நூலைப் பெற்றுக்கொண்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

நூலைப் பெற்றுக்கொண்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை

 ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் - பெரியார் பார்வை கொண்ட நூல்!  பெரியாரின் பிள்ளை - பெரியாரின் கருத்தியல் வாரிசான தமிழர் தலைவர் ஆசிரியர் இந்நூலை வெளியிட்டிருப்பது சிறப்பு!

சென்னை,அக்.8 பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்''  நூல் பெரியார் பார்வை கொண்ட நூல் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் பெரியாரின் பிள்ளை - பெரியாரின் கருத்தியல் வாரிசு - பெரியாரின் ‘ஞான வாரிசு’  - வாழும் பெரியாரான நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் இந்நூலை வெளியிட்டு இருப்பது என்பது சிறப்பு என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய 

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழா

கடந்த 3.10.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பேராசிரியர் அ.செகதீசன் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' நூல் வெளியீட்டு விழாவில், நூலைப் பெற்றுக்கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது  சிறப்புரை வருமாறு:

பேராசிரியர் செகதீசன் அவர்கள் எழுதிய ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்னும் இந்த அரிய நூலை வெளியிட்டு, நம்மிடையே நிறைவாக சிறப்புரையாற்ற விருக்கின்ற தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களே,

அனைவரையும் வரவேற்று சிறப்பித்திருக்கின்ற இசைக்கலைஞர் சுகனேசுவரன் அவர்களே,

வாழ்த்துரை வழங்கி, இந்நிகழ்விற்குச் சிறப்பு சேர்த் திருக்கின்ற பேராசிரியர் இரா.சுப்பிரமணியன் அவர் களே, கவிமாமணி முனைவர் குமரி செழியன் அவர் களே, பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் அவர்களே, நன்றியுரையாற்றவிருக்கின்ற ஆரியூர் திருமதி 

செ.திருமாமணி அவர்களே,

மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஓர் அரிய வாய்ப்பு எனக்கு!

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்ற இந்த நூலை, தமிழர் தலைவர் அவர்களின் கைகளிலிருந்து பெற்றுக் கொள்கின்ற ஓர் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய, பேராசிரியர் செகதீசன் அவர்களுக்கும், அவருடைய அருமை மகள் திருமாமணி அவர்களுக்கும், பதிப்பகத் தாருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் காணிக்கையாக்குகின்றேன்.

சில நாள்களுக்கு முன்பு என்னுடைய அலுவலகத் திற்கு வந்து இந்தப் புத்தகத்தைத் தந்தார்கள். இந்நகிழ்வில் பங்கேற்கவேண்டும் என்று சொன்னார்கள்.

தமிழர் தலைவர் அவர்கள் வெளியிட இசைவளித் திருக்கிறார். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் அந் நிகழ்வில் பங்கேற்கவிருக்கின்றார் என்ற தகவல்களை யெல்லாம் சொன்னார்கள்.

கவிஞர், சற்று உடல்நலிவு ஏற்பட்டதினால், வர இயலவில்லை என்பதை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் சொன்னார்கள்.

அருள்மொழி அவர்களும் பங்கேற்பதாக இருந்தது, அவருக்கும் சற்று உடல் நலிவு.

ஆகவே, இந்த நிகழ்வில் பங்கேற்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

இந்நூல் ஒரு புதிய முயற்சி!

‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' வழக்கம்போல, பொழிப்புரையாக்கம்போல் இல்லாமல், ஒரு புதிய முயற்சி.

இது செய்யுளாக வடிக்கப்பட்டு இருக்கிறது. செய் யுளுக்குச் செய்யுள்; வெண்பாவுக்கு விருத்தப்பா! விருத்தம் என்றால், விரிவாக்கம் -விரிவான பா வகை.

ஈரடியில் குறளை வள்ளுவன் தந்தான் - அதை விரித்து, விவரித்து, அதைப் பா வகையில் வடித்து, தமிழ்ச் சமூகத்திற்கு ஒப்படைத்திருக்கிறார் பேராசிரியர் அ.செகதீசன் அவர்கள்.

வியப்பு நமக்கு மேலிடுகிறது

வள்ளுவனின் இந்தத் திருக்குறளுக்கு இன்னும் எத்தனை எத்தனை பேர் எழுதப் போகிறார்களோ? என்ற வியப்பு நமக்கு மேலிடுகிறது.

‘‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்'' என்று சொல்வார்களே, அப்படி ஒவ்வொரு நாளும் திருக் குறளுக்கு விளக்கவுரை - தெளிவுரை - பொழிப் புரை என்று பலரும் படைத்துக்கொண்டே இருக் கிறார்கள்.

