நாடெங்கும் நடக்கட்டும் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

நாடெங்கும் நடக்கட்டும் கருத்தரங்கம்

'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' (ஆசிரியர் எழுதிய நூல்)

கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

"ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்ட நூல் (2021) ஓராண்டுக்குள் பத்துப் பதிப்புகளைத் தாண்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களின் கரங்களில் சேர்ந்துள்ளது - உள்ளத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8.10.2022 அன்று சென்னையில் கூடிய திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் முடுக்கி விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அறிவார்ந்த பே(£)ராயுதமாக நமக்குக்   கிடைத்திருப்பது இந்நூல். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால்  - நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் அறிவாயுதம்!

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் எடுத்த முடிவின்படி, பிரச்சாரக் கூட்டங்களை வேகமாக முடுக்கி விடும் வகையில்

- இந்த நூலின் மீதான  கருத்தரங்கத்தை - நூல் அறிமுகம் என்கிற தன்மையில் மண்டபங்களில் திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் நடத்த வேண்டும். ஒத்த  கருத்துள்ள சிந்தனையாளர்களையும் பங்கு பெறச் செய்ய வேண்டும். 

நூலின் சில பகுதிகள் உங்கள் முன்....

 அருமைத் தோழர்களே!

நமது அடுத்த கட்டப் பணி, சித்தாந்த ரீதியாக நமது மூர்க்க எதிரியான ஆர்.எஸ்.எஸின் வேரை நிர்மூலப் படுத்துவதாகும்.

இன்னும் எளிதாகக் கூற வேண்டும் எனில், திராவிடத்தின் எதிரியான ஆரியத்தின் மறுபெயர்தான் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸின் கொள்கை என்ன? அதை அவரின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கரே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

அதனை நமது ஆசிரியர் "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" எனும் நூலின் முதல் அத்தியாயத்தில் எடுத்துக்காட்டியுள்ளார் (பக்கம் 20, 21)

"வருண தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல; குணத்தின் அடிப்படையில்தான்" - என்று இப்பொழுதெல்லாம் சிலர் 'சாமர்த்தியமாக' குறுக்கு சால் ஓட்டுவதற்கு - மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியாரின் கூற்றை ("தெய்வத்தின் குரல்" முதல் பாகம் பக்கம் 1001-1003) எடுத்துக்காட்டி கோணல் புத்திக்காரர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

வருணத்தையும் கடந்து தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர்  மறைந்த அதே 'பெரியவாள்'தான் (சிறீஜெகத் குருவின் உபதேசங்கள் - இரண்டாம் பாகம்)

பாலக்காட்டில் தீண்டாமை தொடர்பாக காந்தியார் அதே சங்கராச்சாரியாரைச் சந்தித்து உரையாடியபோது - (16.10.1927).

"ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில், சாஸ்திரங் களையும், பழைய வழக்கங்களையும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்றே தாம் முடிவுக்கு வர வேண்டியிருக்கின்றது" என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித்தார். (ஆதாரம்: "தமிழ்நாட்டில் காந்தி" - பக்கம் 575 - 576)

"ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை" எனும் நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் தலைப்பு : "ஹிந்து ஒற்றுமை".

ஆர்.எஸ்.எஸ். கூறும் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தல், ஒரே ரேசன் கார்டு என்று கூறி, வேகமாகச் செயல்படும் இந்த ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் தலைமை "மக்கள் அனைவரும் ஒரே ஜாதி - அனைவரும் சமம் - இனி மேல் ஜாதிக்கு இங்கே இடமில்லை என்று சட்டம் மூலம் பிரகடனப்படுத்த ஏன் தயாராக இல்லை?" என்ற நம் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை?" (நூல் பக்கம் 32). என்ற நமது தலைவர் ஆசிரியரின் 'அதிரடி' "அக்மார்க்" கேள்விக்கு ஏன் பதில் இல்லை? ஏன் பதில் இல்லை?"

இந்தப் பகுதியை நமது கழகச் சொற்பொழிவாளர்கள் உரக்க உரக்கக் கூவுங்கள்! கூவுங்கள்!! இளைஞர்களின் இதயத்தில் இக்கேள்வி வேர்ப்பிடித்து கனிமரமாய்ச் சிலிர்க்கும்!

இந்நூலின் மூன்றாம் அத்தியாயம் "சமூகநீதி".

