கு, இதோ இருக்கிறேன், அதே பச்சையப்பன் கல்லூரி தந்த மாணவனாக, மு.வ. விடம், பேராசிரியர் அன்பழகனிடம், இன்னுங்கேட்டால், நம்முடைய ஆசான் ஞானசம்பந்தத்திடம், புலவர் அன்புகணபதியிடம் இப்படி எல்லோரிடமும் பெற்ற ஒரு வாய்ப்பு என்பதற்கேற்ப பேராசிரியர் அ.செகதீசன் ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்ற தலைப்பில் தந்துள்ள இந்நூலினை, ஓர் அருமையான ஓர் ஒப்பற்ற காவியம் என்று சொல்லவேண்டும்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை கவிதைகளில் பக்கம் பக்கமாக வடித்திருக்கிறார்

பெரியாரைப்பற்றிய, வள்ளுவத்தைப்பற்றிய ஓவியம் தீட்டினார் கலைஞர்.

புலவர் குழந்தையைப்போல,  பேராசிரியர் செகதீசன் அவர்கள் காவியம் தீட்டினார். ஆனால், காவியத்தில் பழைமை இல்லை. அதிலே ஒப்பற்ற ‘திராவிட மாடல்' ஆட்சி என்று உலகம் விழித்துக் கொண்டு பார்க்கக்கூடிய அந்த எடுத்துக்காட்டான ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளை கவிதைகளில் பக்கம் பக்கமாக வடித்திருக்கிறார்.

தந்தை பெரியார் அவர்களைப்பற்றி ஏராள மாகப் பேசியிருக்கிறார்கள். பெரியார் உலகத்தில் 95 அடி உயர சிலையும், அதற்கு 60 அடி பீடமும் எப்படி அமையப் போகின்றது என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, பல்வேறு செய்திகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

புரட்சிக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் எழுச்சித் தமிழர்!

இவ்வளவு செய்திகளும் அற்புதமான செய்திகள். இங்கு அவ்வளவு அருமையான செய்திகளையும் விளக்கி, மிகப்பெரிய அளவிற்கு இந்த நூலினுடைய சிறப்புகள் எப்படியெல்லாம் இலக்கண இலக்கியத்தோடு, கவிதை நயத்தோடு, கருத்தியல் தத்துவத்தோடு, இன்றைய காலகட்டத்தையொட்டி, ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' அமைந்திருக்கின்றது என்பதை - முது பெரும் புலவர் அய்யா பேராசிரியர் ஜெகதீசனார் அவர்கள் எப்படி எழுதியிருக்கிறார் என்பதை அருமை யாக விளக்கி, அந்த நூல் மட்டும் முக்கியமல்ல; நூல் களால் இன்றைக்கு ஏற்படுகிற ஆபத்துகள் எப்படிப் பட்டவை என்பதையும் மிக அருமையாக எழுச்சித் தமிழர் அவர்கள் இங்கே வந்து புரட்சிக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்.

ஏராளமான தொலைக்காட்சி, ஊடக நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் எதை எதிர்பார்த்து வந்தார்களோ, அதற்குரிய நல்ல தீனி கிடைத்திருக்கிறது. பொதுவாக அண்மைக்காலத்தில், எழுச்சித் தமிழர் எங்கு பேசினாலும், அதற்கடுத்து நான் பேசக்கூடிய வகையில், என்னுடைய உரையை வழமையாகத் தொடங்கக் கூடிய ஒரு முறை என்னவென்று சொன் னால், அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன் என்று சொல்வதுதான் எப்பொழுதும் வழக்கம்.

மூன்றாவது குழல்  துப்பாக்கி!

