காவிரி டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழு ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

காவிரி டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழு ஆய்வு

 தஞ்சாவூர், அக்.16- காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஒன்றியக் குழுவினர் நேற்று (15.10.2022) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தில் 22 விழுக்காடு வரை தளர்வு அளிக்க வேண்டும் என்று ஒன்றியக் குழுவினரிடம், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

டெல்டா மாவட்டங்களின் வேளாண் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், குறுவை அறுவடையும் முன்கூட்டியே தொடங்கியது. இதையடுத்து, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 17 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நெல் மூட்டைகளை விற்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் அதிகம் தேங்கியிருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து, 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலிக்குமாறு, தமிழ்நாடு உணவுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், தமிழ்நாடு அரசின் டில்லிப் பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், ஒன்றிய உணவுத் துறைச் செயலரைச் சந்தித்து, 22 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய அனுமதிக் கும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றியக் குழுவினர் நேற்று (15.10.2022) தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தனர்.

இக்குழுவில் இடம் பெற்றுள்ள ஒன்றிய உணவுக் கழகத்தின் அய்தராபாத் உணவுத் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கான், சென்னை உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தொழில்நுட்ப அதிகாரி சி.யூனுஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தரக் கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர் இ.செந்தில், பொது மேலாளர் அய்.மகாலட்சுமி ஆகியோர் தஞ்சாவூர் வண்ணை நகரில் உள்ள கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர். நெல் மாதிரிகளை சேகரித்துக் கொண்டதுடன், விவசாயிகளின் கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

மேலும், ஒன்றியக் குழுவினரிடம், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள், நெல் ஈரப்பதம் தொடர்பாக விளக்கினர்.

தொடர்ந்து, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக் குடி, சடையார்கோவில், பொன்னாப்பூரில் உள்ள கொள்முதல் நிலையங்களிலும் ஒன்றியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தற்போது சேகரிக்கப்படும் நெல் மாதிரிகளை இந்திய உணவுக் கழக ஆய்வகத்தில் பரிசோதித்து, அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசு முடிவு எடுக்கும்‌ என்று ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகேயுள்ள பூவாநத்தம், முன்னாவல்கோட்டை, செரு மங்கலம், ஓவர்சேரி, திருப்பத்தூர், ஆலத்தம்பாடி பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நிரந்தரத் தளர்வு அவசியம்:

"ஒவ்வோர் ஆண்டும் ராபி பருவத்தில் குறுவை அறுவடையின்போது மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து இருக்கும். எனவே, ஈரப்பதத்தின் அளவை நிரந்தரமாக 22 விழுக்காடு வரை தளர்த்தி ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும்" என்று தஞ்சாவூர் விவசாயிகள் ஒன்றியக் குழுவினரிடம் நேற்று (15.10.2022) கோரிக்கை விடுத்தனர். இதேபோல, திருவாரூர் விவசாயிகள், ‘‘நெல் ஈரப்பதம் தொடர்பாக ஆண்டுதோறும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, ஈரப்பத அளவை நிரந்தரமாக உயர்த்த வேண்டும். அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் நெல்லை உலர்த்த உரிய கருவிகளை வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகளை ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு காணப்படும் என்று ஒன்றியக் குழுவினர் உறுதி அளித்தனர்.


No comments:

Post a Comment