பார்ப்பனர்களை அடையாளம் காண வேண்டுமானால், காவிகளை அடையாளம் காண வேண்டுமானால், சமூகநீதி - இடஒதுக்கீடு என்னும் ஒரு புள்ளியைத் தொட்டு அவர்கள்முன் வையுங்கள் பார்க்கலாம்... ஆசாமி இடத்தைக் காலி செய்து வெகு நேரமாயிருக்கும்.

மண்டல் பரிந்துரையை அமல்படுத்திய பிரதமர் மாண்புமிகு வி.பி.சிங் ஆட்சிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு, சமூகநீதி ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் என்பது ஆதாரத்தோடு பக்கம் 30,39) எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

நூலில் 4ஆம் அத்தியாயம் "விவேகானந்தர்"

"பெரிய முற்போக்குவாதி என்பது போல் தூக்கி நிறுத்தி சிம்மாசனத்தில் அமர வைக்கப்படும் விவேகானந்தர் எத்தகைய ஜாதி நம்பிக்கையும் கோத்திர ஈடுபாடும் கொண்டவர் என்பது இந்தப் பகுதியில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது.

"சுதேசி" என்னும் 5ஆம் அத்தியாயம் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியில் கொண்டு வந்து கொட்டியுள்ளது.

13 வயதில் ஆர்.எஸ்.எஸில் தன்னை இணைத்துக் கொண்ட பன்வர் மெக்வன்சி - அந்த அமைப்பிலிருந்து வெளி வந்தது ஏன்? என்பதை அறியும் போது குருதி கொதிக்கிறது.

இராணுவப் பயிற்சி எல்லாம் பெற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு ஆர்.எஸ்.எஸில் பணியாற்றிய அவர் அதிலிருந்து வெளியேறியதற்குக் காரணம் என்ன தெரியுமா?

அவர் உயர் ஜாதிக்காரர் அல்லர்; தலித் என்பதுதான். பத்திரிகையாளராக வலம் வரும் இவர் - இது குறித்துத் தனி நூலே எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸின் முகத்திரை கிழிந்து தொங்கவில்லையா?

ஆறாவது அத்தியாயம் "எல்லோரும் இந்துக்கள்; சங்பரிவார் அமைப்புகளின் ஜாதிப் பாகுபாடும் தீண்டாமையும்" என்பதாகும்.

இதோ ஒரு புள்ளி விவரம் பொட்டில் அடித்தபடி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதீய பிரதிநிதித்துவ சபா என்ற தலைமைப் பீடத்தின் அமைப்பில் மொத்தம் உள்ள 36 பேர்கள் பற்றிய விவரம்:

பார்ப்பனர்கள் 26 பேர், பனியாக்கள் 5 பேர், மற்ற ஜாதிக்காரர்கள் 3 பேர், பார்ப்பனரல்லாதார் - சூத்திரர்கள் - 2 பேர்

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளுக்கோ - மற்ற சிறுபான்மையினருக்கோ இடம் கிடையாது. தெரிந்து கொள்வீர் ஆர்.எஸ்.எஸை!

ஏழாம் அத்தியாயம்: "அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். அணியும் புதிய முகமூடி" என்பதாகும்.

இதில் ஒரு திடுக்கிடும் தகவல்... அதுவும் ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கரின் நேர்காணலில் பின்னித் தெறிப்பது -

நான்கு அடுக்கு வர்ண ஜாதி நடைமுறையைப் பற்றி விவாதித்திருந்தார் சங்கராச்சாரியார் போன்றதொரு மதத் தலைவர். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு மாலை சூட்டி அவரைத் தழுவிக் கொண்டு தீண்டாமை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறியிருந்தார் - இப்படியொரு "சுனாமி" போன்ற தகவல் இந்நூலில்.

எட்டாவது அத்தியாயத்தில் (நானும் ஓ.பி.சி.) நரேந்திர மோடி- சமூகநீதியில் எப்படி அக்கறை அற்றவராக இருந்தார் என்பதற்கான ஆதாரம்.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்களில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டவரல்லர் மோடி - என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸின் தேச பக்தி என்ன? அத்தியாயம் 9

இந்தியா ஒரே நாடாம். அந்நியன் பிளவுபடுத்தி விட்டானாம். இந்த ஒப்பாரியை இன்றைக்கு நேற்றல்ல - நெடுங்காலமாகவே பாடி வருவதை இந்த அத்தியாயம் வெளிப்படுத்துகிறது.