இன்றைய கூட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. மாறுபட்டதல்ல. அதுமட்டுமல்ல, நல்ல மாணவர்கள், ஒழுங்காகப் படித்தவர்கள் பெரியாரியத்தை, அம்பேத் கரியத்தை, சமூக நீதியை, ஜாதி ஒழிப்பை தெளிவாகப் படித்தவர்கள் யாராக இருந்தாலும், கணக்கைக் கூட்டினால், இரண்டும் இரண்டும் நான்கு என்று தான் வரும். அதுபோல, யார் கூட்டினாலும் நான்குதான் வரும். அதுபோல, நல்ல கருத்தை யார் சொல்லுகிறார்கள் என்பது முக்கியமல்ல; மிக அருமையாக எடுத்துச் சொல்லிவிட்டார். இதற்குமேல் அதற்கு விளக்கம் தேவையேயில்லை. அந்த அளவிற்கு அவர்கள் ஆழமாக எடுத்துச் சொன்னார், அருமை எழுச்சித் தமிழர் அவர்கள்.

இதுவரை அண்ணா அவர்கள் காலத்தில், கலைஞர் காலத்தில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்கள்; விடுதலைச் சிறுத்தைகள் இணைந்த பிறகு, இன்றைக்கு மூன்றாவது குழல்  துப்பாக்கி என்று சொல்கிறோம் - அந்தக் குழல் வெடித்துக்கொண்டே இருக்கும்.

நீங்கள் சொத்தைகளாக இருப்பீர்களே தவிர, உங்கள் வித்தைகள் இங்கு ஒருபோதும் பலிக்காது!

யாரும் முன்னாலே நின்று, சனாதனம் என்ற முறையில் இதை சமாளிக்கலாம் என்று நினைக் காதீர்கள் - சனாதனம் இதை சமாளிக்க முடியாது. மற்ற இடங்களில் உங்கள் வித்தைகள் பலிக்கும்; ஆனால், இது தமிழ் மண் - பெரியார் மண் - நீங்கள் சொத்தைகளாக இருப்பீர்களே தவிர, உங்கள் வித்தைகள் இங்கு ஒருபோதும் பலிக்காது; பலிக்க விட மாட்டோம்; பலிக்க மக்கள் விடமாட்டார்கள்.

அதைத்தான் அவருடைய உரையின்மூலமாக இங்கே ஆழமாக எடுத்துக்கூறிய அருமை எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

சிறப்பாக இங்கே வரவேற்புரையாற்றிய இசைக் கலைஞர் சுகனேஸ்வரன் அவர்களே,

தமிழ்த் துறை தலைவர் நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் அவர்களே,

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆய்வு மய்யத்தின் இயக்குநர் - இன்றைக்குப் பத்திரிகை தலைப்புகளில் அடிக்கடி இடம்பெறக்கூடிய சேலம் பல்கலைக் கழகத்தினுடைய துறை இயக்குநர் பேராசிரியர் சுப்ரமணி அவர்களே,

கவிமாமணி குமரி செழியன் அவர்களே,

‘விடுதலை’க்கு 88 -  பேராசிரியர் செகதீசன் அவர்களுக்கும் 88

‘விடுதலை'க்கு 88 ஆண்டு எப்படியோ, அதுபோலத் தான் பேராசிரியர் செகதீசன் அவர்களும் 88 ஆவது ஆண்டிலே இருக்கிறார்.

எனவே, நான் 88-களோடு பழகிக் கொண்டிருக் கின்றேன். நானும் - 88-ம் பிரிக்க முடியாத அளவிற்கு இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நேரிலே பழகியிருந்தாலும், பழகாவிட்டாலும் அந்த இணைப்பாக இருக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றி ருக்கும் அய்யா ஜெகதீசனார் அவர்களே, அவருடைய அன்பு மகளார், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் - மக்களின் வழக்கு மொழியில் சொல்லவேண்டுமானால், ஓய்வு பெற்ற தாசில்தார் அவர். ஓர் அம்மையார் - அதுவே பெரியாருடைய கொள்கையின் வெற்றி அல்லவா!