தமிழில் மட்டுமல்ல, உலகின் பல மொழிகளில் மொழி யாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உலகமே கொண் டாடக்கூடிய அறிவுச் செல்வமாக - ஞானப் புதையலாக - மானுட வாழ்வியல் நெறிமுறையாக வள்ளுவம் விளங்குகிறது.

மனித குலத்திற்கு என்ன தேவை என்பதை இன்னும் பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் பொருந்தக் கூடிய வகையில், பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னால் வரக்கூடிய வாரிசுகளும் வியக்கக்கூடிய வகையில், பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னால், சான்றோரும் இதற்கு விளக்கவுரை எழுதக்கூடிய வகையில், ஒரு சிறப்புக்குரிய நூலாக இது படைக்கப்பட்டு இருக்கிறது.

வள்ளுவம், தமிழினத்திற்கு மட்டுமல்ல - 

மனித குலத்திற்கே பொதுவானது

இந்த வள்ளுவம், தமிழினத்திற்கு மட்டுமல்ல - மனித குலத்திற்கே பொதுவானது.

இதில் ஒரு குறிப்பிட்ட அடையாளம் எங்கும் பொறிக்கப்படவில்லை. 

இது தமிழனுக்கு உரியது; அல்லது ஒரு மதத்தைச் சார்ந்தவனுக்கு உரியது. அல்லது ஒரு நாட்டைச் சார்ந்தவனுக்கு உரியது. அல்லது ஒரு ஜாதிக்கு உரியது என்கிற அடையாள வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தத்துவ நூல்.

மனித குல வாழ்விற்கு வழிகாட்டும் ஒரு மகத்தான படைப்பு திருக்குறள்.

இதற்கு நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் தெளிவுரை எழுதியிருக்கிறார். மு.வ. அவர்களின் உரையும் நமக்குத் தெரியும்.

மு.வ. எழுதியது போதும் என்று மு.க. அவர்கள் (நம்முடைய கலைஞர்) அமைதியாக இல்லை. அவரும் திருக்குறளுக்குத் தெளிவுரை எழுதவேண்டும் என்ற முனைப்பைப் பெற்று, அதற்காக உரை எழுதியது மட்டு மல்லாமல், சில பாக்களுக்கு குறளோவியமும் தீட்டி யிருக்கிறார்.

அவ்வளவு பெருமைக்குரிய ஒரு நூல் - உலகப் பொதுமறை என்று போற்றப்படக் கூடிய நூல். ‘‘வாழும் வரைக்கும் வள்ளுவம்'' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

யார் வாழும் வரைக்கும்?

மனிதர்கள் போய்விடுவோம்; 

மனித குலம் இருந்துகொண்டே இருக்கும்

மனித குலத்திற்கு முற்றுப்புள்ளியே கிடையாது. மனித குலம் ஒரு குறிப்பிட்ட நாளில், ஒட்டுமொத்தமாக அழிந்து போகும் என்று சொல்ல முடியாது. மனித குலம் இருந்துகொண்டே இருக்கும். மனிதர்கள் போய்விடு வோம்; ஆனால், மனித குலம் இருந்துகொண்டே இருக்கும். 

ஆக, மனிதகுலம் வாழ்ந்துகொண்டே இருக்கும். அப்படியென்றால், வள்ளுவமும் வாழ்ந்துகொண்டே இருக்கும்.

பேராசிரியர் செகதீசன் வாழும் வரைக்கும் வள் ளுவம் என்பதல்ல; தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வாழும் வரைக்கும் வள்ளுவம் என்பதல்ல; திருமாவள வன் வாழும் வரைக்கும் வள்ளுவம் என்பதல்ல.

மனிதகுலம் வாழும் வரைக்கும் வள்ளுவம். அப் படித்தான் அதற்குப் பொருள் புரிந்துகொள்ளவேண்டும்.

மனித குலம் வாழும் வரைக்கும் 

வள்ளுவம் தேவைப்படுகிறது

தமிழன் வாழும் வரைக்கும் வள்ளுவம் என்பதல்ல; மனிதகுலம் வாழும் வரைக்கும் வள்ளுவம் என்றால், எந்த மொழி பேசுகின்ற மனிதனாக இருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றுகின்ற மனிதனாக இருந்தாலும், எந்தத் தேசத்தில் வாழுகின்ற மனிதனாக இருந்தாலும், மனித குலம் வாழும் வரைக்கும் வள்ளுவம் தேவைப் படுகிறது.