'திராவிடம்' என்பது திணிக்கப்பட்டதல்ல - அது உண்மை வரலாறு என்பதற்கான ஆதாரங்களை அடுக்கியுள்ளார் ஆசிரியர்.

தமிழ்நாடு பெரியார் மண் - திராவிட மண் - சமூகநீதி மண் என்பதை எப்படியாவது மாற்றி பல்வேறு உத்திகளையும், வித்தைகளையும் கை முதலாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. என்ற 'ஆரியத்தின் அரசியல் வடிவம் இறங்கி யுள்ளது.

வீரத்தால் வெல்ல முடியாதபோது, வஞ்சகத்தை ஒப்பனை மூலம் அரங்கேற்றி - சூது, சூழ்ச்சி மூலம் விஷ உருண்டைக்குத் தேன் தடவிக் கொடுப்பது - அவர்களின் வாடிக்கை - என்பதைப் பத்தாவது அத்தியாயம் அம்பலப்படுத்துகிறது.

தமிழ்நாட்டு மக்களின் மொழி உணர்வைத் தங்களுக்குச் சாதகமாக்கிட என்னென்ன தந்திரங்களைக் கையாளு கிறார்கள் என்பதைப் பட்டியலிட்ட ஆசிரியர், தமிழ் மீது உண்மையான ஆர்வமும், அக்கறையும் இருக்குமானால், திருக்குறளை தேசிய  நூலாகப் பிரகடனப்படுத்தலாமே! என்ற ஒரு கிடுக்கிப்பிடியைப் போட்டுள்ளார் "மொழி" என்ற 10ஆம் அத்தியாயத்தில்.

சேவை, டாலர், உண்டியல் என்னும் பெயரில் வெளி நாடுகளிலிருந்து பெறும் கொள்ளைப் பட்டியல் இடப்பட்டுள்ளது.

12ஆம் அத்தியாயம் - "சனாதனக்காப்பு" என்பதாகும். எப்படி எப்படியெல்லாம் வன்முறைப் பயிற்சி ஆர்.எஸ்.எஸ். வகையறா பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படுகிறது என்பதை "ஷேடோ ஆர்மிஸ்" எனும் நூல் அம்பலப்படுத்தி யுள்ளதை 'விடுதலை' ஆசிரியர் 12ஆம் அத்தியாயத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

சமூக சீர்திருத்தவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம். கல்புர்கி போன்றவர்கள் படுகொலை களுக்குப் பின்புலத்தில் பல்வேறு முகமூடிகளில் உலவும் சக்திகள் யாவை என்பதைக் கடைசி அத்தியாயத்தில் கணக்குக் காட்டியுள்ளார்.

மதவெறியர்களால் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தபோல்கரின்" இந்து மதத்தை மட்டுமா எதிர்க்கிறோம்?" என்ற பின்னிணைப்புடன் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய 'ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' என்னும் நூல் முற்றுப் பெறுகிறது.

கரோனா காலம் மனிதர்களை முடக்கியது என்றாலும், நமது ஆசிரியர் அவர்களைப் பொறுத்தவரை, அதையும் பயனுள்ள காலமாக மாற்றியதில் நமது தலைவர் ஆசிரியருக்கே உரித்த தனித்தன்மை.

அந்தக் கால கட்டத்தில்அடைகாத்து பொரிக்கப்பட்ட நூல்தான் இந்நூல்.

ஆரியத்தின் வஞ்சகத்தை அதன் பல்வேறு வடிவ சூழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் ஒரு களஞ்சியமாகும் - அரிதின் முயன்று சேகரிக்கப்பட்ட கருவூல மாகும்.

'நூல் அறிமுக விழா' என்ற பெயரில் நாடெங்கும் திராவிடர் கழகம்  -பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட நமது அமைப்புகள் ஒத்த கருத்துள்ளவர்களையும் சொற்பொழி வாற்ற அழைத்து நூலின் நோக்கத்தை நிறைவேற்றுவோமாக.

ஆர்.எஸ்.எஸ். அபாய தொற்று நோயை முறியடிப்போம் - முனைவீர் தோழர்களே!


No comments:

Post a Comment