இந்நிகழ்ச்சியை சிறப்பான வகையில் ஏற்பாடு செய்த அவரது மகள் செ.திருமாமணி என்றைக்கும்  அவருக்கு உற்ற துணையாக, எல்லா வகையிலும் பெருமையாக இருந்து வருகிறார்.

இப்படி வந்திருக்கக் கூடிய நண்பர்கள் - இன்னும் ஏராளமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், திராவிடர் கழகத்தினர், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருக்கக்கூடிய தோழர்கள் ஏராளமாக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை தனித்தனியாக விளிக்காவிட்டாலும், விளித்ததாகக் கொள்ளவேண்டும். 

நண்பர்களே, ஊடகவியலாளர்களான தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார்தான் வள்ளுவர் - வள்ளுவர்தான் பெரியார்!

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்ற தலைப் பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில் நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறார் பேராசிரியர் செகதீசனார் அவர்கள்.

கவிதைகளை எழுதுவதில்கூட, வள்ளுவரு டைய புரட்சி தேவைப்பட்டு இருக்கிறது; புரட்சி வென்று இருக்கிறது.

முடிக்கும்பொழுது அழகாக சொல்லியிருக் கிறார், பெரியார்தான் வள்ளுவர் - வள்ளுவர்தான் பெரியார்!

பெரியார் அவர்கள் எந்த அளவிற்கு வள்ளுவத்தில் ஈடுபாடு கொண்டார் என்பதற்கு ஒன்றை மட்டும் சொல்லுகிறேன்.

‘‘பெரியார் களஞ்சியம்'' என்ற தலைப்பில் பல தொகுதிகளை வெளியிட்டு இருக்கிறோம் நாங்கள்.

அதில், வள்ளுவத்தைப்பற்றி, வள்ளுவரைப்பற்றி ஆய்வு செய்தவர் - தனித்தன்மையோடு பார்த்தவர் - பகுத்தறிவு சிந்தனையோடு பார்த்தவர் - ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் பல கருத்துகளை - மற்றவர்கள் சிந்திக்க முடியாத எல்லைக்குச் சென்று சிந்தித்தவர் தந்தை பெரியார் அவர்கள் என்பதும் விளக்கப்பட் டுள்ளது.

புலவர்கள் வீட்டு அலமாரிக்குள் இருந்த திருக்குறளுக்கு விடுதலை தந்தவர் தந்தை பெரியார்!

1946- 1948 அந்தக் காலகட்டத்தில், ஒரு முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு - திருவள்ளுவருடைய திருக்குறள், புலவர்கள் வீட்டின் புத்தக அலமாரிக் குள்தான்  பூட்டி அடைபட்டுக் கிடந்தது.

புத்தக அலமாரிக்குள்ளே, புலவர்கள் மத்தியில் மட்டும் விவாதத்திற்குரிய ஒன்றாக இருந்து - பரி மேலழகர் உரையை மட்டும்தான் சொல்லவேண் டும் என்று சொன்ன ஒரு காலகட்டம் தாண்டி, அந்த வள்ளுவருக்கு விடுதலை தந்து, இன்றைக்கு எல்லோரும் மனிதநேயத்தோடு எழுதக்கூடிய அளவிற்கு வரக்கூடிய அந்த அளவிற்கு வந்து, இன்றைக்கு உலகளாவிய நிலையிலே அதற்குப் பெருமை இருக்கின்றது. இங்கே தமிழ்நாட்டில், தமிழர்கள் நம்முடைய மக்கள் அதைப் புரிந்து கொள்ள முடியாத சூழல் இருந்தபோது, அதற்காக சென்னையில் இரண்டு நாள் மாநாடு கூட்டி - குறள் மாநாடு கூட்டி - திருக்குறளை அச்சிட்டு, மக்கள் மத்தியில் 5 அணாவுக்குப் பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள்.

அதற்குக் காரணம் என்ன என்று சொன்னால் நண்பர்களே,  ஒரே அடிப்படைதான். 