வள்ளுவம் வழிகாட்டும் -

வள்ளுவம் மனிதகுலத்தை மேம்படுத்தும் -

வள்ளுவம் மனித மாண்புகளைப் போதிக்கும் -

வள்ளுவம் மனித குல மாண்புகளிலேயே உயர்ந்தது மனிதநேயம் என்பதை உணர்த்தும்.

சூரியன் மிக உயரத்தில் இருக்கிறது; அல்லது நிலா மிக உயரத்தில் இருக்கிறது. அதனால், அதில் என்ன ஒரு சிறப்பு என்றால், உலகத்தில் உள்ள எந்த மனிதர்கள் வேண்டுமானாலும், அவன் படுத்துக் கிடக்கின்ற இடத்திலிருந்து அண்ணாந்து பார்த்தால், ‘நிலா எனக்கு நேராக இருக்கிறது' என்று சொல்வான். என் வீட்டிற்கு மேலே இருக்கிறது என்று சொல்வான்.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் மாடியில் படுத்துப் பாருங்கள்; அல்லது வீட்டு வாசலில் நின்று அண்ணாந்து பாருங்கள், நாம் நிற்கிற இடத்தை நோக்கி, நமக்கு நேராக இருப்பதுபோல் தோன்றும்; நமக்குப் பக்கத்தில் இருப்பதுபோல் தோன்றும். அதுபோல், உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும், அது தனக்கு அருகில் இருப்பதைப்போல் தோன்றும். ஏனென்றால், அது தொட முடியாத தூரத்தில் இருப்பதால். அப்படி வள்ளுவம் எல்லோருக்குமானதாகத் தோன்றும்; ஏனென்றால், அது தொட முடியாத உயரத்தை - அந்தத் தத்துவத்தைக் கொண்டிருக்கிறது.

பைபிள் என்றால் கிறித்தவர்கள் மட்டும் வைத்துக் கொள்வார்கள்;

குரான் என்றால், இஸ்லாமியர்கள் மட்டும் வைத்துக் கொள்வார்கள்.

பகவத் கீதை என்றால், இந்துக்கள் மட்டும் எங்களுக்கு உரியது என்பார்கள்.

காலத்தால் மாறாத ஒரே தன்மை கொண்ட- 

ஒரே பண்பைக் கொண்டது திருக்குறள்

அப்படி எங்களுக்கு உரியது என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியினர் சொல்ல முடியாத அளவிற்கு, இதன் உள்ளீடு - உள்ளடக்கம் - ‘கண்டண்ட்' (Content) அவ்வளவு உயரியதாக இருக்கிறது. பொதுமையானதாக இருக்கிறது; புதுமையானதாகவும் இருக்கிறது.

காலத்தால் பல சொற்கள் காணாமல் போகும் -

காலத்தால் பல சொற்கள் பொருளிழந்து போகும் -

காலத்தால் சில சொற்களுக்குப் பொருளே மாறிப் போகும்-

காலத்தால் நமது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்!

காலத்தால் பண்பாட்டில் மாற்றங்கள் நிகழும்!

காலத்தால் உணவு முறையில் மாற்றம் நிகழும்!

காலத்தால் ஏற்றுக்கொண்ட மதத்தின்மீதான நம்பிக் கையில் மாற்றம் நிகழும்.

காலத்தால், வழிபடுகிற கடவுளைக்கூட மாற்றிக் கொள்வோம்!

காலத்தால் மாறாத ஒரே தன்மை கொண்டது, ஒரே பண்பைக் கொண்டது திருக்குறள்.

எந்தக் காலத்திலும் இதன் பொருள் மாறாது; எந்தக் காலத்திலும் உள்ளீடு, உள்ளடக்கம் மாறாது.

அதாவது எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிற பொருளைத் தரும்.

மாறாது என்றால், அது மாறாததுதான். யாரும் அதனு டைய எழுத்தை மாற்றப் போவதில்லை. ஆனால், எப்பொழுதும், எல்லாக் காலத்திற்கும் அது பொருந்தும்.

மனிதன் மாறிக் கொண்டே இருந்தாலும், மனிதனுக் கான வாழ்வியல் தத்துவம் என்பது ஒன்றுதான்.

பொதுமைதான், நேர்மைதான், தூய்மைதான், வாய்மைதான். அதைச் சொல்லுகிற உயரிய நூல்தான் திருக்குறள்.

ஆகவே, அதனை எளிய மக்கள் கற்கின்ற அளவிற்கு, இதைத் தெளிவுரையாக எழுதாமல், விருத்தப் பாவில் அவர் எழுதியிருப்பதற்கு, காரணத்தைச் சொல்லுகிறார்.

‘பா' வகையில் இந்நூல் எழுதப்பட்டு இருப்பதால், எல்லோராலும் படித்துப் புரிந்துகொள்ள இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், அவரே அதற்கும் விளக்க வுரை அல்லது தெளிவுரை எழுதவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

இது விருத்தப் பாவாகவே இருப்பதால், எல்லோராலும் இதை எடுத்துக்கொள்ள இயலாது.

வேறு எவரும் செய்யாத ஒரு முயற்சி

என்னிடம் இப்பொழுது கொடுக்கப்பட்ட துண்டுச் சீட்டில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், குறளுக்கு வெறும் பொருள் எழுதக் கூடியதாக இல்லை. வள்ளுவத்தை அடிப்படையாகக் கொண்ட விளக்க உரைதான் விருத்தப்பாவில் இருக்கிறது. நடப்பு அரசியல், நடப்புச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து எழுதியி ருக்கிறார். ஆகவே, இது புது முயற்சி. வேறு எவரும் செய்யாத ஒரு முயற்சி.

நடப்பு அரசியலை கையில் கொண்டு, வள்ளுவம் என்கிற சாற்றை எடுத்து, அதிலிருந்து மருத்துவம் செய்வதற்கான மருந்தை நமக்குத் தருகிறார்.

நடப்பு அரசியல், நடப்புச் சிக்கல், நடப்பு தகவல்கள் என்பதை எப்படி புரிந்துகொள்ளுவது என்கிற ஒரு பார்வையும் இருக்கிறது.

பேராசிரியர் அய்யா அவர்கள் இந்த நூலை வேறு எங்கேயாவது வெளியிட்டு இருந்தால், அதை நாம் படிக்காமலேயே புரிந்துகொள்ளலாம்.

பெரியார் பார்வை கொண்ட நூல்!

பெரியார் திடலில் இந்நூலை வெளியிட்டு இருக்கிறார் என்றால், இது பெரியார் பார்வை கொண்ட நூல் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அதுவும் பெரியாரின் பிள்ளை - பெரியாரின் கருத்தியல் வாரிசு - பெரியாரின் ‘ஞான வாரிசு'  - வாழும் பெரியாரான நம்முடைய தமிழர் 

தலைவர் அவர்கள் இந்நூலை வெளியிட்டு இருக்கிறார்.

அதைத்தான் அவர்கள் இங்கே உறுதிப் படுத்துகின்றார்.  பெரியாரின் வாரிசு என்றுகூட சொல்லவேண்டாம் - பெரியார்தான்!

ஏமாந்தால், நமக்கும் காவித் துணியைப் 

போட்டு விடுவார்கள்

ஆக, பெரியார் பார்வை கொண்டு வள்ளுவத்தைப் புரிந்துகொள்வது. நடப்பு அரசியலைப் பொருத்திப் பார்ப்பது. 

சில பேர் திருவள்ளுவருக்குப் பூணூல் போட்டுப் பார்க்கிறார்கள்; சில பேர் காவி உடை உடுத்திப் பார்க்கிறார்கள். ஏதோ அவர்களுக்கு ஆசை. ஏமாந்தால், நமக்கும் காவித் துணியைப் போட்டு விடுவார்கள்.

அண்ணா சிலைக்கே காவித் துணியைப் போட்டு மூடிப் பார்க்கிறார்கள். பெரியாருக்கே காவிச் சாயத்தைப் பூசினார்கள்.  பெரியார் காவியை நாடிப் போயிருந்தால், சங்கராச்சாரிகளுக்கு இருக்கைகள் இருந்திருக்காது. அந்த இடத்தை அவர் கைப்பற்றி இருப்பார். ஆனால், அதுவல்ல பெரியாரின் இலக்கு.

பெரியார் அவர்கள் ஓர் ஆன்மிகக் குடும்பத்திலிருந்து பிறந்தவர்தான்!

அவரே, ஓர் ஆன்மிகக் குடும்பத்திலிருந்து பிறந்த வர்தான்; கடவுள் நம்பிக்கை உள்ள குடும்பத்திலிருந்து பிறந்தவர்தான். அதுதான் வியப்பிலும் வியப்பு.

பல கோவில்களுக்குத் தர்ம கர்த்தாவாக இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர். அவரே தர்ம கர்த்தாவாகவும் இருந்திருக்கிறார்.

ஒரு நல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்; வறுமையில் பிறந்தவர் அல்ல.                (தொடரும்)


No comments:

Post a Comment