ஜாதி ஒழிப்பு, சமத்துவம், சமூகநீதி இவையெல்லாம் தந்தை பெரியார் இயக்கத்தினுடைய கொள்கைகள்.

பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவருடைய கொள்கையும் அதுதான்.

தந்தை பெரியாரின் குறள் மாநாடு!

வள்ளுவருடைய குறள், வள்ளுவருடைய தத்துவம், வள்ளுவருடைய சிந்தனை அதைத்தான் பொறுத்தது என்பதை அப்படியே மய்யப்படுத்தித்தான் அய்யா அவர்கள் குறள் மாநாடு போட்டார்கள்.

அதற்கு ஒரே வரியில் விளக்கம் சொல்லவேண்டு மானால், ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்ற இந்தப் புத்தகத்தைப் பரப்பவேண்டும்.

இன்றைய நடப்பு வரையில் பேராசிரியர் அவர்கள் அருமையாக எழுதியிருக்கின்ற இந்த நேரத்தில், எது தவிர்க்கப்படவேண்டும்; எது போராட்டக் களத்திலே நின்று கொண்டிருக்கிறது?

தவிர்க்கப்பட வேண்டிய மனுதர்ம சாஸ்திரம் நின்று கொண்டிருக்கிறது.

சில பேர் எழுதுகிறார்கள், சில பார்ப்பன ஏடுகள் எழுதுகின்றன - சகோதரர் ஆ.இராசா அவர்கள் பேசிய பேச்சை நாங்கள் எல்லாம் ஆதரித்துப் பேசுகிறோம் என்று சொன்னால், ஒரே பள்ளிக்கூடம் மட்டுமல்ல, சமத்துவத்தில் எங்களுக்கு இருக்கிற நம்பிக்கை, ஜாதி ஒழிப்பில் எங்களுக்கு இருக்கிற போராட்டக் களம் - ஆகவே அதனைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

அதைத்தானே இங்கே சுட்டிக்காட்டினார் என்னு டைய அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமா அவர்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

இதில் வருணாசிரமத்திற்கு ஏது இடம்?

அதனால்தான் மனோன்மணியம் சுந்தரனார் அவர் கள் அழகாக நான்கே வரியில், வள்ளுவரை, திருக்குறளை  தெளிவாக இளைஞர்களுக்கு, இன்றைய உலகுக்குப் படம் பிடித்துக் காட்டினார்.

“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்

உள்ளுவரோ மனுவாதி யொரு குலத்திற் கொருநீதி.”

மறுவற வள்ளுவரை உணர்ந்தவர்

இன்றைக்கு ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்ற தலைப்புக் கொடுத்து எழுதியிருக்கின்றார் என்றால், பேராசிரியர் அ.செகதீசன் மறுவற வள்ளுவரை உணர்ந்தவர்.

வள்ளுவரை உணந்தவர்கள் எல்லோரும் சரியான வர்கள் அல்ல. மறுவற என்பதுதான் முக்கியம்.

இரண்டு தத்துவங்களுக்குப் போராட்டம்.

ஒருவன் உயர்ந்தவனாகப் பிறந்தான் - உயர்ந்த வனாகவே வாழவேண்டும் - உயர்ந்தவனாகவே சாகவேண்டும்.

இன்னொரு சாரார் தாழ்ந்தவனாகவே பிறப்பிக்கப் பட்டார். அவன் தானாக பிறக்கவில்லை. கடவுளே அப்படித்தான் உண்டாக்கியிருக்கிறார். 

ஏன் கடவுளிடம் போனான்; மனிதனால் செய்யப் பட்டது என்றால், அதை சுலபமாக மாற்றி விடுவார்கள் என்பதால்தான். கடவுளே செய்தார் என்று சொன்ன வுடன், அதை மாற்ற முடியாது என்கிறார்கள்.

(தொடரும்)


No comments:

Post a Comment